Saturday 27 April 2024

புதுவை இளம் எழுத்தாளர் அரிசங்கர் கௌரவிக்கப்பட்டார்.

 தேதி 27.04.2024



எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல்  மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியில் நடைபெறுகிறது.  கடந்த 7 ஆண்டுகளாக 'புதுவை வெண்முரசு கூடுகை' என்ற வாசகர் குழுவால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. கலந்துரையாடல் மட்டுமல்லாது எழுத்தாளர்கள் சந்திப்பு, நூல் அறிமுகம், புதிய வாசகர்களுக்காக பயிற்சி முதலிய இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை புதுவை வெண்முரசு கூடுகை ஒருங்கிணைக்கிறது.  எழுத்தாளர் ஜெயமோகன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு முதல் புதுவையை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவரை கௌரவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் மாத கூடுகையில் (26.4.24) புதுவையை சேர்ந்த எழுத்தாளர் அரிசங்கர் படைப்புகள் குறித்து உரையாடல் நிகழ்ந்தது. 

அரிசங்கர் பாரீஸ். உண்மைகள் பொய்கள் கற்பனைகள், மாகே கஃபே ஆகிய நாவல்களும், மாயப்படகு என்ற சிறுவர் நாவலும் பக்கார்டி என்னும் குறுநாவலும் எழுதியிருக்கிறார்.  இவரது சிறுகதை தொகுப்புகள் உடல், பதிலடி. ஏமாளி, சப்தங்கள் ஆகியவை தற்போது அரிசங்கர் சிறுகதைகள் என்ற தொகுப்பாகவும் கிடைக்கின்றன. தொடர்ந்து புதுச்சேரியை தனது எழுத்தில் முன் வைப்பதாகவும்  எளிய மனிதர்களின் உலகத்தை அதன் அனைத்து நிஜங்களுடன் கதைகளில் காட்டும்படியாகவும் இவரது கதையுலகம் அமைந்துள்ளது. அரிசங்கர் நண்பர்களுடன் இணைந்து நவீன இலக்கியத்திற்கான பனை என்ற வாசகர் வட்டம் ஒன்றையும் புதுவையில் நடத்தி வருகிறார்.  

அரிசங்கரது சமீபத்திய நாவலான மாகே கஃபே குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. அரிசங்கருக்கான பரிசை வெண்முரசு கூடுகை  வாசகி திருமதி அமிர்தவல்லி அவர்கள் வழங்கினார், மூத்த வாசகர் திரு விஜயன் பொன் துகில் போர்த்தினார். அரிசங்கர் தனது ஏற்புரையில் புதுவையில் நவீன இலக்கியம் சார்ந்த தேவைகள் குறித்து பேசினார். இந்நிகழ்வுக்கு பிறகு மாதாந்திர வெண்முரசு கூடுகை துவங்கியது வெண்முரசு காண்டீபம் நாவலின் ஐந்து முகத்தழல் பகுதி குறித்து நண்பர் சிவராமன் பேசினார், அதன்பிறகு கூடுகை நண்பர்கள் அனைவரும் அப்பகுதி மீதான தங்கள் பார்வையை முன்வைத்து உரையாடினர்.  



Friday 10 February 2023

வெண்முகிலில் வாழ்தல், கடலூர் சீனு






 இனிய ஜெயம்

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக வெண்முகில் நகரத்தில் வாழ்ந்தோம். இறுதி பகுதி குறித்து ஆஞ்சேநேய ஜெயந்தி அன்று உரையாடினோம்.  உண்மையில் இந்த நாவல் திரௌபதி நீராடி, தொய்யில் எழுதி, அணிபூண்டு அன்னையை திரும்பிக் கூட பார்க்காமல் நகர்வலம் சென்று, சுயவரம் காணும் போதே துவங்கி விடுகிறது. அஸ்தினாபுரி அரியணையில் துரியனும் கர்ணனும் வாளேந்தி பக்கம் நிற்க அவள் அமர்வது வரை வந்து முழுமை கொள்ளும் நாவல் இது.

இன்று திருப்பூர் சென்னை என்று இரண்டு இடங்களில் இருந்து உங்கள் வாசகிகள் அழைத்து வெண்முரசு முற்றோதல் இன்றுடன் நிறைவு கண்டதை சொன்னார்கள். இருவருக்குமே இலக்கியம் புதிது. எந்த தயக்கமும் தடையும் இன்றி தினமும் வாசித்து (சந்தேக நிவர்த்திக்கு கடலூர் சீனு) முடித்திருக்கிறார்.

இந்த நாவலின் இறுதி பகுதிகளை பேசிய அமிர்த வல்லி அவர்களுக்கும் இலக்கிய முன் வாசிப்பு என ஏதும் இல்லை. தமிழை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டாம் மொழியாக  கற்ற அளவு மட்டுமே தொடர்பு கொண்டவர். இறுதி அத்யாய உளவியல் நுட்பங்கள் உணர்வுகள் அனைத்தையும் தேர்ந்த ரசனையுடன் தொட்டு விரித்து உரையாடினார்.   (வாசகருக்கான மாலை சிற்றுண்டியும் அவரே கொண்டு வந்து விட்டார்).

அம்பை பித்து கொண்டு திரிந்த நாட்களை விவாதித்தது எங்கோ போன ஜென்ம நினைவு போல இருக்க, இதோ அஸ்தினாபுரி துறைமுகத்தில் நூறு மணப்பெண்கள் நகர் நுழைய காத்து நிற்கின்றனர். நீர்ச் சுடரில் ஒவ்வொருவராக விழுந்து மாயப்போகும் கங்கை.

இந்த நாவல் நேற்று வாசித்து முடித்தாலும், இதோ இக்கணம் வரை திருதா கொண்ட துயரம் உள்ளே உறுத்திக்கொண்டே இருக்கிறது. விழியற்றவன் அறியும் உண்மை என்ற ஒன்று உண்டு. பிரத்யட்சமோ அனுமானமோ ஊகமோ வழி என அமைந்த உண்மை அல்ல அது. ‘நான் அறிவேன்’ எனும் நிலையில் உள்ளே அமைத்த முற்ற முழுதான உண்மை. எல்லாவற்றையும் அவன் அந்தக கண் கொண்டு பார்த்து விட்டான். இனி அவன் பார்த்த காட்சி அவன் நிகர் வாழ்வில் வந்து சேரும் வரை அவன் காத்திருக்க வேண்டும். வெறுமனே காத்திருக்க மட்டுமே அவனால் முடியும். எதையுமே அவனால் மாற்ற முடியாது. எத்தனை பெரிய துயர்.

நாங்கள் இங்கே இப்போது இந்த உணர்வில் கிடக்கிறோம். உங்களைக் கேட்டால் இது எல்லாம் நான் என்றோ கண்டு முடித்து கடந்த கனவு என்று பதில் சொல்வீர்கள். இன்னும் நெடுந்தொலைவு உள்ளது நாங்கள் முதலாவிண் காண. இடையே உள்ளது யுகம் யுகம் என்று நீளும் நூறு நூறு வாழ்வு.

கடலூர் சீனு


Sunday 5 February 2023

புதுவை வெண்முரசு கூடுகை. இலக்கியக்கலை ஒரு நாள் முகாம் ….சில தருணங்கள்

 













இலக்கிய கலை ஒருநாள் முகாம்….தாமரைக்கண்ணன் காஞ்சிபுரம் , சூர்யப்ரகாஷ் பிச்சுமணி மதுரை

 

, https://www.jeyamohan.in/179630/


வணக்கம்


தங்கள் இணையதளத்தின் மூலம் அறியப்பெற்று புதுவையில் ஆரம்பக்கட்ட வாசகர்களுக்கான இலக்கியப்பயிற்சி முகாமில் பங்குப்பெற்றேன். வாய்ப்புக்கு  தங்களுக்கும் புதுவை வெண்முரசு கூடுகை நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

நண்பர்கள் முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். திரு. கடலூர் சீனு அவர்கள்

  1. தமிழ் இலக்கிய வரலாறு
  2. தங்கள் இலக்கிய மரபு
  3. வாசிப்பில் செய்யக்கூடாதவை
  4. வாசிப்பின் வழிமுறை
  5. இலக்கியத்தின் பயன்

ஆகியவற்றை எளிமையாகவும் செறிவாகவும் விளக்கினார். மேலும் ஐந்து சிறுகதைகள் மற்றும் ஐந்து கவிதைகளை எடுத்துக்காட்டாக கொண்டு இலக்கிய வகைமைகள் மற்றும் அவற்றை பொருள்கொள்ளும் முறையை விளக்கினார்.

மொத்தத்தில் என்னை போன்ற ஆரம்பக்கட்ட வாசகருக்கு மிகவும் உதவியாக இருந்தது.

பிகு:

திரு.கமலஹாசன் மூலமாக தங்களின் அறம் சிறுகதை தொகுப்பின் அறிமுகம் பெற்றேன். பின் தங்களின் இணையதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கெழும் ஐயங்களும் குழப்பங்களும் தீர்த்து தங்கள் எழுத்து வழிகாட்டியாக இருக்கிறது. நன்றிகள் பல.

– தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம்


அன்புள்ள ஜெ,

ஈரோடு புதியவாசகர் சந்திப்பில் கலந்துகொண்டபிறகே எனது வாசிப்பிலும் இலக்கியத்தை அணுகும் முறையிலும் நிறைய மாற்றம் உண்டானது, இடைப்பட்ட வருடங்களில் செவ்வியல் நாவல்களை குறிவைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன் டால்ஸ்டாய் தஸ்தவெய்ஸ்கியில் துவங்கி தற்போது ஆரோக்கிய நிகேதனம் வரை வந்திருக்கிறேன். இலக்கியத்தனிமையில் வாடும் புதியவாசகனுக்கு தாங்கள் முன்னெடுக்கும் வாசகர் சந்திப்புகள் வாசிப்பில் உள்ள சிக்கல்களை களையவும் புதிய வாசகநண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும் உதவியாக இருப்பதை அனுபவத்திருக்கிறேன், மேலும் தொடர்ச்சியாக இலக்கிய விழாக்களில் சந்திப்புகளில் கலந்துகொள்வது நான் வாசிப்பில் நிகழ்த்தும் பிழைகளை சரிசெய்துகொள்ளவும், அடிப்படைகளை மீளமீள நினைவுறுத்திக் கொள்ளவும் உதவி செய்கிறது.


பாண்டிச்சேரியில் கடலூர் சீனு அவர்களின் முன்னெடுப்பில்  தாமரைக்கண்ணன் மற்றும் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் இலக்கிய அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன், புதிய வாசகனுக்கு நீங்கள் அளித்த இரண்டு நாள் வகுப்பின் பாடத்திட்டத்தை செறிவுடனும் கூர்மையாகவும் கடலூர் சீனு அவர்கள் நிகழ்த்தினார். (நானும் கார்த்திக்கும் முன்னரே தங்களது வகுப்பில் கலந்து கொண்டிருப்பதை அறிந்து பாடத்தை பிற புதிய வாசகர்களிடம் ”லீக்” செய்துவிடவேண்டாம் என புன்னகையுடன் கேட்டுக்கொண்டார்). வகுப்பில் கலந்து கொண்ட அனைவரும் வாசகபர்வத்தின் துவக்கநிலையில் இருப்பவர்கள், இவன் தான் பாலா புத்தகத்தை வாசித்துவிட்டு ஜெயகாந்தனை தெரிந்து கொண்டு வாசிக்க முனைந்த வாசகர், பொழுது போகாமல் நூலகத்தில் நுழைந்து வாசிக்க முயன்றவர், தூக்கம் வரவில்லை அதனால் வாசிக்கத்துவங்கினேன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட வாசகர் என வெவ்வேறு வழியில் தமக்குள் இருக்கும் இலக்கிய உணர்கொம்பில் தடுக்கி விழுந்தவர்களாக இருந்தனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை அணுகுமுறைகளை இலக்கியத்தின் தோற்றத்தை அதன் பணியை, கலையில் அதன் இடத்தை புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் வகுப்பை கடலூர் சீனு அவர்களின் வகுப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்வுக்காக பதிவு செய்த அனைவருக்கும் முன்னரே ஐந்து சிறுகதைகளும் கவிதைகளும் அனுப்பப்பட்டிருந்தது, சிறுகதைகளை வாசித்துவிட்டு கட்டாயமாக அனைவரும் அதைக் குறித்த தங்களது எண்ணங்களை மதிப்பீடுகளை எழுதியனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். புதிய வாசகர் சந்திப்பில் கடைபிடிக்கப்படும் அதே கறார்விதிகள் இங்கும் கடைபிடிக்கப்பட்டது, வீணாக ஒரு வார்த்தையும் பேசப்படவில்லை வாசகர்களும் தொடர்ந்து சீனு அவர்களிடம் தங்களது சந்தேகங்களை எழுப்பியபடியே இருந்தனர்.

நிகழ்வின் துவக்கத்தில் தமிழ் நவீன இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு பெரும் கோட்டுச்சித்திரமாக சங்ககாலம் முதல் தற்போதைய புதுவரலாற்றுவாதம் வரை கற்பிக்கப்பட்டது, பின்னர் இலக்கியத்தின் அடிப்படை அலகுகளான மொழி மற்றும் அதன் இயங்கு தளமான “Langue, Parol and Symbol” இவற்றை கடல் அதன் அலை என உவமைகளுடனும் குறியீடுகளால் அது வெளிப்படும் விதமும் எளியவாசகனுக்கான முறையில் விளக்கப்பட்டது, மேலும் உவமை, படிமங்கள், த்வனி என மொழியின் தளங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டாவதாக செய்யுளுக்கும் உரைநடைக்கும் இடையிலான வேறுபாடுகள் அதன் காலம்தோறும் மாறிவந்த உரைநடையின் முன்னோடிகள் அவர்களின் இலக்கியப் பங்கு, மீமொழி (metalanguage) என்றால் என்ன, புறவயமான எழுத்தைக்கொண்டு வேறொன்றை தொடும் subtext என்றால் என்ன, ஒரு படைப்பு அளிக்கும் தரிசனம் அதன் வழி அடையும் மீட்பு என இலக்கியத்தின் தளங்கள் விவரிக்கப்பட்டது.

இரண்டாம் பகுதியாக அழகியல் சார்ந்த அடிப்படைகளான எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தம், இயல்புவாதம், கற்பனாவாதம், இருத்தலியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் மற்றும் Neoclasscism வரை சிறுகதைகளை உதாரணமாகக்கொண்டு விளக்கினார், இதன்மூலம் புதிய வாசகன் கவனிக்கத்தவறும் படைப்பின் அழகியல், தனித்தன்மை, வடிவம், உள்ளடக்கம் மற்றும் படைப்பின் தரிசனம் ஆகியவை மீதான பிரக்ஞை உருவாக்கப்படுகிறது. கவிதைகளில் அதிக பரிச்சயத்தை இன்னும் ஏற்படுத்திக்கொள்ளாத எனக்கு ஒரு காலதீதமாக நிற்கும் கவிதைக்கான் இலக்கணமாக உண்மையின் தீவிரம், மொழிக்கு அது ஆற்றும் பங்கு, காலத்தை உதறி நிற்கும் பண்பு, தனித்தன்மை மற்றும் அதன் மீமொழியை குறித்தான அறிமுகமானது மேற்கொண்டு என் கவிதை வாசிப்பில் அடுத்தகட்ட நகர்வை நிச்சயம் உருவாக்கும் என நம்புகிறேன்.


Neoclassicsm என்ற வார்த்தையையே அன்று தான் முதன்முதலில் கேட்கிறேன், வெண்முரசு விஷ்ணுபுரம் போன்ற செவ்வியல் நாவலில் உள்ள நவீன இலக்கியத்தின் அனைத்து அழகியல் அம்சங்களையும் கடலூர் சீனு அவர்களின் உரையில் கோடிட்டு காட்டியபொழுதே  படைப்பின் வீரியத்தை எண்ணி பிரமிப்படைந்தேன், எங்கு துவங்கினாலும் விஷ்ணுபுரத்தில் வந்து முடிவடையும் அவருடைய பேச்சு, வாசிப்பில் அவருக்குள் இருக்கும் தீவிரம் என்னை மிகவும் வசீகரித்துவிட்டது (ஏனென்றால் இன்றுவரை என்னால் விளங்கிக்கொள்ள இயலாத படைப்பாக விஷ்ணுபுரம் நீடிக்கிறது) ஞானத்தை கட்டுப்படுத்தும் சடங்காக கலையை அவர் முன்வைத்த விதத்தை இக்கணம் வரை மீள மீள எண்ணியபடியே உள்ளேன்.

நிகழ்வின் இறுதியாக கலந்துரையாடலில் வாசகர்கள் எழுப்பிய அடிப்படை சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து இலக்கியத்தில் கட்டாயமாகக் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்குமுறை குறித்தும் அறிவுறுத்தியவாறு நிறைவு செய்யபட்டது.

வெண்முரசு கூடுகைகளை மாதம் ஒருமுறை நிகழ்த்தும் நண்பர்கள், அதன் தொடர்ச்சியாக இவ்வகையான வாசகர் சந்திப்புகளை ஒருங்கிணைக்க உள்ளதாக தாமரைக்கண்ணன் தெரிவித்தார். இளம் வாசகர்களுக்கும், வாசிப்பில் தொடர்ச்சியாக தனது பிழையை திருத்தும் கைகளை எதிர்நோக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் கடலூர் சீனு மாதிரியான ஒரு தீவிர வாசகரின் அணுக்கம் மிக அத்தியாவசியமான ஒன்று.

இன்று புத்துணர்ச்சியுடன் மேலும் பிரக்ஞையுடன் இலக்கியத்தை சாதகம் செய்ய துவங்குவேன்.

இப்படிக்கு,

சூர்யப்ரகாஷ் பிச்சுமணி

மதுரை

புதுவை வெண்முரசு கூடுகை. இலக்கிய கலை பற்றிய ஒருநாள் முகாம் அனுபவம் …..மலர்வானன்

 


Sunday 22 January 2023

வெண்முகில் நகரத்தின் வெளிச்சங்கள் திரு. வளவ. துரையன்




[புதுவை வெண்முரசின் 50-ஆம் கூடுகையில் ஜெயமோகன் முன்னிலையில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்]


ஒரு படைப்பாளர் கூறவந்த கருத்தை வலிமையாக உணர்த்த உவமைகளைப் பயன்படுத்துவார். உவமைகள் கருத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் தீபங்கள் போன்றவை. வெண்முரசின் வெண்முகில் நகரம் பகுதியில் உள்ள சில உவமைகள் இங்கு காட்டப்ப்டுகின்றன


 அர்ஜுனனும் சகதேவனும் சந்திக்கிறார்கள். அர்ஜுனன் அன்னை குந்தி எப்படி இருக்கிறார்கள் என்று கேட்கிறான். அதற்கு சகதேவன்  ““அவர்களுக்கு கங்கைக்கரையிலேயே ஓர் அரண்மனையை அளித்திருக்கிறார் பாஞ்சாலர். அதன் மாடம் மீது மார்த்திகாவதியின் கொடியை பறக்கவிட்டிருக்கிறார்கள். நேற்றுதான் நானே அதை கண்டேன். அன்னையிடம் சொன்னேன், இது நம் அரசல்ல, நாம் இங்கு அரசமுறைப்படி வரவும் இல்லை என்று. விடையாக, ”பதுங்கியிருக்கும் வேங்கைதான் மேலும் வேங்கையாகிறது என்றார்கள்” என்று விடை கூறுகிறான்.


குந்தி கூறும் சொற்களில் உள்ள இந்த உவமை முக்கியமானது. இங்கே இருப்பதால் நம் வலிமை பெருகிறது என்னும் நோக்கத்துடன் அந்தச் சொற்களை அவர் கூறுகிறார். சில நாள்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு காட்சியைப் பார்த்திருக்கலாம். காட்டின் நடுவில் ஒரு சாலை செல்கிறது. அச்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் இரு புறமும் நின்றுவிட்டன. ஏனெனில் ஒரு வேங்கை சாலையைக் கடந்து குறுக்காகச் செல்கிறது. 


அது நடந்து செல்லும் போக்கைப் பார்த்தால் ஓர் ஆடு போல மெதுவாகச் செல்வது போலத் தோன்றுகிறது. அந்த வேங்கையே தன் இரையாகிய மானையோ எருமையையோ பிடிக்கப் பதுங்கி இருக்கும்போது பார்த்தால் அதன் விழிகளில் ஒரு சீற்றமும் உடலசைவிலே ஓர் எதிர்பார்ப்பையும் காணலாம்.. பதுங்கப் பதுங்கப் பதுங்கத்தான் வேங்கைக்கு வலிமை கூடும்போல இருக்கிறது.


”அன்னை மூத்தவரிடம் அஸ்வத்தாமனின் சத்ராவதி மேல் படையெடுக்கும்படி திரௌபதியிடம் போய்ச் சொல் என்றார்கள்” என்கிறான் சகாதேவன். ஆனால் அவர் சொல்லியிருக்கமாட்டார் என்று சொல்லிய அர்ஜுனன், மேலும், பீமன் செல்வதைப் பற்றி, “கங்கை எற்றி எற்றி எறிந்து கொண்டு செல்லும் நெற்று போலச் சென்றிருப்பார் மூத்தவர்” என்கிறான். 


நெற்று என்பது மிகவும் லேசானது. ஆனால் முதிர்ந்தது. அது கங்கை நீரில் விழுந்தால் அந்நீர் செலுத்துவதற்கேற்ப நகர்ந்து நகர்ந்து சென்று கொண்டே இருக்கும். பீமன் முதிர்ந்த மூத்தவன்தான். ஆனால் அவனுக்குத் திரௌபதியிடம், அன்னை சொன்னதைப் போய்க் கூற எண்ணமில்லை. ஆனால் குந்தி சொல்லிவிட்டார், எனவே மனத்தின் குழப்பம் செலுத்தச் செலுத்த யோசிப்புடன் நடந்து கொண்டிருக்கிறான், அவன் செல்வது நீர் எப்படி ஒரு நெற்றைச் செலுத்துமோ அதுபோல அவன் மனக்குழப்பம் அவனைச் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதைக்காட்டும் காட்டும் உவமை இது.


பெண்ணின் பருவத்தைப் பேதை, பெதும்பை, மங்கை மடந்தை அரிவை, தெரிவை பேரிளம்பெண் எனப் பிரித்து வைத்துள்ளனர். இவற்றில் ”பேதைக்கு யாண்டே ஐந்து முதல் எட்டே” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். எட்டுவயதுக்குட்பட்ட அச்சிறு பெண் மனத்தில் ஒரு தத்தளிப்பு இருக்கும். எதிலும் நிலைகொள்ளாமை குடிகொண்டிருக்கும். கவலை அச்சம் எல்லாம் இருக்கும். அர்ஜுனன் ஒரு கட்டத்தில் இந்நிலையில் இருக்கிறான். ”பெண், மண், புகழ் எல்லாமே ஒரு பொருட்டில்லை” என்கிறான்.  அப்பொழுது சகதேவன், “மூத்தவரே!  தன் காதலுக்காகக் காத்திருக்கும் பேதைப் பருவப் பெண்ணின் நிலை கொள்ளாமை தங்களுடையது” என்கிறான். பேதைப் பெண்ணின் மனநிலை இங்கு சிறப்பான உவமையாக எடுத்தாளப்பட்டுள்ளது.


அர்ச்சுனன் துருபதனிடம் அஸ்வத்தாமன் மீது படையெடுப்பது பற்றிப் பேசுகிறான். அர்ச்சுனன் பெருமூச்சுடன் எழுந்து “நான் இதை இளவரசியிடம் சொல்லவேண்டும் என அன்னை கோரினாள். பெண்ணிடம் அரசு சூழ்தலைப் பேச என் அகம் ஒப்பாது. எனவே அரசரிடமே பேசிவிடலாமென்று வந்தேன்” என்றான். 


“அது நன்று. நேராகச் செல்லும் அம்புதான் விசைமிக்கது” என்றான் தருமன். 

சாதாரண உவமை இது என்றாலும் நேராகச் செல்லும் அம்பில்தான் வேகம், கூர்மை, இலக்கைச் சென்று அடையும் தன்மை ஆகியன இருக்கும், வளைந்து அல்லது சாய்வாகச் செல்லும் அம்பில் இவை இருக்க வாய்ப்பில்லை. எனவே திரௌபதியிடம் சொல்லிப் பேசித் திட்டமிடுவதை விட அர்ஜுனன் நேராக துருபதனிடம் பேசியதைப் பற்றி தருமன் இப்படிக் கூறுகிறான்.   

அர்ஜுனன் கேட்க சூதர்கள் ஹிரண்யாக்ஷன் கதையைப் பாடுகிறார்கள். ஹிரண்யாக்ஷனுக்கு ஒரு மகன் பிறக்கிறான். ஆனால் அவன் அந்தகனாக இருக்கிறான். பின் அந்த அந்தகன் தனக்குக் கண்களைப் பொருத்திக் கொள்கிறான்.அதை ஜெ. இப்படி எழுதுகிறார். “. அந்தகன் மழையில் கரைந்தழிந்த சிற்பமெனத் தோன்றிய தன் விழியற்ற முகத்தில் கண்களிருக்கும் இடத்தில் இரண்டு நீலவைரங்களை கருவிழிகளாகப் பதித்துச் செய்யப்பட்ட பொய்க்கண்களை பொருத்திக்கொண்டான்” 

விழியில்லாத முகம் அழகு குறைந்துதான் தோன்றும். அது அழகான சிற்பம் மழை நீரில் கரைந்தழிந்ததைப் போல இருந்ததாம். அதாவது பாதி உரு இருக்கும். மீதி அழிந்திருக்கும். பொருத்திக் கொள்ளூம் பொய்க்கண்களுக்கு உவமைகள் வைரங்கள். அதுவும் நீல வண்ணம் உடையவை. இக்காலத்தில் பொருத்திக் கொள்ளும் லென்ஸ் போன்றவை. அவை மின்னக்கூடியவை அதனால்தான் வைரங்களுக்கு நிகர் எனக் கூறப்படுகின்றன போலும்.

மீன் கூட்டம் நீருக்கு மேல் வந்து மேய்ந்து கொண்டிருக்கும். ஏதாவது நிழல் தண்ணீரில் பட்டாலே போதும் அவை உடனே நீருள் மறைந்து போகும். இதுவும் உவமையாக ஓரிடத்தில் வருகிறது. மாயை அர்ஜுனனிடம் ஒரு கதை சொல்லிவிட்டுச் சிலைபோல இருக்கிறாள். அப்பொழுது அங்கே திரௌபதி வருகிறாள். 

இப்போது அர்ஜுனன் மாயையைப் பார்க்கிறான். ”அவன் விழியசைவே அவளை கலைக்கப் போதுமானதாக இருந்தது.  நிழல்பட்டு நீருள் மறையும் மீன்குலம் என அவளில் எழுந்தவை எல்லாம் உள்ளடங்கின” என்பதுதான் இங்கு சொல்லப்படும் உவமையாகும். மாயை இன்னும் என்னென்ன  சொல்லலாம் என எண்ணியிருந்தாளோ அவை எல்லாம் மீன்கூட்டம் நீருள் மூழ்கி மறைவதைப் போல அவளுள் அமிழ்ந்து போயினவாம்.

திரௌபதி அர்ஜுனனிடம் வருகிறாள். இருவர் பார்வைகளும் கலந்தன. திரௌபதி தன் பார்வையை விலக்கிக் கொள்கிறாள். ”அப்படி விலக்கியமைக்காக சினம்கொண்டு மீண்டும் அவனை நோக்கி “சீ” என்றாள். நஞ்சு உமிழ்ந்த பின் நாகம் என அவள் உடல் நெளிந்தது” அந்தச் ‘சீ” என்னும் சொல்லில் அவள் தன் மனக்குமுறல், சினம், நாணம், காமம், எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விடுகிறாள் நாகத்தின் பெருமையே நஞ்சுதானே? அது போன பின் இருக்கும் நிலைக்குத் திரௌபதி தள்ளப்பட்டிருக்கிறாள். 

திரௌபதிக்குக் கூறப்படும் இந்த நாகத்தின் உவமையானது பலவரிகள் சென்றபின்னும் அவள் அழும்போதும் கூறப்படுகிறது. திரௌபதி இப்பொழுது அழுது கொண்டிருக்கிறாள். அவள் அழுவதால் கழுத்து சுருங்கி விரிகிறது. இரை விழுந்த நாகம் போல அவள் கரிய மென்கழுத்து சுருங்கி விரிந்து அதிர்ந்தது என்பது இங்கு சொல்லப்படும் உவமையாகும். உவமை மாறாமல் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கம்பராமாயணத்தில் வரங்கள் பெற வேண்டி கைகேயி தன்னை அலங்கோலப்படுத்திக் கொண்டு கீழே விழுந்து கிடப்பாள். அப்பொழுது அவளைக் காண தயரதன் வருவான். வந்த தயரதன் கைகேயியைத் தூக்குவான். அதற்குக் கம்பர் ஒரு யானை மாலையைத் தூக்கியது போலத் தூக்கினான் என்று உவமை கூறுவார், சிறிது நேரம் கழித்துக் கைகேயி வரங்கள் கேட்கத் தயரதன் கீழே விழுவான். நாகத்தால் தீண்டப்பட்ட யானை போல விழுவானாம். கைகேயிக்கு மாலை என்று கூறியதை மாற்றி நாகம் என்று கூறிய கம்பர் தயரதனுக்கு யானையை மாற்றாமல் கூறியிருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது.  

காமம் பற்றி அர்ஜுனன் சொல்லும் சொற்கள் முக்கியமானவை ஆகும். அவனுக்கு மிகவும் ஏற்றவை அவை. காட்டுவிலங்கைக் காமத்துக்கு உவமையாகக் கூறுகிறான், ஒரு விலங்கு வீட்டில் வளர்க்கப்பட்டால் அதைப் பழக்கிவிடலாம். தன் குணங்களை மாற்றிக் கொண்டு மிக அமைதியாகிவிடும். ஆனால் காட்டுவிலங்கு எவ்வகைக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராது. மனம் போனபடி ஓடும். அவ்வளவு எளிதில் யாருக்கும் கட்டுப்படாது. அதனால்தான் அர்ஜுனன் திரௌபதியிடம் இப்படிக் கூறுகிறான். “என் காமம் தனித்த காட்டுவிலங்கு. அது ஒருபோதும் ஒருவருக்குக் கட்டுப்படாது”

அர்ஜுனன் திரௌபதியிடம் சொல்கிறான். “நீ ஒரு உளச்சித்திரம் கொண்டிருக்கலாம். நான் இங்கே உன்னை எண்ணி ஏங்கி காத்திருப்பேன் என்று. காமத்தால் கொதிக்கும் என் மேல் ஒரு குளிர்மழைத்துளியாக விழலாம் என்று” . இந்தச் சொற்றொடர்களில் காலம் காலமாகக் கூறிவரும் உவமை மாற்றம் பெறுகிறது. பெரும்பாலும் பெண்ணை நிலமாகவும் ஆணை மழைத்துளியாகவும்தான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. ஆனால் திரௌபதிக்காகக் காத்திருப்பதால் தான் கொதித்திருப்பேன் என்றும் தன்னைக் குளிர்விக்க அவள் ஒரு மழைத்துளியாகத் தன்னை நினைத்துக் கொள்வாள் என்றும் அர்ஜுனன் சொல்வது புதுமைதான்.

சினம் கொண்டுள்ள திரௌபதியை அர்ஜுனன் அணைக்கிறான். முதலில் அவள் எதிர்ப்பு காட்ட்டுகிறாள். திமிறுகிறாள், ஆனால் அவன் அணைக்க அணைக்க அவள் அடங்கிப் போகிறாள். இந்த இடத்தில் திரௌபதி அடங்குவதை, ஜெ, “உயிரிழக்கும் விலங்கு என அவள் உடலின் திமிறல் மெல்ல மெல்லத் தளர்ந்தது” என்று எழுதுகிறார்.

புலி மானைத் துரத்திக் கழுத்தைக் கவ்விப்பிடிக்கும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம். புலி கழுத்தைப் பிடித்ததும் மான் கால்களை உடலை அசைத்துத் திமிறிப் பார்க்கும். ஆனால் புலி விடாது. அது கழுத்தை இறுகக் கவ்வக் கவ்வக் மானின் உடல் மெல்ல மெல்ல அடங்கிப் போகும்.  நேர்த்தியான உவமை இது.

ஒரே வாக்கியத்தில் ஒரே பொருளுக்கு இரண்டு உவமைகள் கூறப்படுவதையும் பார்க்க முடிகிறது. நகுலனும் விதுரரும் தேரில் சென்றுகொண்டிருக்கின்றனர். குறுக்கே யானைக் கூட்டம் செல்வதால் தேர் சற்று நிற்கிறது. யானைக் கூட்டம் கடந்து செல்வது, ”கையில் சங்கிலியுடன் கங்கையில் நீராடி  வந்த பன்னிரு யானைகள் கரிய மதில் சுவரெனத் தெரிந்து இருள் அசைவது போலக் கடந்து சென்றன” என்று காட்டப்பட்டுள்ளது. யானைகளுக்கு முதலில் கரிய மதிலும், பின்னர் இருளும் என இரண்டு உவமைகள் வருவதை அனுபவிக்கலாம்.. 

நகுலனை அலங்கரிக்கிறார்கள். மிருஷை அதில் முக்கியப் பங்கு வகிக்கிறார். நகுலனின் சிகையை அலங்கரிப்பது இப்படிக் கூறப்படுகிறது. “அவரது மெல்லிய விரல்கள் அவன் தலையில் சிட்டுகள் கூட்டில் எழுந்தமர்ந்து விளையாடியது போல் இயங்கின.”

சிட்டுக்குருவிகள் எப்பொழுதும் சும்மா ஓரிடத்தில் அமர்ந்திருக்காது. அதுவும் கூட்டில் உட்காருவது போல் போய் அமரும். ஆனால் அடுத்த வினாடியே விர்ரென்று எழுந்து பறக்கும். அது போல மிருஷை தன் விரல்களை நகுலன் தலையில் வைப்பதும் எடுப்பதுமாக இருந்தாராம்.

. திரௌபதியின் கண்கள் கருங்கரடியின் நகங்கள் போல் இருப்பதாக ஓரிடத்தில் புதியதோர் உவமை சொல்லப்படுகிறது. அவள் கண்கள் இரு பக்கங்களிலும் மை யிடப்பட்டுக் கூர்மையாக்கப்பட்டுள்ளனவாம். ஜெயமோகனின் ”தீற்றல்” சிறுகதை இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. அக்கதையின் மையமே கண்ணுக்கு மையிட்டு அதன் நுனியில் வால் போலக் கூர்மையாக்கபடுவதுதான். கரடி பிடித்த பிடியை விடாது என்பார்கள். திரௌபதியிடம் நகுலன் செல்கையில் விதுரர் அவனிடம், “நீ அவளிடம் உன்னை ஒப்படைத்து விடு” என்பார். அவள் உன்னைக் கையாளுவாள் என்பதுதான் விதுரரின் கூற்றின் மறைபொருளாகும். 

திரௌபதியின் கண்களுக்கு, “அவற்றின் இரு பக்கங்களிலும் கூர்முனைகள் மையிடப்பட்டு கருங்கரடியின் நகங்கள் போலிருப்[பதாக நகுலன் எண்ணினான்” என்பது புதிய உவமையைக் கொண்டுள்ளது.

கன்னி ஒருத்திக்குத் திருமணமான உடன் அவள் உள்ளத்திலும், உடலிலும்  ஒரு சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. பழக்க வழக்கங்கள் மாறுகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் எந்த நாளில், எப்பொழுதில் ஏற்படுகின்றன என்பதை யாருமே கண்டுபிடிக்க முடியாது. மாற்றம் நிகழ்ந்த பின்னரே உணர முடியும். ஒரு மலர் தானாகக் கனியாகிறது. அதுவும் எப்பொழுது காயாக மாறுகிறது என்பதை யாரும் அறியமாட்டார். இதனை உவமையாக்கிக்  “கன்னி குலமகளாகும் விந்தைக்கு நிகரானது மலர் கனியாவது” எனக் கூறப்படுகிறது. சுகன்யை சியவனரை மணந்தபின் கொள்ளும் மாற்றத்தைக் குறிக்க இந்த உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அஸ்வினி தேவர்கள் மணமான சுகன்யையிடம் வந்து அவளை விரும்புவதாகச் சொல்ல சுகன்யை அவர்களைச் சபித்துவிடுவேன் என எச்சரித்து அனுப்பி விடுகிறாள். ஆனால் பின்னர் உன் கணவருக்கு நாங்கள் விழி தருவோம் என்று சொல்ல சுகன்யை மணம் கணவருக்கு விழி வருகிறதே என்று சஞ்சலப்படுகிறது. அதேவர்கள், நாங்களிருவருடன் உன் கணவரும் நீரில் முழ்கி எழுவோம். அப்பொழுது உன் கணவர் பார்வையை மீண்டும் பெறுவார். ஆனால் நாங்கள் மூவரும் ஒரே உருவத்தில் இருப்போம். நீ உன் கணவர் யாரென்று கண்டறிந்து அடைய வேண்டும்” என்கிறார்கள்.

சுகன்யை இவ்விவரத்தைத் தன்கணவரிடம் சொல்லி என்ன செய்வது என்று கேட்கிறாள். அதற்கு. சியவனர், “என்ன செய்வது என நீ என்னிடம் கேட்டபோதே உன் உள்ளத்தின் விரிசலைக் காட்டியது” என்கிறார். இத்தனை முறை அவர்கள் வேண்டியபோத்தெல்லாம் மறுத்த சுகன்யை இம்முறை தன்னைக் கேளாமலேயே மறுத்திருக்க வேண்டும். ஆனால் தன்னைடமே வந்து என்ன செய்வது என்று கேட்டால் அவள் உள்ளம் ஓரளவிற்கு இதை ஒப்புக்கொள்ளத் தயாராகிவிட்டது என்றுதானே பொருள். அதைத்தான் உன் உள்ளம் விரிசல் பட்டுவிட்டது என்று ஓர் உவமை மூலம் சியவனர் கூறுகிறார்.

இப்படி வெண்முகில் நகரத்தில் தன்கருத்தை வலியுறுத்த, வாசிக்கும் வாசகரின் உள்ளத்தில் வாசிப்பின் கருத்து போய்ப் படியப் பல உவமைகள் மொழியப்பட்டுள்ளன’

===============================================================================


 

  

புதுவை இளம் எழுத்தாளர் அரிசங்கர் கௌரவிக்கப்பட்டார்.

 தேதி 27.04.2024 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல்  மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியி...