Tuesday 22 August 2017

புதுவை கூடுகை - 05

புதுவை கூடுகை - 05


அன்புள்ள நண்பர்களுக்கு.. வணக்கம். 

நிகழ்காவியமான "வெண்முரசு கலந்துரையாடல் "  புதுவையில் சென்ற பிப்ரவரி 2017  முதல் மாதந்தோறும் தொடர்ந்து  நடைபெற்றுவருகிறது.புதுவை கூடுகை மூன்றாம் வியாழக்கிழமைகளில் நிகழ்வது வழமை. இம்முறை திரு.பாவண்ணன் அவர்கள் புதுவைக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தை நழுவவிடாது, வெண்முரசு கலந்துரையாடலை26 ஜூன் 2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு தொடங்கவிருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றோம்.


26 ஜூன் மாதத்தில் கூடவிருக்கிற ஐந்தாவது கூடுகை, ஒரு சிறப்புமிக்க கூடுகையாக நிகழவிருக்கின்றது . இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருவரான திரு.ஜெயமோகன் அவர்களின் மதிப்பிற்குரிய நண்பரும் , வெண்முரசின் தொடர் வாசகருமாகிய மதிப்பிற்கினிய திரு.பாவண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெண்முரசின் சொல்மடிபில் கரந்துள்ள அர்த்தவிசேஷங்களை விரித்தெடுக்க இருப்பது , அதன் பிற பரிமாணங்களில் ஒளிரும் தருணங்களை நம்முள் நிகழ்த்தலாம்.

திரு. பாவண்ணன் அவர்கள் சிறுகதை, நாவல், கட்டுரை, குறுநாவல், கவிதை ,குழந்தைப்பாடல்கள் என பலத்தளங்களில் முப்பதாண்டுகள் மேலாக இயங்கிவரும் தமிழின் முக்கிய  எழுத்தாளரும், மகாபாரததத்தை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் அணுகி புனையப்பட்ட கன்னட எழுத்தாளர் திரு எஸ் எல் பைரப்பாவின்  பர்வா நாவலை தமிழ்ப்படுத்தியவரும் கன்னடத்தின் முக்கிய இலக்கிய நூல்களின் ஆகச்சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளருமாவார் என்பதை நாம் அனைவரும்  அறிவோம். இந்தக் கூடுகை அனைத்து விதத்திலும் மிக முக்கியமானதாக நிகழவிருக்கிறது.

அதில் பங்குகொள்ள நம் கூடுகை உறுப்பினர்கள், வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன்அழைக்கிறோம்..

நாள்:-

திங்கட்கிழமை  (26-06-2017) காலை 10:30  மணிக்கு தொடங்குகிறது.

இடம்:-

கிருபாநிதி அரிகிருஷ்ணன்,
" ஶ்ரீநாராயணபரம்",
முதல்மாடி,
27, வெள்ளாழர் வீதி ,
புதுவை-605001

புதுவை வெண்முரசுக்கூடுகை  5 (நாள்: 26.06.2017 / திங்கள்)


அனைவருக்கும் வணக்கம்

துவக்கப்பட்டு சில மாதங்களே ஆன எமது புதுவை வெண்முரசுக் கூடுகைக்கு  அதன் முளைவிடு பருவத்திலேயே வந்து பங்கேற்று வெண்முரசின் இன்றைய காலத்தேவையையும் அதன் பிரம்மாண்டத்தின் மீதான தனது அவதானிப்பையும் திரு பாவண்ணன் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது எங்களுக்கான வாழ்த்துநீர் பொழிதலாகவே கொள்கின்றோம்.  மேலும் பழந்தமிழிலக்கியத்தில் தேர்ச்சிபெற்ற நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவரான திரு வளவ. துரையன் அவர்கள் கடலூரிலிருந்து வந்து கலந்துகொண்டது அளப்பரிய மகிழ்வளித்ததோடு பெருமிதத்தையும் அளித்துச்  சென்றது.  இனிவரும் கூடுகைகளை முன்னிருந்து நடத்தி தருமாறு அவரிடம் ஒரு வேண்டுகோளும் வைக்கப்பட்டது.  அது நிகழும் பட்சத்தில் வெண்முரசின்  நுண்ணிய வாசிப்பு புதுவை நண்பர்களிடையே விஸ்தரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தவிர நமது அஜியின் திடீர் விஜயம் கண்டு பூரிப்பில் திக்குமுக்காடிப் போனோம்.               

மதிப்பிற்கினிய பாவண்ணன் அவர்கள் பேசியதிலிருந்து என் நினைவில் தங்கியவை..

