Saturday, 14 September 2024

புதுவை வெண்முரசு கூடுகை 75 சிறப்பமர்வில் திருமதி சித்ரா அவர்கள் உரையின் எழுத்து வடிவம்

 



காண்டீபம் என்றாலே முதலில் நினைவில் வருவது பாரதியின் பாஞ்சாலி சபதம் தான். மஹாபாரதத்தில் முதலில் பரிட்சயமான கதாபாத்திரம் அர்ஜுனன் தான். அதனால் வெகு விரைவாக இந்த 

கதையோடு ஒன்றிவிட முடிந்தது என்றே கூற வேண்டும். சின்னஞ்சிறு கூழாங்கற்களை மலை என எண்ணி ஏறும் எறும்பு போல என்னுடைய  இக்கதையின் அவதானிப்புகளையும் அனுபவங்களையும் பகிர்கிறேன்.

அர்ஜுனனின் முதல் திறப்பு தொடங்குமிடம் உலூபியின் காதல் வழியே அவன் சென்றடையும் "பிறிதொன்றிலாமை". "பிறிதொன்று, பிறிது, பிறன்  என்பதைப் போல் நச்சுநிறைந்த கோப்பை உண்டா என்ன? பிறிது என்னும் சொல்லைப்போல் இரக்கமற்றது எது?" என்ற வரிகளை படிக்கும் போது திரு.ஜெயமோகன் அவர்களின் சங்கச்  சித்திரத்தின் "யாதும் ஊரே யாவரும் கேளீரின்" இலக்கிய அனுபவம் நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

அந்த அனுபவத்தில் குரு.நித்யா அவர்கள் "பிறன் " என்பதும் "பிறிது " என்பதும் சுருங்கி வருவதே மேம்பட்ட சமூகம் என்று கூறுகிறார்.

அர்ஜுனன், போரும் ஆயுதமும் குருதியும் என்றும் வாழ்ந்திருந்தவன், இந்த பயணத்தில் இறுதியில் குருதி விழுந்த நீரை அருந்த கூசியபோது, அந்த ஒரு நொடி அவனுடைய "பிறன்" சுருங்கியதை உணர முடிந்தது.

காதல் என்றாலே கண்களின் வழியே என்ற பொது கருத்து ஒன்று உண்டு.அனால் புன்னகையை பற்றி யாரும் பெரிதாக பேசியதில்லை. "எயினி" என்று  சுபகையை  அழைத்த  அர்ஜுனன்  அவளின்  புன்னகையாலே ஈர்க்கப்பட்டிருக்கிறான். நெருங்கியவர்கள் நம்மை பார்த்து புன்னகைக்கும் விதத்தில் தான் எத்தனை எத்தனை அழகுகள். "எயினி" யிலிருந்து விநாயகர் மந்திரத்தின் "இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை" என்பதை புரிந்து கொண்டேன்.

சித்ராங்கதையின் பயணத்தில் அர்ஜுனனின் ஆடல் கலையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஒருவனின் மாற்றுரு என்பது ஆடை மாற்றமும் ஒப்பனையும் அல்ல. மாற்றுரு என்பது அசைவுகளில் நிகழும் மாற்றம். பரதநாட்டியம் ஆடுகையில், ஒருவர் நேர்த்தியாக ஆடினால் அவர்களின் உருவம் விலகி அந்த ஆடலின்  அழகு முழுமை கொண்டு விடுவது போல.

அர்ஜுனன் அது நாள் வரையில் குந்தியிடமும், திரௌபதியிடமும் அருவருத்த ஒன்று முற்றிலும் இல்லாதவளாகிய  சுபத்திரையை சந்திக்கிறான். கனிதல் என்பது மட்டுமே தன முழுமை. முழுமையல்லாத எதுவும் வெற்றி அல்ல என்று கூறும் சுபத்திரையை ஒரு நொடியும் ரசிக்காமல் இருக்க முடியவில்லைதனக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதில் தான் அவளுக்கு எத்தனை தெளிவு. அத்தெளிவு அவள் கனிவிலிருந்து உருவாகி இருக்கலாம் என்பதே எண்ணம்.

 

அத்தனை பெண்களும் கனவு காணும் அர்ஜுனனை, ஆரம்பத்திலிருந்தே கசந்தவள் அவள். அதற்கான கசப்பு தொடங்கிய புள்ளியை தொட்டு எடுத்து, அர்ஜுனனை உளம் குன்ற செய்பவள். அவன் தவறை சுட்டிகாட்டுபவள். அவன் கீழ்மையை உணர செய்பவள். வேறு எந்த பெண்டிரும் அவன் வாழ்வில் அதை செய்யவில்லை. "குருதித் துளி வீழ்ந்த நீரை அருந்தக் கூசிநின்றிருந்த சிவயோகியைத்தான் நான் உளம் ஏற்றேன்" என்று கூறுகையில் அவளின் உறுதியும் கனிவும் மேலும் வெளிப்படுகின்றது.

"விரும்பாத ஆண்மகனை விழைவை காட்டி உடன் நிறுத்துவது எனக்கு இழிவு", என்று அவள் கூறுபோதும் "கரந்து  வந்தது நீங்கள்,அதில் எனக்கு பொறுப்பில்லை" என்று கூறும்போது சுபத்திரையின் தனித்துவம் மின்னுகிறது என்றே கூற வேண்டும்.

ஐந்தில் ஒரு பங்கல்ல, முழுவதுமாக எனக்கே வேண்டும் என்று மாலினியிடமும், உலூபியிடமும் விண்ணப்பம் வைத்த அர்ஜுனன் என்னும் குழந்தை, நேமிநாதரின் மேன்மையை கண்டு அது தனக்கில்லை என்பதை தெளிந்து,  "நான் அஞ்சுவது என் விழைவையே" என்ற அறிதலில் மூலம்  தன் பயணத்தை முதிர்ச்சியுடன் தொடங்குகிறான்













No comments:

Post a Comment

நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...