Friday 24 February 2023
Friday 17 February 2023
Friday 10 February 2023
வெண்முகிலில் வாழ்தல், கடலூர் சீனு
இனிய ஜெயம்
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக வெண்முகில் நகரத்தில் வாழ்ந்தோம். இறுதி பகுதி குறித்து ஆஞ்சேநேய ஜெயந்தி அன்று உரையாடினோம். உண்மையில் இந்த நாவல் திரௌபதி நீராடி, தொய்யில் எழுதி, அணிபூண்டு அன்னையை திரும்பிக் கூட பார்க்காமல் நகர்வலம் சென்று, சுயவரம் காணும் போதே துவங்கி விடுகிறது. அஸ்தினாபுரி அரியணையில் துரியனும் கர்ணனும் வாளேந்தி பக்கம் நிற்க அவள் அமர்வது வரை வந்து முழுமை கொள்ளும் நாவல் இது.
இன்று திருப்பூர் சென்னை என்று இரண்டு இடங்களில் இருந்து உங்கள் வாசகிகள் அழைத்து வெண்முரசு முற்றோதல் இன்றுடன் நிறைவு கண்டதை சொன்னார்கள். இருவருக்குமே இலக்கியம் புதிது. எந்த தயக்கமும் தடையும் இன்றி தினமும் வாசித்து (சந்தேக நிவர்த்திக்கு கடலூர் சீனு) முடித்திருக்கிறார்.
இந்த நாவலின் இறுதி பகுதிகளை பேசிய அமிர்த வல்லி அவர்களுக்கும் இலக்கிய முன் வாசிப்பு என ஏதும் இல்லை. தமிழை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டாம் மொழியாக கற்ற அளவு மட்டுமே தொடர்பு கொண்டவர். இறுதி அத்யாய உளவியல் நுட்பங்கள் உணர்வுகள் அனைத்தையும் தேர்ந்த ரசனையுடன் தொட்டு விரித்து உரையாடினார். (வாசகருக்கான மாலை சிற்றுண்டியும் அவரே கொண்டு வந்து விட்டார்).
அம்பை பித்து கொண்டு திரிந்த நாட்களை விவாதித்தது எங்கோ போன ஜென்ம நினைவு போல இருக்க, இதோ அஸ்தினாபுரி துறைமுகத்தில் நூறு மணப்பெண்கள் நகர் நுழைய காத்து நிற்கின்றனர். நீர்ச் சுடரில் ஒவ்வொருவராக விழுந்து மாயப்போகும் கங்கை.
இந்த நாவல் நேற்று வாசித்து முடித்தாலும், இதோ இக்கணம் வரை திருதா கொண்ட துயரம் உள்ளே உறுத்திக்கொண்டே இருக்கிறது. விழியற்றவன் அறியும் உண்மை என்ற ஒன்று உண்டு. பிரத்யட்சமோ அனுமானமோ ஊகமோ வழி என அமைந்த உண்மை அல்ல அது. ‘நான் அறிவேன்’ எனும் நிலையில் உள்ளே அமைத்த முற்ற முழுதான உண்மை. எல்லாவற்றையும் அவன் அந்தக கண் கொண்டு பார்த்து விட்டான். இனி அவன் பார்த்த காட்சி அவன் நிகர் வாழ்வில் வந்து சேரும் வரை அவன் காத்திருக்க வேண்டும். வெறுமனே காத்திருக்க மட்டுமே அவனால் முடியும். எதையுமே அவனால் மாற்ற முடியாது. எத்தனை பெரிய துயர்.
நாங்கள் இங்கே இப்போது இந்த உணர்வில் கிடக்கிறோம். உங்களைக் கேட்டால் இது எல்லாம் நான் என்றோ கண்டு முடித்து கடந்த கனவு என்று பதில் சொல்வீர்கள். இன்னும் நெடுந்தொலைவு உள்ளது நாங்கள் முதலாவிண் காண. இடையே உள்ளது யுகம் யுகம் என்று நீளும் நூறு நூறு வாழ்வு.
கடலூர் சீனு
Sunday 5 February 2023
இலக்கிய கலை ஒருநாள் முகாம்….தாமரைக்கண்ணன் காஞ்சிபுரம் , சூர்யப்ரகாஷ் பிச்சுமணி மதுரை
, https://www.jeyamohan.in/179630/
தங்கள் இணையதளத்தின் மூலம் அறியப்பெற்று புதுவையில் ஆரம்பக்கட்ட வாசகர்களுக்கான இலக்கியப்பயிற்சி முகாமில் பங்குப்பெற்றேன். வாய்ப்புக்கு தங்களுக்கும் புதுவை வெண்முரசு கூடுகை நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
நண்பர்கள் முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். திரு. கடலூர் சீனு அவர்கள்
- தமிழ் இலக்கிய வரலாறு
- தங்கள் இலக்கிய மரபு
- வாசிப்பில் செய்யக்கூடாதவை
- வாசிப்பின் வழிமுறை
- இலக்கியத்தின் பயன்
ஆகியவற்றை எளிமையாகவும் செறிவாகவும் விளக்கினார். மேலும் ஐந்து சிறுகதைகள் மற்றும் ஐந்து கவிதைகளை எடுத்துக்காட்டாக கொண்டு இலக்கிய வகைமைகள் மற்றும் அவற்றை பொருள்கொள்ளும் முறையை விளக்கினார்.
மொத்தத்தில் என்னை போன்ற ஆரம்பக்கட்ட வாசகருக்கு மிகவும் உதவியாக இருந்தது.
பிகு:
திரு.கமலஹாசன் மூலமாக தங்களின் அறம் சிறுகதை தொகுப்பின் அறிமுகம் பெற்றேன். பின் தங்களின் இணையதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கெழும் ஐயங்களும் குழப்பங்களும் தீர்த்து தங்கள் எழுத்து வழிகாட்டியாக இருக்கிறது. நன்றிகள் பல.
– தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம்
அன்புள்ள ஜெ,
ஈரோடு புதியவாசகர் சந்திப்பில் கலந்துகொண்டபிறகே எனது வாசிப்பிலும் இலக்கியத்தை அணுகும் முறையிலும் நிறைய மாற்றம் உண்டானது, இடைப்பட்ட வருடங்களில் செவ்வியல் நாவல்களை குறிவைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன் டால்ஸ்டாய் தஸ்தவெய்ஸ்கியில் துவங்கி தற்போது ஆரோக்கிய நிகேதனம் வரை வந்திருக்கிறேன். இலக்கியத்தனிமையில் வாடும் புதியவாசகனுக்கு தாங்கள் முன்னெடுக்கும் வாசகர் சந்திப்புகள் வாசிப்பில் உள்ள சிக்கல்களை களையவும் புதிய வாசகநண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும் உதவியாக இருப்பதை அனுபவத்திருக்கிறேன், மேலும் தொடர்ச்சியாக இலக்கிய விழாக்களில் சந்திப்புகளில் கலந்துகொள்வது நான் வாசிப்பில் நிகழ்த்தும் பிழைகளை சரிசெய்துகொள்ளவும், அடிப்படைகளை மீளமீள நினைவுறுத்திக் கொள்ளவும் உதவி செய்கிறது.
பாண்டிச்சேரியில் கடலூர் சீனு அவர்களின் முன்னெடுப்பில் தாமரைக்கண்ணன் மற்றும் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் இலக்கிய அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன், புதிய வாசகனுக்கு நீங்கள் அளித்த இரண்டு நாள் வகுப்பின் பாடத்திட்டத்தை செறிவுடனும் கூர்மையாகவும் கடலூர் சீனு அவர்கள் நிகழ்த்தினார். (நானும் கார்த்திக்கும் முன்னரே தங்களது வகுப்பில் கலந்து கொண்டிருப்பதை அறிந்து பாடத்தை பிற புதிய வாசகர்களிடம் ”லீக்” செய்துவிடவேண்டாம் என புன்னகையுடன் கேட்டுக்கொண்டார்). வகுப்பில் கலந்து கொண்ட அனைவரும் வாசகபர்வத்தின் துவக்கநிலையில் இருப்பவர்கள், இவன் தான் பாலா புத்தகத்தை வாசித்துவிட்டு ஜெயகாந்தனை தெரிந்து கொண்டு வாசிக்க முனைந்த வாசகர், பொழுது போகாமல் நூலகத்தில் நுழைந்து வாசிக்க முயன்றவர், தூக்கம் வரவில்லை அதனால் வாசிக்கத்துவங்கினேன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட வாசகர் என வெவ்வேறு வழியில் தமக்குள் இருக்கும் இலக்கிய உணர்கொம்பில் தடுக்கி விழுந்தவர்களாக இருந்தனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை அணுகுமுறைகளை இலக்கியத்தின் தோற்றத்தை அதன் பணியை, கலையில் அதன் இடத்தை புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் வகுப்பை கடலூர் சீனு அவர்களின் வகுப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்வுக்காக பதிவு செய்த அனைவருக்கும் முன்னரே ஐந்து சிறுகதைகளும் கவிதைகளும் அனுப்பப்பட்டிருந்தது, சிறுகதைகளை வாசித்துவிட்டு கட்டாயமாக அனைவரும் அதைக் குறித்த தங்களது எண்ணங்களை மதிப்பீடுகளை எழுதியனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். புதிய வாசகர் சந்திப்பில் கடைபிடிக்கப்படும் அதே கறார்விதிகள் இங்கும் கடைபிடிக்கப்பட்டது, வீணாக ஒரு வார்த்தையும் பேசப்படவில்லை வாசகர்களும் தொடர்ந்து சீனு அவர்களிடம் தங்களது சந்தேகங்களை எழுப்பியபடியே இருந்தனர்.
நிகழ்வின் துவக்கத்தில் தமிழ் நவீன இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு பெரும் கோட்டுச்சித்திரமாக சங்ககாலம் முதல் தற்போதைய புதுவரலாற்றுவாதம் வரை கற்பிக்கப்பட்டது, பின்னர் இலக்கியத்தின் அடிப்படை அலகுகளான மொழி மற்றும் அதன் இயங்கு தளமான “Langue, Parol and Symbol” இவற்றை கடல் அதன் அலை என உவமைகளுடனும் குறியீடுகளால் அது வெளிப்படும் விதமும் எளியவாசகனுக்கான முறையில் விளக்கப்பட்டது, மேலும் உவமை, படிமங்கள், த்வனி என மொழியின் தளங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டாவதாக செய்யுளுக்கும் உரைநடைக்கும் இடையிலான வேறுபாடுகள் அதன் காலம்தோறும் மாறிவந்த உரைநடையின் முன்னோடிகள் அவர்களின் இலக்கியப் பங்கு, மீமொழி (metalanguage) என்றால் என்ன, புறவயமான எழுத்தைக்கொண்டு வேறொன்றை தொடும் subtext என்றால் என்ன, ஒரு படைப்பு அளிக்கும் தரிசனம் அதன் வழி அடையும் மீட்பு என இலக்கியத்தின் தளங்கள் விவரிக்கப்பட்டது.
இரண்டாம் பகுதியாக அழகியல் சார்ந்த அடிப்படைகளான எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தம், இயல்புவாதம், கற்பனாவாதம், இருத்தலியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் மற்றும் Neoclasscism வரை சிறுகதைகளை உதாரணமாகக்கொண்டு விளக்கினார், இதன்மூலம் புதிய வாசகன் கவனிக்கத்தவறும் படைப்பின் அழகியல், தனித்தன்மை, வடிவம், உள்ளடக்கம் மற்றும் படைப்பின் தரிசனம் ஆகியவை மீதான பிரக்ஞை உருவாக்கப்படுகிறது. கவிதைகளில் அதிக பரிச்சயத்தை இன்னும் ஏற்படுத்திக்கொள்ளாத எனக்கு ஒரு காலதீதமாக நிற்கும் கவிதைக்கான் இலக்கணமாக உண்மையின் தீவிரம், மொழிக்கு அது ஆற்றும் பங்கு, காலத்தை உதறி நிற்கும் பண்பு, தனித்தன்மை மற்றும் அதன் மீமொழியை குறித்தான அறிமுகமானது மேற்கொண்டு என் கவிதை வாசிப்பில் அடுத்தகட்ட நகர்வை நிச்சயம் உருவாக்கும் என நம்புகிறேன்.
Neoclassicsm என்ற வார்த்தையையே அன்று தான் முதன்முதலில் கேட்கிறேன், வெண்முரசு விஷ்ணுபுரம் போன்ற செவ்வியல் நாவலில் உள்ள நவீன இலக்கியத்தின் அனைத்து அழகியல் அம்சங்களையும் கடலூர் சீனு அவர்களின் உரையில் கோடிட்டு காட்டியபொழுதே படைப்பின் வீரியத்தை எண்ணி பிரமிப்படைந்தேன், எங்கு துவங்கினாலும் விஷ்ணுபுரத்தில் வந்து முடிவடையும் அவருடைய பேச்சு, வாசிப்பில் அவருக்குள் இருக்கும் தீவிரம் என்னை மிகவும் வசீகரித்துவிட்டது (ஏனென்றால் இன்றுவரை என்னால் விளங்கிக்கொள்ள இயலாத படைப்பாக விஷ்ணுபுரம் நீடிக்கிறது) ஞானத்தை கட்டுப்படுத்தும் சடங்காக கலையை அவர் முன்வைத்த விதத்தை இக்கணம் வரை மீள மீள எண்ணியபடியே உள்ளேன்.
நிகழ்வின் இறுதியாக கலந்துரையாடலில் வாசகர்கள் எழுப்பிய அடிப்படை சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து இலக்கியத்தில் கட்டாயமாகக் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்குமுறை குறித்தும் அறிவுறுத்தியவாறு நிறைவு செய்யபட்டது.
வெண்முரசு கூடுகைகளை மாதம் ஒருமுறை நிகழ்த்தும் நண்பர்கள், அதன் தொடர்ச்சியாக இவ்வகையான வாசகர் சந்திப்புகளை ஒருங்கிணைக்க உள்ளதாக தாமரைக்கண்ணன் தெரிவித்தார். இளம் வாசகர்களுக்கும், வாசிப்பில் தொடர்ச்சியாக தனது பிழையை திருத்தும் கைகளை எதிர்நோக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் கடலூர் சீனு மாதிரியான ஒரு தீவிர வாசகரின் அணுக்கம் மிக அத்தியாவசியமான ஒன்று.
இன்று புத்துணர்ச்சியுடன் மேலும் பிரக்ஞையுடன் இலக்கியத்தை சாதகம் செய்ய துவங்குவேன்.
இப்படிக்கு,
சூர்யப்ரகாஷ் பிச்சுமணி
மதுரை
புதுவை இளம் எழுத்தாளர் அரிசங்கர் கௌரவிக்கப்பட்டார்.
தேதி 27.04.2024 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல் மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியி...
-
தேதி 27.04.2024 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல் மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியி...
-
சென்னை சபரிநாதன் விருது விழா இளம் கவிஞர் சபரிக்கு விருது வழங்கும் விழாவில் திரு. ஜெயமோகன் மற்றும் சபரியுடன் புதுவை கூடுகை நண்பர்...
-
புதுவை கூடுகை - 02 புதுவை வெண்முசு இரண்டாவது கூடுகை இன்று (22-03-2017) வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்குத் துவங்கியது . உறுப்பினர் அனைவரு...