சமகாலத்திற்கேற்ப இதிகாசங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருவதென்பது கடந்த நூறாண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. துவக்கமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் பாரத மாதாவை நினைவுறுத்தும் விதம். பின்னர் பீமனை பாரதப் புதல்வர்களின் பிரதிநிதியாக உருவகித்து எடுக்கப்பட்ட கீசகவதம் நாடகம்.  காந்தியை கிருஷ்ணனாக பாவித்து இந்திய பாகிஸ்தான் போரை குருஷேத்திர யுத்தத்தோடு ஒப்பிட்டு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்ட குருஷேத்திரம் எனும் நாடகம்.  இவ்வாறாக ஒரு தேசிய அளவிலான தலையாயப் பிரச்சனையை உரக்க ஒலிக்கவைக்கும் பொருட்டு புராணங்களும் இதிகாசங்களும் எடுத்தாளப்பட்டுள்ளன.  ஏனெனில் அந்த இதிகாச கதாபாத்திரத்தின் குரல் ஒவ்வொரு இந்திய மனதின் குரலும் கூட.  அந்த வரிசையில் வெண்முரசு இந்து மதத்தின் பண்பாட்டின் மீதும் அதன் தத்துவச் சிந்தனை மரபின் மீதும் புத்தொளிப்பாய்ச்சி நவீன எழுத்துமுறையின் அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கி மறுகட்டுமானம் செய்து வருவது இன்றைய காலத்திற்கும் இனி வருங்காலத்திற்குமான ஓர் அத்தியாவசியத் தேவை என்றே கொள்ளலாம்.  புராணங்களின் மீதான வழமையான கற்பிதங்களை போட்டுடைத்து அதன் புதிய பரிமாணத்தை காணச் செய்யும் ஜெவின் மகத்தான இந்த எழுத்துப்பணி மாதுளையை உடைத்து அதன் முத்துக்களின் சுவையறியச் செய்தல் போல. 

எஸ் எல் பைரப்பாவின் பர்வா நாவல் ஆண்களின் ஆணவங்கள் மோதிக்கொள்ளும் குருஷேத்திர யுத்தத்தை பெண்களின் பார்வையில் முன்வைக்கும் விதத்தில் ஒற்றை இலக்கோடு மட்டுமே எழுதப்பட்டது.  ஆனால் வெண்முரசின் பரந்துபட்ட களம் உலகில்  இதுவரை எந்த இலக்கிய முன்னோடியும் முன்னெடுக்காதது.

மேலும் இடதுசாரிகளின் முதற்பாடநூலான ஏங்கல்ஸின் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூலை வாசித்த எந்தவொரு இடதுசாரியும் வெண்முரசை கொண்டாடவே செய்வார்.  துரதிஷ்டவசமாக அவர்களிடையே ஏங்கல்ஸின் நூல் அடுத்தவர்க்கான சிபாரிசுநூல் மட்டுமே என்பதைத்தாண்டி பரவலான வாசிப்பிற்கு உள்ளாகவேயில்லை.

வெண்முரசு இந்தியிலோ ஆங்கிலத்திலோ மொழியாக்கம் செய்யப்பட்டு இந்திய அளவில் கொண்டுசெல்லப்படவேண்டிய ஓர் அளப்பரிய சாதனை என்பதில் துளி ஐயமில்லை.  அதற்கான ஒருவன் வரும் வரை பொறுத்திருந்து காத்திருப்பதைத் தவிர நமக்கும் வேறு வழியில்லை.  ஏனெனில் கேரளத்திலோ கர்நாடகத்திலோ இலக்கியத்தின் நிலை வேறு.  இந்நேரம் வெண்முரசு சில நூறு ஆங்கில மொழிபெயர்ப்புகளை கண்டிருக்கும்.  யக்ஷகானத்திற்கும் கதகளிக்கும் உள்ள அவர்களின் ரசனையும் வரவேற்பும் நமது  தெருக்கூத்திற்கோ தோல்பாவைக்கூத்திற்கோ இல்லை என்பதுதான் நிதர்சனம்.

வெண்முரசின் கதாபாத்திரங்களிலேயே பாவண்ணன் தனிச்சிறப்பாக விதந்தோதியது அணுக்கச்சேடி கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தையும்  வடிவமைப்பையும் தான்.

பாவண்ணன் சிறப்புரையைத் தாண்டி அமர்வை கொண்டு செல்வதில் எவ்வித முன்திட்டமிடலுமின்றிய நிலையில் நிகழ்வு நீர் வழிப்படூஉம் புணை போல தன்னொழுக்கில் முறைவழிப்பட்டு நிறைவடைந்ததில் பேரானந்தம்..

மிக்க அன்புடன்
மணிமாறன்.
















No comments:

Post a Comment

புதுவை இளம் எழுத்தாளர் அரிசங்கர் கௌரவிக்கப்பட்டார்.

 தேதி 27.04.2024 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல்  மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியி...