Monday, 15 September 2025

நானொரு தேனீ - 9 - இராச.மணிமேகலை

 நானொரு தேனீ - 9



இலக்கியம் ஒரு கலை வடிவம்; காலத்தைக் காட்டும் கண்ணாடி.

ஓவியம், சிற்பம், நாடகம், நாட்டியம், இசை உள்ளிட்ட அனைத்துக் கலைகளுக்கும் தாய் இலக்கியமே! இலக்கியம் காட்டும் காட்சிகளே ஓவியமாக, சிற்பமாக, நாடகமாக,  நாட்டியமாக, இசையாக மிளிர்கிறது. சங்க இலக்கியக் கவிதைகளை ஓவியத் தன்மையில், நாடகத் தன்மையில் கண்டு, உணர்ந்து ரசிக்காதவர்களே இல்லை எனலாம். 

      கவி  நான்கு வகைப்படும். ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்பன. 

ஆசுகவி என்பது ஒரு சொல்லோ, பொருளோ கொடுக்கப்பட்டவுடன் அடுத்த நொடியில் பாடப்படுவது. 

இக்கவி புனைவதில் கவி 

காளமேகப் புலவர் வல்லவர். 'ஆசுகவிப் புகழ் காளமேகமே' 

என்று சிறப்பிக்கப்படுபவர். 

மதுரகவி என்பது சொல் நயம், பொருள் நயம், அணிநயம், தொடைநயம் அமையப் பாடப்படுவது. மதுரகவியாழ்வார் என்ற ஆழ்வார் இக்கவியால்  பெயர் பெற்றவர் போலும். 

வித்தாரக் கவி என்பது விரிவாகப் பாடப் படுவது. விஸ்தாரமாக, வித்தாரமாகப் பேசுதல், 

என்பது பேச்சு வழக்கு. 

வக்கணையாக  பேசுதல். 

தொடர்நிலைச் செய்யுள்கள்

எல்லாம் வித்தாரக் கவியின் பாற்படும்.                     

ஓவியம், அலங்காரம், அழகு, அதிசயம் ஆகிய தன்மைகளைக் கொண்டது சித்திரக் கவி.  

இது சொற்சித்திரம், வடிவச் சித்திரம் என  இருவகைப்படும். திருஞானசம்பந்தர் இயற்றிய 'திருவெழுக்கூற்றிருக்கை'

தமிழின் முதல் சித்திரக் 

கவியாகும். சித்திரக் கவியை இயற்றுவதற்கு துல்லியமான இலக்கண அறிவும், கணித அறிவும் தேவைப்படுகிறது. யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம், மாறனலங்காரம், குவலயானந்தம், முத்துவீரியம், வீரசோழியம் போன்ற இலக்கண நூல்களில் இக்கவி பாடப்பட வேண்டிய முறைகள் கூறப்பட்டுள்ளன. தகர வர்க்கம்,

ககர வர்க்கம், வினாவிடை முதலான வகைகளில் அமைந்தவை சொற்சித்திர வகைப் பாடல்கள். வடிவச் சித்திரத்தில்  செய்யுள்களைப் பொருத்த ஒவ்வொரு வகையான விதிமுறைகள் உள்ளன. ரதம், பாம்பு, மயில், சேவல்  வேல், லிங்கம் போன்ற ஓவியங்களில் செய்யுள்களை அமைத்துப் பாடுவர். சித்திரக்கவி வகைகள் நூற்றுக் கணக்கானவை. அவற்றில் சில மட்டும் உங்கள் முன். 


1) மாலை மாற்று


"வாயா யா நீகாவா யாதாமா தாமாதா

யாகாவா நீயாயா வா"


வாயா யா- எமக்கு கிடைக்காதன எவை?

நீ காவாய் - நீ எனக்கு காத்தருள்வாய்

யாதாம் - (இல்லையேல்) யாதாகும்?

மாது ஆம் மா தா- இம் மாது பெரிதாக

வருந்துவாள்

யா ஆகா -  (நீ நினைத்தால்) எவை முடியாதன?

 ஆயா நீ வா - யான் கூறியவற்றை ஆராய்ந்து நீ வருக

(தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்கு உணர்த்தியது)


       "ஆயர் தம் மாயா நீ வா

         ஆயா மாயா வா "

இது கவிஞர் வைரமுத்து எழுதிய விஸ்வரூபம் படப்பாடல். இவ்வரிகளை எங்கிருந்து எடுத்தார் எனத் தெரிகிறதா?  எவரென்று புரிகிறதா?


 அடுத்தப் பாடல்,

"பூவாளை நாறுநீ பூமேக லோகமே

பூ நீறு நாளைவா பூ"


"பூவாளை நாறும் நீ - இயல்பாய் பூப்பு இல்லாதவளை மணந்து 

புலால் நாற்றம் வீசும் நீ

பூ மேக லோகமே - பூவையும் பொன்னையும் மழையாகச் 

சொரியும் மேகமே!

பூ நீறு நாளை வா- பூவும் திருநீறும் தரித்து நாளையதினம் வருவாயாக

பூ - இவள் இப்போது பூப்பினவளாய் இருக்கிறாள்."  என்பது 

இப்பாடலின் பொருள்.

 (பரத்தையர் சேரி மீண்ட தலைவனுக்கு தோழி கூறியது) 


2) நாக பந்தம்


இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து தலைகளை உயர்த்தி நிற்பது போன்று சித்திரம்

எழுதி ஒரு பாம்பின் தலையிலிருந்து

வால்வரை நேரிசை வெண்பாவும், 

மற்றொரு பாம்பில் இன்னிசை வெண்பாவும் வருமாறு அமைப்பது நாகபந்தம். இதில் பாம்பு உடல்கள் சந்திப்பில் வரும் எழுத்துகள் இரண்டு வெண்பாவுக்கும் பொதுவானவை.


1. நேரிசை வெண்பா


அருளின் றிருவுருவே 

அம்பலத்தா யும்பர்

தெருளின் மருவாரு சிர்ச்சீர் -பொருவிலா

வொன்றே யுமையா ளுடனே 

யுறுதிதரு

குன்றே தெருள வருள்

              

"அறத்தின் அழகிய மேனியாய்!

திருச்சிற்றம்பலம் உடையாய்!

தேவர்கள் அறிவிற்கும் எட்டாத புகழ்ச்சியுடையாய்! ஏகரூபத்தினை யுடையாய்! உமையவளுடன் கூடி எமக்கு சிவபதம் அளிக்கும் மலை போல்வாய்! நாங்கள் தெளிவுபெற அறிவினை அருள்வாயாக!


2. இன்னிசை வெண்பா


மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு

பெருகொளியான் றேயபெருஞ் சோதி

-திருநிலா

வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த

மயரு மளவை ஒழி.

               

"நின்னை அடைந்தவருள்ளத்தில் நிலைபெற்ற ஒளியாய் உள்ளவனே!

நீலகண்டத்தினுடைய பெருஞ்சோதி

வடிவானவனே! அழகிய மதியை யுடைய வானம் சிறிதாகுமாறு பெருகிய ஒளித் திருமேனியனே! 

என் சித்தம் உன் திருவடிகளை மறவாதிருக்க அருள்வாயாக!"


3) சக்கர பந்தம்


சக்கர வடிவத்தில் ஏதேனும் ஒரு சுழற்சி முறையில் பாடலை அமைப்பது. 


"மேரு சாபமு மேவுமே

மேவு மேயுண வாலமே

மேல வாமவ னாயமே

மேய னானடி சாருமே'


இது நான்கு ஆரைச் 

சக்கர பந்தம்.

இப்பாடலை அமைக்க முப்பத்தியிரண்டு எழுத்துகள் பதினேழாகச் சுருங்கும். நடுவில் உள்ள  'மே'  என்ற 

எழுத்து எட்டுமுறை 

வாசிக்கப்பட்டு எட்டெழுத்தாகும். ஆரக்காலில் நின்ற எட்டெழுத்துகளும் இருமுறை வாசிக்கப்பட்டு  பதினாறு எழுத்துக்களாகும். சுற்றுப்பாதையில்

உள்ள எழுத்துக்கள் எட்டு. ஆக எழுத்துக்கள் முப்பத்தியிரண்டும் பதினாறாக அடங்கும். 

"மேரு மலையை வில்லாக கொள்பவனும், ஆலகால நஞ்சை உணவாக உண்டவனும், பரிவாரமாகிய  மேன்மை வாய்ந்த பூதகணங்ளை பரிவாரமாகக்  

கொண்டவனுமாகிய சிவனின்

 பாதம் பற்றுவீராக!  "இது 

ஆறாரைச் சக்கரபந்தம், எட்டாரைச் சக்கரபந்தம் என்ற வகையிலும் பாடப்படும்.


4) சுழிகுளம்


குளத்தில் எறியப்படும் கல் சுழிசுழியாய் அலைகளை உண்டாக்குவதைப்போல எழுத்துக்களை சுழி அமைப்பில் பொருத்திப் பாடுவது சுழிகுளம். ஒவ்வொரு அடியிலும் எட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுள் மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும்

முடியும்படி பாடப்படுவது.


"கவிமுதி யார்பாவே

விலையரு மாநற்பா

முயல்வ துறுநர் 

திருவழிந்து மாயா"


"செய்யுள் இயற்றுவதில்  முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே விலை மதித்தற்கரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாம். முயற்சி செய்து நன்கு கற்றவர் பாடும் பாடல்கள் அழியாத செல்வமாகும்" என்பது இப்பாடலின் பொருள்.


5) இரத பந்தம்

"இருள் பொருதா வம்பலச்சித் 

தென்னு முருகா நீ

டிருவிண்ணோர் தேடுமருந் தேமாண்

-பொருவாச்சீர்

தேசுதருஞ் செந்தீநறுந் தீர்த்தவிற லோங்குசிதா

வாசிறந்த மாவின் பருள்"


இப்பாடல் பாம்பன் சுவாமிகள் அருளிய சக்தி வாய்ந்த மந்திர பந்தங்களில் ஒன்றாகும். 

இப்பாடல் குறிப்பாக வாகன விபத்துகளைத் தடுக்கவும், பாராயணம் செய்து 

பாடினால் பயணங்களின் 

போது பாதுகாப்பாக  இருக்கவும் உதவுகிறது.  இப்படிப் 

பாடலை அமைப்பதற்கு 

அபரிதமான இசைஞானமும், இலக்கணப் புலமையும் தேவை. திருஞானசம்பந்தரின் 'திருவெழுக்கூற்றிருக்கை' ரத பந்தப் பாடல் வகையது. அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் இப்பாடல் பாடுவதில் வல்லவர்கள்.


6) விருச்சிக பந்தம்

தேளின் உருவம் போன்ற ஓவியத்தில்

முன்புறத்திலுள்ள இடுக்கி ஒவ்வொன்றிலும் நந்நான்கெழுத்தும்

தலையில் ஒன்றும் முதுகில் ஐந்தெழுத்துகளும், ஒருபக்கத்திற்கு

நான்கு கால்களும் இரு பக்கங்களில்

எட்டு எழுத்துக்கள் மணியொன்றிற்கு

ஓரெழுத்தாக கொடுக்கிலுள்ள 

ஆறுமணிகளிலும் ஆறெழுத்துகளும்

அமைய, வலப்பக்க இடுக்கியில் ஏறியிறங்குமாறு எழுத்துகள் மாலைமாற்றாகப் பொருந்தப் பாடுவது விருச்சிக பந்தம் ஆகும்.


"திங்கண்முக மானேதேனே

மாகச் செங்கமல

மங்கைதிற நின்வாய் மலர்"


என்ற பாடல் தேளின் ஓவியத்தில் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். 


    

இறுதியாக, சித்திரக்கவிகளை எழுதுவதும், அவற்றை சித்திரத்தில் பொருத்துவதும் சவாலாயிருந்த காரணத்தாலும், இன்ன இன்ன வகைகளில் எழுதவேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்ததாலும் இவ்வகைக் கவிகள் எழுதுவதில் பலரும் ஆர்வம் இழந்தனர். இவைகள் மூளைக்குச் சவாலாக இருந்தனவேயன்றி இதில் இலக்கிய நயங்களோ, சிறப்புகளோ இல்லை எனப் புலவர்கள் கருதியதால் நாளடைவில் மெல்ல மெல்லச் செல்வாக்கை இழந்தன.


உசாத்துணை :

1. சித்திரக் கவி விளக்கம்

2. தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

சித்திரக் கவிகளின் சித்திரங்களை கீழே கண்டு இன்புறுங்கள்!









Tuesday, 9 September 2025

நானொரு தேனீ- 8 - இராச.மணிமேகலை

 நானொரு தேனீ- 8



தனிப்பாடல் திரட்டில் இருந்து நான் சுவைத்த பாடல்களைத் திரட்டி உங்கள் முன் வைக்கிறேன். இந்த தனிப்பாடல்கள் பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. புலவர்கள் தம் வறுமையை, வாழ்க்கைப்பாட்டை, சரி செய்துகொள்ள மன்னர்களை, வள்ளல்களை நாடிச் செல்லும்போது ஏற்படுகிற இடர்ப்பாடுகளை மனம் வருந்தியும், கேலியாகவும், பல சமயங்களில் நிந்தித்தும் பாடல்களாகப் பாடியுள்ளனர். அது மட்டுமே தான் தனிப்பாடல்களில் உள்ளனவா எனில் இல்லை, சமூக அவலங்களைச் சாடுதல், அரசர்களுக்கு அறமுரைத்தல் சார்ந்த பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 90க்கும் மேற்பட்ட புலவர்களின் பாடல்கள் இத்திரட்டில் உள்ளன. அவைகளில் நான் ரசித்து மகிழ்ந்த பாடல்களில் இருந்து சில.


1)  "வீரஞ் சொரிகின்ற பிள்ளாய்!

உன்றனக்குப் பெண் வேண்டு

மென்றால் ஆருங் கொடார்; உங்களப்பன் கபாலி

அம்மான் திருடன்;  ஊருஞ் செங்காடு;

நின்றன் முகம் யானை; உனக்கிளையோன் பேருங் கடம்பன்;

நின்தாய் நீலி 

நிற்கும் பெருவயிறே!

           

"வீர தீரச் செயல் புரிகின்ற பிள்ளையாரே!  உனக்கு திருமணஞ் செய்ய யாரும் பெண் கொடுக்க மாட்டேன்கிறார்கள். ஏன் தெரியுமா?உன் தந்தையோ  மண்டையோட்டைக் கையில் ஏந்தியிருக்கும் கபாலி;

அவன் குடியிருக்கும் இடமோ சுடுகாடு; உன் மாமன் வீடு வீடாகச் சென்று வெண்ணெய் 

திருடித் தின்பவன்;  உன் தம்பி கடம்பன்(முரடன்);  உன் தாயோ நீலி (கருப்பி);  உனக்கோ யானை முகம், பானை வயிறு இப்படிப்பட்ட உனக்கு யார் பெண் தருவார்கள்?"


கண்ணுக்கு  லட்சணமாக இருக்கிற, சம்பாதிக்கிற ஆண்பிள்ளைகளுக்கே திருமணம் நிகழ்வது அவ்வளவு எளிதில்லை. அதிலும் இவர் அரசமரத்தடி பிள்ளையார். குளித்துக் கரையேறுகிற பெண்களை சும்மா உட்கார்ந்து வேடிக்கைப்  பார்த்துக் கொண்டிருப்பவர். குடும்பமும் இப்படியாகப்பட்டது.  எப்படி திருமணம் ஆகும்?  இதனைக் கவி வீரராகவர்  இகழ்வது போலப் பழிப்பது என்ற வஞ்சப் புகழ்ச்சியணியால் பாடியிருக்கிறார். வடமொழியில் இதனை நிந்தாஸ்துதி என்பர்.


2)   சோழனது அரசவை. 

கம்பர், ஔவையார், ஒட்டக்கூத்தர் முதலான புலவர்கள் இருக்கிறார்கள். (ஔவையார் எத்தனை பேர் என்ற ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இவர் கம்பர் காலத்தவர். சங்ககால ஔவை ஒருவர் இருக்கிறார்).அப்போது கம்பர் ஔவையிடம் சிலேடையாகவும், அவரை சீண்டும் விதமாகவும் (அப்பவே eve teasing)

"ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி அது என்ன?" எனக் கேட்டாராம்.  ஒரு கால் அடி= ஒரு கால் இருக்குமடி; நாலிலைப் பந்தலடி = நான்கு இலைகளை உடைய பந்தல் போல் இருக்குமடி. இதில் வரும் 'அடி' என்னும் சொல் ஔவையை மதிப்பு குறைவாக விளிக்கும் வகையில் இருந்ததைக் கவனித்த ஔவை பாட்டு வடிவில், சிலேடையில் பதிலளித்திருக்கிறார்.


"எட்டே கால் லட்சணமே! எமனேறும் பரியே!

மட்டில் பெரியம்மை வாகனமே!

முட்டக் கூரையில்லா வீடே! குல ராமன் தூதுவனே!

ஆரையடா, சொன்னா யடா?"


8, என்பதன் தமிழ் எண்ணுரு 'அ'.

கால் என்பதன் எண்ணுரு 'வ'

எட்டேகால் லட்சணமே-அவலட்சணமே

என்று ஒரு பொருளும், கால்களை எட்டிப்போட்டு நடக்கும் காலழகா என்றும் பொருள்படும்.


எமனேறும் பரியே- எமன் ஏறும் வாகனமாகிய எருமைக்கடாவே என்றும், எம்முடைய வளரும் செல்வமே என்றும் பொருள்படும்.


மட்டில் பெரியம்மை தேவியே- சீதேவிக்கு மூத்தவளான மூதேவியே.


முட்ட மேல் கூரையில்லா வீடே- குட்டிச்சுவரே என்று ஒரு பொருளும்

தேவலோகத்தோனே என்றும் பொருள்படும்.

குலராமன் தூதுவனே-குரங்கே என்றும், ராமதூதனே என்றும் பொருள்படும். 

ஆரையடா-நீ சொன்னது ஆரைக் கீரை யடா என்று ஒரு பொருளும், 

நீ யாரையடா, சொன்னாயடா யாரைப் பார்த்துக் கேட்டாயடா என்றும் பொருள்பட்டது. 

எப்படி இருக்கிறது இந்த சண்டை?  'ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே?  நமக்கு சிலேடையான பாடல் கிடைத்தது.


"அவலட்சணமே! எருமைமாடே!

மூதேவியே! குட்டிச்சுவரே!

குரங்கே! யாரைப் பார்த்தடா,

சொன்னாய்  அது?"

கம்பரை நினைத்துப் பாருங்கள்!


இன்னொரு பாடல் இதுவும் ஔவையுடையதே. ஒருமுறை இவரிடம் உலகில் மிகப் பெரியது எது? எனக் கேட்டார்களாம். அதற்கான விடையாக இப்பாடல்


"பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!

பெரிது, பெரிது, புவனம் பெரிது!

புவனமோ, நான்முகன் படைப்பு!

நான்முகன் கரியமால் 

உந்தியில் வந்தோன்!

கரியமாலோ அலைகடல் துயின்றோன்!

அலைகடல் குறுமுனி

கலசத்துள் அடக்கம்!

கலசமோ புவியிற் சிறுமண்!

புவியோ அரவினுக்கு

ஒருதலைப் பாரம்!

அரவோ உமையாள் 

ஒருசிறு மோதிரம்!

உமையோ இறைவர் 

பாகத்து ஒடுக்கம்!

ஈசனோ தொண்டர்தம் 

உள்ளத்து ஒடுக்கம்!

தொண்டர் தம் பெருமை

சொல்லவும் பெரிதே?"


இப்பாடலின் சிறப்பை என்னவென்று

சொல்வது?  இப்பாடலில் அந்தாதித் தொடை பயின்று வந்துள்ளது. 

பணம் படைத்தவனும், அதிகாரம் கையில் வைத்திருப்பவனும் பெரியவன் அல்ல.தொண்டர்கள் தான் உலகில் மிக மிகப் பெரியவர்கள்!   நல்ல தொண்டனாக இல்லாமல் ஒருவன் நல்ல தலைவனாக முடியாது. இதைப் படித்தவுடன் சுவாமி விவேகானந்தர்  'நீ எஜமானாவதற்கு சிறந்த வழி நல்ல வேலைக்காரனாக இருப்பதே. அப்பொழுது தலைமைப் பதவி உன்னைத் தேடி வரும்' என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தலைவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நல்ல தொண்டர்களாக இருந்தார்களா?


3)  ஆவீன, மழை பொழிய,

 இல்லம் வீழ,

அகத்தடியாள் மெய் நேவ,

மாவீரம் போகுதென்று 

விதை கொண்டோட,

வழியிலே கடன்காரன் 

மறித்துக் கொள்ள,

சாவோலை கொண்டொருவன் 

எதிரே வர,

தள்ளவொண்ணா 

விருந்து வரச்,

சர்ப்பந் தீண்ட,

கோவேந்தர் உழுதுண்ட 

கடமை கேட்க,

குருக்களோ தட்சணைக்கு

 குறுக்கே நிற்க,

 பாவாணர்  கவி பாடிப்

 பரிசு கேட்கப்,

பாவிமகன் படுந்துயரம் பார்க்க ஒண்ணாதே!"

                   - விவேக சிந்தாமணி


"பசு கன்று ஈன, மழை விடாது பொழிய, அதனால் வீடு இடிந்து விழ, பிரசவ வலி வந்து மனைவி வேதனைப்பட

வேலையாள் இறந்து விட, ஈரங் காய்ந்து விடுமென்று வயலில் விதைக்க விதை எடுத்துக் கொண்டு ஓட,  வழியிலே கடன்காரர் மறிக்க, உறவினர் இறந்ததற்காய்  ஒருவர் சாவோலை கொண்டுவர,  அன்று பார்த்து தவிர்க்கவொண்ணா விருந்தினர் வர அந்தச் சமயத்தில் அரசனின் தண்டல்காரன் வந்து தீர்வைக் கேட்க,  எதிர்ப்பட்ட குருக்கள் தட்சணை கேட்க,  இந்தப் பாவிமகன் படும்பாடு சகிக்க இயலாதே "

என்பது பாடலின் பொருள். 'கஷ்டகாலத்தில் ஒட்டகத்தின் மேலேறினாலும் நாய் கடிக்கும்' என்பது பழமொழி.  வாழ்க்கையில் ஒரே சமயத்தில் அடுக்கடுக்கான துன்பங்கள் நமக்குவரிசை கட்டி நிற்பதை எதிர்கொண்டிருப்போம். இராமச்சந்திரக் கவிராயருக்கும் இதே போன்ற சூழலில் எழுந்தது தான்  இப்பாடல் போலும்.


4) இதுவும் கவி வீரராகவருடையப் பாடல்தான்


"இம்பர்வான் எல்லை 

இராமனையே பாடி

என் கொணர்ந்தாய் பாணாநீ?

என்றாள் பாணி

வம்பதாம் களபம் என்றேன்

பூசு மென்றாள்

மாதங்கம் என்றேன்

யாம் வாழ்ந்தோ மென்றாள்

பம்புசீர் வேழமென்றேன் 

தின்னு மென்றாள்

பகடென்றேன் உழும் 

என்றாள் பழனந் தன்னை

 கம்பமா என்றேன்

நற்களியாம் என்றாள்

கைம்மா வென்றேன்

சும்மா கலங்கினாளே"


 பாணன் ஒருவன் இராமன் என்ற சிற்றரசனிடம் சென்று, பாடி,பொருள் பெற்று வீடு வருகிறான். பாணனின் மனைவி பாணி, 'ராமன் என்ன  கொடுத்தான்?' எனக் கேட்க, இவன் பதில் சொல்வதாக அமைந்த பாடல் இது. அரசன் யானையைக் கொடுத்து விட்டான். இதை எப்படி அவளிடம் சொல்வது? யானை என்று நேரடியாகச் சொன்னால் திடுக்கிடுவாள் என்றெண்ணி யானை எனப் பொருள்படும் வேறு வேறு சொற்களை அவிழ்த்து விடுகிறான். இவன், வம்பதாம் களபம் (வம்பு பண்ணுகிற யானை),

அவள், ஆகா (சந்தனம்) என நினைத்து 'பூசுங்கள்' என்றாள். இவன் மாதங்கம், (மதம் பிடிக்கும் யானை)அவள் மா தங்கம் என நினைத்து (பெரிய தங்கம்) நாம் இனிமேல் நன்றாக வாழ்வோம் என்றாள். 

இவன் பம்பு சீர் வேழம், (பெரிய தும்பிக்கை உடைய யானை) என அவள், (தோகை நீண்ட இனிய கரும்பு) தின்போம் என்றாள். இவன் பகடு என (ஆண் யானை)  

அவள் ( எருமை) என நினைத்து 'உழுவோம், என்றாள். இவன், கம்ப மா (கம்பத்தில் கட்டுகிற யானை)என்று சொல்ல அவள் (கம்பு மாவு) என நினைத்துக் களி கிண்டலாம் என்றாள். இவன் இதற்கு மேல் தாங்காது என்று 'கைம்மா' என்று சொல்லி வாசலுக்கு இழுத்துக் கொண்டு வந்து காட்டினான். அவள், 'ஐயோ! நான் என்ன செய்வேன்'? எனக் கலங்கி வீழ்ந்தாளாம். புலவன் யானைக்கு வழங்கும் பல பெயர்களை சிலேடையாக அமைத்த இப்பாடலின் சிறப்பு தான் என்ன ஒரு அருமை!


5)  " வஞ்சகர்பால் நடந்தலைந்த

காலில் புண்ணும்,

வாசல்தொறும் முட்டுண்ட

தலையில் புண்ணும்,

செஞ்சொல்லை நினைந்துருகும்

நெஞ்சில் புண்ணும்,

தீருமென்றே சங்கரன்பால் சேர்ந்தேனப்பா!

கொஞ்சமல்ல பிரம்படியின்

புண்ணும், வேடன் 

கொடுங் காலால் உதைத்த

புண்ணும், கோபமாக

பஞ்சவரில் ஒருவன் 

வில்லால் அடித்த புண்ணும்

பாரென்றே காட்டி நின்றான்

பரமன் தானே"


"வஞ்சனை உள்ளம் உள்ளவரிடத்து சென்று நடந்து நடந்து அலைந்ததால்  காலில் உண்டான புண்ணையும்,

ஒவ்வொரு வீட்டின் வாசலில் சென்று முட்டிக்கொண்டதால் தலையில் அடிபட்ட புண்ணையும், 'நம்முடைய நல்ல பாடல்களைக் கேட்டு ரசிப்பார் இல்லையே' என்ற ஏக்கத்தால் நெஞ்சில் உண்டான புண்ணையும் போக்குவீராக" என்று வேண்டிக் கொள்ள சிவபெருமானிடம் வந்தேன்.

ஆனால் அப்பெருமானோ, "பாண்டியன் பிரம்பால் அடித்ததால்

ஏற்பட்ட புண்ணையும், வேடனான கண்ணப்பன் தன் செருப்பணிந்த காலினால் மிதித்த போது உண்டான புண்ணையும், மிகுந்த சினத்துடன் பாண்டவரில் ஒருவனான அர்ஜுனன் வில்லால் அடித்த புண்ணையும் பார்!இவை உன்னுடைய புண்களை விட பெரியது" என்று காட்டினானாம். 

'கொடுமை கொடுமை என்று ஒருவன் கோயிலுக்கு போனானாம். அங்கொரு கொடுமை  ஜிங்கு ஜிங்குன்னு  ஆடுச்சாம்' என்று ஒரு பழமொழி உண்டு. புலவர் நகைச்சுவையாகப் பாடினாலும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சுறுதி வேண்டும் என்பது இப் பாடலின் உட்பொருள். இப்பாடலை பாடியவர் இராமச்சந்திர கவிராயர்.

தமிழிலக்கிய வரலாற்றில் தனிப்பாடல்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. இப் பாடல்களின் எளிமையும், அணிநயங்களும் படித்து ரசிக்கத் தக்கன.அனைவரும் சுவைப்போம்

விஷ்ணுபுரம் விருது 2025 ரமேஷ் பிரேதனுக்கு…புதுவை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பினர் வாழ்த்துக்களுடன் விருது செய்தியினை அறிவித்தனர்

  


விஷ்ணுபுரம் விருது 2025 ரமேஷ் பிரேதனுக்கு…புதுவை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பினர் வாழ்த்துக்களுடன் விருது செய்தியினை அறிவித்தனர்


தமிழில் முதன்மை இலக்கியப் பங்களிப்பாற்றிய மூத்த படைப்பாளிகள் விருதுகளால் புறக்கணிக்கப்படுவதை கண்டு அவர்களை கௌரவிக்கும் பொருட்டு 2010 ல் நிறுவப்பட்டது விஷ்ணுபுரம் விருது. குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெறாத படைப்பாளிகளுக்குரிய விருதாக இது அளிக்கப்பட்டு வருகிறது. தமிழின் முதன்மைப் படைப்பாளிகள் பலர் ஏற்றுக்கொண்ட பெருமைக்குரியது இவ்விருது.

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர், புனைவெழுத்தாளர், மற்றும் இலக்கியச் சிந்தனையாளர் என்னும் நிலைகளில் தமிழுக்கு பங்களிப்பாற்றிய ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது.






ரமேஷ் பிரேதன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 8 செப்டெம்பர் 2025 அன்று புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை நண்பர்கள் அரிகிருஷ்ணன், சிவாத்மா, யோகேஸ்வரன், கடலூர் சீனு , மணிமாறன், முத்துக்குமரன், சிவராமன், சரவணன் ஆகியோர் ரமேஷ் பிரேதனை நேரில் சந்தித்து மலர்ச்செண்டு அளித்து வாழ்த்துக்களுடன் செய்தியை அறிவித்தனர்.

டிசம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் இந்த விழா வழக்கம்போல கோவையில் நிகழும். முதல்நாள் படைப்பாளிகள் அரங்கு. இளம்படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள் ஆகியோருடன் வாசகர்கள் உரையாடலாம். இரண்டாம் நாள் விருதுவிழா. தமிழின் முதன்மையான இலக்கிய விழாவாக இன்று மாறிவிட்டிருக்கும் இந்த இலக்கிய ஒருங்கிணைவுக்கு நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

ரமேஷ் நீண்டநாட்களாக உடல்நலம் குன்றியிருப்பதை அறிந்திருப்பீர்கள். அவரை புதுச்சேரியில் இருந்து கோவை கொண்டுவர முயல்கிறோம். அவரும் ஆர்வமாகவே உள்ளார். இதற்கு முன் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து கலந்துகொண்ட நிகழ்வு பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விஷ்ணுபுரம் விழாதான்.

உடல்நலம் குன்றிய நிலையிலும் ரமேஷ் படைப்பாளிக்குரிய அக ஊக்கத்துடன் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரமேஷுக்கு இவ்விருதை அளிப்பதன் வழியாக விஷ்ணுபுரம் நண்பர்குழு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறது.

ரமேஷ் பிரேதன் rameshpredan@gmail.com. எண் 8903682251







ரமேஷ் பிரேதன். தமிழ் விக்கி

விஷ்ணுபுரம் விருதுகள் தமிழ் விக்கி

Sunday, 7 September 2025

தமிழ்க்கடவுள் யார் - உண்மையை தேடி - அனங்கன்

 ்்்்தமிழ்க்கடவுள் யார்..?.்்்்

(உண்மையைத் தேடி)




அன்பான உள்ளங்களுக்கு வணக்கம்இக்கட்டுரைத்தொடர் தமிழ்க் கடவுளைத்தேடி...அடையாளம் கண்டு ...உங்கள்முன் நிறுத்துவது அல்ல...கடவுளை மறுத்து பகுத்தறிவு வாதம் செய்வதுமல்ல.
ஏற்கனவே உள்ள தரவுகளில்...கட்டுரைகளில்...விவாதங்களில் உள்ளவற்றைத் தெளிந்தும்...சிலவற்றைத் தெளியாமலும் உங்கள் முன்வைக்கிறேன் அவ்வளவே.

அதற்குத்தேவையென்ன வந்தது....? தேவையொன்றும் இல்லைதான்...ஏற்கனவே உள்ள தலைவலி போதாதா...இதுவேறா என்று நீங்கள் முகம் சுளிக்கக் கூடும்.

நாம் நம்பிக்கொண்டிருக்கும்
எத்தனையோ செய்திகள் ...உண்மையில் நம்பிக்கைக்கு உகந்தவை தானா...! அவற்றின் மூலமென்ன...? வேரைத்தேடி வெளிச்சம்காட்ட முயலும் ஒரு உந்துதல்தான் இது...இதனால்
யாருக்கும் பெரிதாய்ப் பகுத்தறிவோ...அவநம்பிக்கையோ ஏற்படப்போவதில்லை.

விழுந்தால் மாங்காய்...போனால் கல்லென்ற குருட்டு முயற்சியும்
இல்லைஎன்னாலான சிறுமுயற்சி.பிடித்தால் படியுங்கள்...இல்லையேல் விரலால் தள்ளி விலகிச்செல்லுங்கள்.இனி கட்டுரைத்தொடர் உங்கள் பார்வைக்கு.
அனங்கன்.
770 855 7890.


கடவுள் யார்...?
(1)
நதி நீர்நிலைகளை ஒட்டியே பண்டையநாகரிகம் வளர்ந்தது.மக்கள் கூட்டம் கூட்டமாய்த்தான் வசித்தார்கள்தொடக்கத்தில் குகைமனிதனுக்கு இயற்கையின் நியதிகள் அச்சமூட்டினகாலப்போக்கில்
குழுக்களானபிறகு இயற்கையையும்...குழுவில் உயிர்த்தியாகம் செய்தவர்களையும்...முதாதையர்களையும்... கடவுளாய் கல்லைநட்டு
வணங்கினர்.

இங்ஙனம்நடுகல் வழிபாடு...சிறுதெய்வவழிபாடு
ஆரியர்களின் வருகையால் பல்வேறு கதைகளோடு நிறம் மாறியதுகுழுக்கள் சாதி...மதங்களாய்ப் பிரிந்தபிறகு...கடவுள்கள் பல்வேறு முறைகளில் அவரவர் மனநிலை...கற்பனைத்திறனுக்கு ஏற்பஉருமாறிப்போனார்கள்.
ஆதித் தமிழன் வழிபட்ட கடவுளென்ன ...வழிபாட்டு முறையென்ன என்பதற்கு வழுவான எந்த எச்சமும் இல்லை.
(தொடரும்.)


்்தமிழ்க்கடவுள் யார்...?்்
(உண்மையைத்தேடி)
(2)
தனக்குமேல் ஒருசக்தியுள்ளது
என்று மனிதன் ஆழமாய் நம்புவதால்....கடவுள் மனிதனுக்கு தவிர்க்கமுடியாத
ஒன்றாகிவிட்டது.
உலகம் ஒன்று மட்டுமே உண்மை...கடவுள் என்ற ஒன்று
இல்லையெனில்...."கடவுள்"
என்ற சொல் எவ்வாறு தோன்றியிருக்கமுடியும்....
பொருள் இல்லாமல் சொல்
கற்பனையில் தோன்றியிருக்கமுடியுமா...
அப்படியில்லை "எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவேஎன்கிறது தமிழர்களின் தொன்மையான
தொல்காப்பியம்.

விலங்குகளைப்போல காட்டுமிராண்டிகளாக வாழ்ந்துவந்த தொடக்ககால மக்கள்....வாழ்க்கையில் பலதொல்லைகளை எதிர்பார்த்தனர்...சந்தித்தனர்...
அவற்றில் இருந்து விடுபட முடியாதவர்களாய் திகைத்தனர்...அந்நிலையில் தம்மையும் மீறி தமக்கும் மேலாக ஏதோ ஒரு ஆற்றல் இருப்பதாக உணர்ந்தனர்...

உணர்வு நம்பிக்கையாயிற்று..
அந்த ஆற்றலின் உதவி கிடைத்தால் துன்பங்களிலிருந்து விடுபடலாம்...வெற்றிபெறலாம் எனநம்பினர்...அந்த ஆற்றலையே கடவுள் என்ற ஒன்றாகக் கற்பனைசெய்தனர்...அதன்வழியே கடவுள் உண்டாகிவிட்டார்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற எந்த
அகழாய்விலும்...அதாவது இரண்டாயிரம் ஆண்டுகள் முற்பட்டதாய் கருதப்படும் இடங்களில் எந்தக்கடவுளும்
...கடவுளுக்காக செய்யப்பட்ட
சடங்குகளுக்கான தடயங்கள்
எதுவும் கிடைக்கவில்லை.
மனிதன் கடவுளை வழிபட்ட ஆதாரம் எதுவும் எந்த அகழாய்விலும் கிடைக்கவில்லை.

கீழடி...மற்றும் ஆதிச்சநல்லூர்(கி.மு.1600 ஆண்டுகளுக்கு நாகரிகத்தோடு தொடர்புடையதுஇவ்விரு இடங்ளிலும் கடவுளுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.( கிடைத்தும்
உண்மை வெளியானால் நிறையக் கதைகளை மாற்றவேண்டியதிருக்கும் என்பதால் மூடிமறைத்துவிட்டார்களோ எனத்தெரியாது)

அப்படியானால் பண்டையத்தமிழனுக்கு கடவுள் வழிபாடு இல்லையா...
அவன் நம்பிக்கை எதனைச்சார்ந்தது...அவர்களின் குழுக்களை ஒருங்கிணைத்தது எது...?
(தொடரும்)


்்் தமிழ்க் கடவுள் யார்..?்்்
(உண்மையைத் தேடி.)
(3)

உணவுதேடிய சமூகமாக இருந்தபோது இறை என்பது...இயற்கை மற்றும் நடுகல் வழிபாட்டையே குறித்ததுவழிபடு என்றால் வணங்குதல் அல்லது பின்பற்றுதல்வழிபடு என்பதிலிருந்து வழிபாடு என்ற சொல் வந்தது.

சமைத்தல் என்றால் பக்குவப்படுத்தல்மனத்தைப்
பக்குவப்படுத்துவதால் சமைத்தல் என்ற சொல்லிருந்து சமயம் வந்தது.

கட+உள்உள்ளே உள்ள ஆத்திரம்...கோபம்..பொறாமை..வஞ்சகம்...காமம் இன்னும் பலவற்றைக் கடந்து இறைவனை உள்வாங்குவதால் கடவுள் என்ற சொல் வந்தது.

இங்ஙனம் பொருள் உணர்ந்துசொற்கள் தன்னை இனங்காட்டுவது...தமிழுக்கு உள்ள பெருமை.இருக்கட்டும்....

இயற்கைவழிபாட்டின் தொடர்ச்சியாக...மரவழிபாடு
உருவானதுஇதன் வெளிப்பாடாக கோவில்களில்
தலமரம் இருப்பதை இன்றும் காணலாம்.

உணவுதேடிய சமூகம் உணவு உற்பத்திசெய்யும் சமூகமாக மாறியபோது...நிலஉடமையின்
பொருட்டு பலகுழுக்களாகப் பிரியத்தொடங்கியதுஇந்நிலையில் குழுவின் தன்மை பொறுத்து சிறுதெய்வ
வழிபாடாகிய நாட்டார் தெய்வ
வழிபாடு தோன்றியது.

பூசாரிகள்...பலியிடுதல்...வேலன் வெறியாட்டம்...குரவைக்கூத்தாடுதல் போன்ற வழக்கங்கள்
தோன்றின.

வேலன் வெறியாட்டமென்பது
வேட்டைக்கு சென்று திரும்பியவர்கள் ஓய்வுநேரங்களில் தாம் வேட்டையாடிய அனுபங்களை
யாரோ ஒருவன் நடித்துக்காட்ட...அதை மற்ற ஆண் பெண்டிர் வேடிக்கை பார்த்து மகிழ்வதுண்டுஇதுபிற்காலத்தில் வேல் ஏந்திய வேலனோடு தொடர்புஏற்படுத்தி ...வேல்வழிபாடாக மாறத்தொடங்கி காலப்போக்கில் அழிந்து மீண்டும் புத்தாக்கம் பெறத்தொடங்கிவிட்டது.

ஆரியர்களின் வருகைக்குப்பிறகு...தமிழ்நாட்டில் சமயச்சூழல்மாறி..சிறுதெய்வவழிபாடுகள் குறைந்து பெருந்தெய்வவழிபாடாக மாறியது.

சிறுதெய்வங்களை வழிபட்டவர்கள் ...பெருந்தெய்வங்கள் இருந்தகோவிலுக்குள்
நுழைவதற்கு அனுமதிமறுக்கப்பட்டு போராடும் காலம் வந்தது .

ஆலயம் உள்நுழைவதற்காக அரசியல் போராட்டம் தன்னை
முன்நிறுத்திக்கொண்டது.

...கோவிலை உருவாக்கியவர்கள்...அதற்காகப்பாடுபட்டவர்கள்...தெய்வம்
ஒன்றே என்பதை உணராமல்
சிறுதெய்வங்களை ஒதுக்கி...
பெருந்தெய்வங்களை வழிபடுவதுதான் பெருமை என்பதுபோல் இன்று பெருங்கோவிலை நோக்கி படையெடுக்கிறார்கள் என்பது தற்போது நடைமுறையில் காணும் உண்மை.



்்்தமிழ்க்கடவுள் யார்...?்்்
(உண்மையைத் தேடி)
(4)

சிந்துவெளி நாகரிகம் சுமார் 5000 ஆண்டுக்கு முற்பட்டதாய்க்
கருதுகிறார்கள்...எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை...நிறையச்செய்திகளை அனுமானமாய்த்தான் சொல்லமுடிகிறதே தவிர...தீர்மானமாய்ச்சொல்லமுடியவில்லை.
அகழாய்வுகளின் முடிவுகளை அரசாங்கம் தீர்மானிக்கிறது..அதில் ஆள்வோர்களின் எண்ணமே முடிவாய் வெளிப்படுகிறது.போகட்டும்.

சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்திரை பல்வேறு கேள்விகளுக்கு உட்பட்டதாய் இருக்கிறது...

முத்திரையில் காண்பது சிவன்
என்று கூறுகிறார்கள்...இறைநம்பிக்கையாளர்கள்...இல்லையென்று மறுக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

அதுயோகவடிவில் உள்ள பசுபதி முத்திரை.விலங்குகள் சூழ் பழங்குடி இனத்தலைவன்.

சிந்துசமவெளி அகழாய்வில்
வளத்தெய்வ உரு(இலிங்கம்)
வழிபாட்டிற்கான ஆதாரங்களைவிட...அதிகம் கிடைத்தது பெண்தெய்வச் சிலைகளேஎனவே தாய்ச் சமூகமாய் பெண்தெய்வங்களே அதிகம் வழிபட்டிருக்கப்படவேண்டுமென்பது...சேர்யோன் மார்சல் உட்படப் பலஅறிஞர்களின் முடிவாகும்.

உலகெங்கும் முதலில் தோன்றியது பெண்தெய்வழிபாடே என்ற வரலாற்றாளர்கள்...மானிடவியலாளர்கள் கருத்துடன் சிந்துசமவெளிப் பெண்தெய்வ
வழிபாடும் ஒத்துப்போகின்றது.

பாலைநிலத்தெய்வமான கொற்றவை தமிழனின் பெண்
தெய்வவழிபாட்டிற்கு முன்னோடிபோர்படைவீரர்கள்
வேட்டையாடுபவர்கள்...கள்வர்கள் தங்களின் வெற்றிக்காக
கொற்றவையையே வணங்கினார்கள்இத்தெய்வம் பெரும்பாலும் ஊருக்குவெளியே எல்லைகாக்கும் தெய்வமாக விளங்கி வந்தது.

இன்று கொற்றவை இல்லை...
பார்வதியாக...காளியாக...பல்வேறு அம்மன் வடிவங்களில்
தமிழனின் தொன்மை தெய்வமான கொற்றவை ....உருமாற்றம் செய்யப்பட்டுவிட்டதுஇது அந்தக் கடவுளுக்கே அடுக்காது.

தமிழின் முதல் இலக்கணநூல் தொல்காப்பியம்(அதுதான் கிடைத்தது...அதற்கு முன்னர்
உள்ள அகத்தியம் என்ற இலக்கணநூல் கிடைக்கவில்லை.இதற்கும் அகத்தியருக்கும் எந்தத் தொடர்புமில்லை....தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் சமஸ்கிருதம் ஊடுருவி விட்டது
என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.)

நிலங்களை நான்காகப் பிரித்து அதற்கான தெய்வங்களைக் கூறுகிறது...தொல்காப்பியம்.
முல்லை...குறிஞ்சி...மருதம்...நெய்தல்....காலமாறுபாட்டில்
இவை வறண்டு போனால் பாலை என்ற ஐந்தாம் திணை .

முல்லைக்கடவுள்....மாயோன்.
(கண்ணன்....திருமால் என்று பின்னர் திரிக்கப்பட்டிருக்கவேண்டும்... தமிழர்கள் வாழ்வில் கால்நடைகள் தவிர்க்கமுடியாதவை....எனவே ஆவினை மேய்க்கும் கண்ணன் தமிழ்தெய்வமாய்
இருந்திருக்கவேண்டும்கண்ணன் கருப்பு ....அது பழந்தமிழனுக்கே உரிய நிறம்.

அதுமட்டுமல்ல கண்ணனின் அண்ணன் பலராமன் வெண்நிறம் .கலப்பையை ஏந்தியவன் தமிழ் விவசாயக்குடிகளுக்கு தெய்வமாய் இருந்திருக்கலாம்
ஆனால் இன்று பலராமன் வழிபாடு இல்லை....அவன்
நினைவாய் வெள்ளச்சாமி...வெள்ளையப்பன்...போன்ற பெயர்கள் புழங்கி
வருகின்றன.)
(தொடரும்.)


்்்்தமிழ்க்கடவுள் யார்...?்்்்
(உண்மையைத்தேடி)
(5)

தமிழ் மரபுகளை ஆரியமரபாக்கும் உத்திகள்...
பன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வந்துள்ளது.
தொல்காப்பியர் காலத்திலேயே ஆரியர்களின்
மரபுகளைத் தமிழ் மரபோடு இணைக்கும் போக்கு இருந்தது.

தொல்காப்பியத்திற்கு முன்னும் பின்னும் தமிழிலே காலத்தால் முந்தியநூல் தொல்காப்பியமேயாகும்.
அதற்குமுன்...ஐந்திரம்....அகத்தியம் என்ற நூற்கள் இருந்தாலும் அவை கிடைக்கப்பெறவில்லை.

தொல்காப்பியரும் தனது நூலை வழிநூலாகவே முன்மொழிகிறார் ."என்ப". "என்மனார்ப் புலவர்என்ற சொற்பதங்கள் மூலம் தனக்கு
முன்உள்ளவர்களை அவர் துணைக்கு அழைக்கிறார்.

தொல்காப்பியம்...பொருளதிகாரம்...அகத்திணை இயல்...
பாடல் எண் ஐந்தில் அவர் நிலத்தின் இயல்பினையும்...அதில் வாழ்ந்தமக்கள் வழிபட்ட தெய்வங்களையும் குறிப்பிடுகிறார்.

"மாயோன் மேய காடுறை உலகமும்.(காடு காடுசார்ந்த இடம்...கடவுள் மாயோன்..(கண்ணன்...(திரு+மால் =மால் என்பதற்கு கருமை நிறம் என்பது பொருள் ...திரு என்பது
அடைமொழி.)

சேயோன் மேய மைவரை உலகமும்.(மலை மலைசார்ந்த இடம்...கடவுள்..முருகன்.)

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்(வயல் வயல்சார்ந்தஇடம்...கடவுள்
..வேந்தன்....அந்தப்பகுதி மக்களை அடக்கி ஆளும்
அரசனைக்குறிக்கும்.)

முரண்பாடாக வேந்தன் என்ற சொல்லை இந்திரன் என்று திரித்துக் கூறுவதுண்டு.
இந்த இந்திரன் ஆரியர்களின்
கடவுளாகும் இதை தொல்காப்பியர் புகுத்துவதற்கு வாய்ப்பில்லை.
பின்னர் எப்படி பொருள் கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை.

மேலும் இந்திரன் என்ற கடவுளைப்பற்றி கண்ணியமான கதைகள் எதுவுமில்லை.அவன் நடத்தை
கதைகளில் ஒழுக்கம் மீறிய செயலாகவே இருக்கிறது.
எனவே வேந்தன் என்பது இந்திரானாக திரித்துக் கூறப்பட்டிருக்கவேண்டும்.

பின்னர் வந்த காப்பியமான சிலப்பதிகாரம் கடற்கரையில்
இந்திரவிழா நடப்பதாகக் கூறுகிறது.நெய்தல் நிலத்தில்
மருதநிலத்தலைவனுக்கு விழா.மக்களின் வாழ்க்கை நிலை...காலநிலை எதையும்
அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

வள்ளுவனும் தனது குறளில்
இந்திரனை மேற்கோள் காட்டுகிறான்.
எனவே இந்திரன் பலதரப்பட்டவர்கள் இருந்தார்களா...ஆரியஇந்திரன் வேறா என்பது எக்காலத்தில் முடிவுசெய்யப்படும் என்பது தெரியவில்லை.

வருணன் மேய பெருமணல் உலகமும்(கடல் கடல்சார்ந்த இடம்....கடவுள் வருணன்.)
வருணன் என்பதும் ஆரியக்கடவுளேஆரியத்தில்
மழைக்கு அதிபதியாக காட்டப்படுகிறதுபெயர்ப் பஞ்சம் காரணமாக தொல்காப்பியர் கையாண்டாரா...இல்லை ஆரியர்கள் நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டார்களா என்பதில் தெளிவில்லை.
தமிழ் அறிஞரகள் நெய்தல் நிலத்தனைவனாக கடற்காற்று
என்று பொருள் கொள்கிறார்கள்.அதுதான் சரி
மீனுவனுக்கு மழையைவிட காற்றே சாதகமானது.

இங்ஙனமாக...
முல்லை.. குறிஞ்சி...மருதம்...நெய்தல்
எனச்சொல்லிய முறையான்
சொல்லவும் படுமே எனத் தொல்காப்பியர்....முடிக்கிறார்.
(தொடரும்.)


்்்தமிழ்க்கடவுள் யார்...?்்்
(உண்மையைத்தேடி)
(6) 

தமிழின் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில்
காணப்பட்ட கடவுள்கள்.
கண்ணன்...முருகன் ...வேந்தன் ...(அரசன்)...வருணன்(இதை
வருணன் என்றே தொல்காப்பியர் நேரடியாக உரைக்கிறார்கடற்காற்று என்பது தமிழ் ஆர்வலர்களின்
கூற்று .) கொற்றவை போன்றோர் மட்டுமே.

இன்று இந்தியாவெங்கும் குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக வணங்கப்படும்...சிவனைப்பற்றி எந்தக் குறிப்போ சொற்களோ தொல்காப்பியத்தில் இல்லை.
சமயம் என்ற சொல்லும் இல்லை.

சிவனனைப்பற்றி நேரடியாகச்சொல்லாமல்...அவனைப்பற்றி குறிப்பாய் சங்கஇலக்கிய நூல் சிலவற்றில் காணப்படுகிறது.

வேதங்களிலும் இந்திரன் ...விஷ்ணு..பிரம்மா...
பிரம்மாவின் மகனாக ருத்திரன் ஆகியோர் முன்னணியில் இருக்கிறார்கள்.இந்த ருத்திரனை பின்வரும் நாட்களில் சிவனோடு இணைத்தது ஆரியம்.ரிக் வேதத்தில் சிவன் தட்சிணாபதி
அதாவது தென்னாட்டு மக்களால் வணங்கப்படுபவன்
என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவருக்கும்
இறைவா போற்றி...என்று சைவர்களால் போற்றப்படும்
சிவன் தொடக்க காலத்தில் தமிழகத்தில்
இல்லையா....முதல் சங்கத்தின் தலைவனாகப்போற்றப்படும் சிவன் தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இல்லையாசங்கநூல்களும்
பெரிதாய்க்கூறவில்லை.
திருவள்ளுவரும் எடுத்தாளவில்லைநடுவில்
சிலபக்கங்களைக் காணவில்லையே....என்ன காரணம்.

சிந்துசமவெளி அகழாய்வில்
இலிங்கச் சிலைகள் கிடைத்துள்ளன.ஆனால் அவைகொண்டு அதன் தொடர்ச்சியை அறியமுடியவில்லை.
விலங்கு சூழ் பழங்குடித் தலைவனை பசுபதி என்று
எந்த அடிப்படையில் முடிவுசெய்யப்பட்டது தெரியவில்லை.

உலகெங்கும் இலிங்கச் சிலைகள் கிடைத்ததாய் அகழ்வாய்வுச்செய்திகள் கூறுகின்றனதமிழன் பரவிஉள்ள இடத்திலெல்லாம்
அவை வணங்கப்பட்டிருந்தால்
அதன் பின்னணி என்ன....
வெறும் கேள்விகளே தொக்கிநிற்கின்றன.

சங்கஇலக்கியநூல்களில் புறநானூற்றிலும்...பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையிலும்...மதுரைக்காஞ்சி மலைபடுகடாம் என்ற நூலிலும்
சிவனென்று நேரிடையாகக் குறிப்பிடாமல் மறைபொருளாய் அவனது இயல்பும் தோற்றமும் எடுத்தாளப்பட்டுள்ளது.

தமிழ்மக்களின் மிகத்தொன்மையான அரசியல்...சமுதாயமைப்பு...நாகரிகச்செம்மை...ஒழுங்கான வாழ்க்கை அமைப்பு ஆகியவை வரலாற்று ஆசிரியர்களின் வரையறைக்கு அப்பாற்பட்டவை...மிகவும் தொன்மையான காலத்திலேயே தோன்றியவை.

முதல் சங்க காலத்திற்கும் தொல்காப்பியர்
காலத்திற்கும் இடையில் காலம் அழித்தசுவடுகளை தொல்காப்பியவர் அறியாமல்
இருந்திருக்கலாம்...அகழராய்வு அப்போதும் இருந்திருந்தால்
அறிந்துசொல்லிருக்கலாமென்று ....தொல்காப்பியர் சிவனைப்பற்றிச் சொல்லாததற்கு ஒரு சமாதானமாய் எடுத்துக்கொள்ளலாம்.

இனிவரும் நாட்களில் தென்னாடுய சிவனைப்பற்றி
கொஞ்சம் விரிவாய்ப் பார்க்கலாம்.
(தொடரும்)


்்் தமிழ்க்கடவுள் யார்...? ்்்்
(உண்மையைத்தேடி)
(7) 

தொல்காப்பியத்திலும்...சங்கஇலக்கியத்திலும் நேரடியாகக்
காணமுடியாத சிவன்...பிற்காலத்தில் பெருங்கோவில் கொண்டது எப்படி..

தொடக்காலத்தமிழனின் சமயமான ஆசீவகத்தின் ஆதிநாதர் (ரிஷபநாதர்)
சிவனானது எப்படி...
கொஞ்சம் விரிவாய்ப்பார்க்கலாம்.

முதலில் சிவனென்ற சொல்லுக்கு தமிழிலில் சிவப்பு...சிவந்தவன் என்று
பொருள் .
நீங்கள் திருவண்ணாமலை
தீபத்தோடு இணைத்து நெருப்புப்பிழம்பானவன் என்று பொருள்கொண்டால்
அது உங்களது கடவுள் ஈடுபாட்டின்
வெளிப்பாடு.

ஆனால் அந்தச்சிவப்பு என்பது
பெண்களின் மாதவிடாய்க் குருதியின் வண்ணத்தை உணர்த்துவதுவெறுப்பாயும்
அதிர்ச்சியாயும் இருக்கலாம்.
ஆனால் தொடக்கத்தில் எல்லாக் குறியீடுகளும் உயிர்களின் பிறப்பை அடிப்படையாய்க் கொண்டவையே.

கோவில் என்பது உடம்பைக் கிடத்தியபின் காணும் தோற்ற
அமைப்பைக் கொண்டதே.

பிண்டமே அண்டம்...அண்டமே
பிண்டம் எனச்சொல்லப்படுவது உண்டு.

இலிங்கம் என்பது ஆண்குறி...
ஆவுடை என்பது பெண்குறி.
ஆண் பெண் இணைந்த தத்துவமே இலிங்கவழிபாடு.
மிகப்பழையகால இலிங்கங்களில் ஆண் உறுப்புத்தோற்றத்தை தெளிவாய்க் காணலாம்.

சிவன் என்பவர் ஒரு வேடுவர்.
ஒருமனிதராக மலைகாடுகளில் வாழ்ந்தவர்.ஒரு குழுவின் தலைவராக இருந்தவர்.பிறப்பின் உண்மையை உணர்ந்தவர்.வாழ்வின் நெறியை வகைப்படுத்தியவர்
வெற்றுஉடம்போடு புலித்தோல் அணிந்து...சாம்பல் பூசி...
சடாமுடியோடுமுடியை நீளமாய் வளர்ப்பது ஆசிவகர்களின் வழக்கம்)
நாயோடு அழைபவர்.

அவர் கையில் உள்ள சூலாயுதம் கொலைக்கருவி அல்லஅது படைப்பின் குறியீடுபழைய காலத்துசூலாயுதம் இருபுறமும் உள்நோக்கி வளைந்திருக்கும்.
நடுவில் உள்ளது நேராய் நிமிர்ந்து இருக்கும்.

வளைந்திருக்கும் பகுதி பெண்ணின் கருவறையையும்..நடுவில் உள்ளது ஆண் குறியையும் குறிக்கும் குறியீடே சூலாயுதம்.
படைப்பின் பேராற்றலை இது
குறிக்கும்சிவன் படைக்கும்
கடவுள் அவரை அழிக்கும் கடவுளாக மாற்றியது ஆரியம்

கடவுள்களில் சிவனிடம் மட்டுமே சூலாயுதம் இருக்கும்.
பின்னால் காலபைரவரிடம் இருக்கும்.காலஅளவீடு என்பது சூழ்கொள்ளும் காலமே... ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்க்கு இடைபட்ட காலம் இருபத்தியெட்டு நாள்..
பௌர்ணமிக்கும் ..அமாவசைக்கும் இடைபட்டநாள் இருபத்தியெட்டு .

மாதவிடாய்க்குப்பிறகு மூன்றாம் நாள் இணைந்தால்
கருத்தரிக்கும் .. அதன் குறியீடே சிவனின் தலையில்
மூன்றாம் பிறை.கங்கையெல்லாம் பின்னால் கட்டமைக்கப்பட்டது.

பெண்தெய்வங்களின் கையில் சூலாயுதமும் மேற்சொன்ன குறியீட்டின் வடிவமே.கடவுள் இருக்கும் இடத்தை கருவறை என்று சொல்வதும் பிறப்பின் சிறப்பை உணர்த்தவே.

தொடக்கத்தில் குறியீடுகள்
வாழ்வின் நெறிமுறையோடு
ஒத்துப்போனவை.
எனவே சிவனென்ற ஆதிநாதர்
ஆசிவகத்தின் வழியில் மக்களை நெறிபடுத்தும் வழிநெறிகளை வகைப்படுத்தும் படைப்புக்கடவுளாய் அறியப்பட்டார்.

வேதங்களில் சிவன்...இந்திரனால் தோற்றக்கடிக்கப்பட்டவனாக
காட்டப்படுகிறார்.
சமஸ்கிருதத்தில் சிவா என்றால் முழுமையானவன்...
செழுமையானவன்...மங்கலமானவன் என்று பொருள்...இதுகூட பிற்காலத்தில் கட்டமைக்கப்பட்டவையே.
(தொடரும்)


்்்்தமிழ்க்கடவுள் யார்.்்்்
(உண்மையைத் தேடி)
(8) 

தொடக்ககால மக்கள் இனப்பெருக்கம் பெண்ணின்
மார்பகத்தோடு தொடர்புகொண்டிருந்ததாக நம்பினர்அடுத்து கருப்பையோடு தொடர்புகொண்டதாகக் கருதினர்பின்னரே பெண்ணின் பிறப்பு உறுப்பே
இனப்பெருக்கத்திற்கான காரணம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

தொடக்கத்தில் வளமை வழிபாட்டின் சடங்கு முறையாக
இருந்த பெண்குறி வழிபாடு...பின்னர் போர் நிகழ்ச்சியோடும் தொடர்புகொண்ட வழிபாட்டு
முறையானது .இதனைக் கொடிநிலை வழிபாடு என்று
அழைத்தனர்.இத்தகைய வழிபாட்டுச் சடங்கு சிந்துசமவெளி முத்திரைகளில் காணப்படுகிறது.

இதுபோன்ற சடங்குகள் மிகத்தொன்மையானவை...கொடிநிலை தந்திர வழிபாட்டிற்கு உரிய புணர்ச்சி
சடங்கு எனின் கந்தழி என்ற சடங்கும் அத்தகைய சடங்காய்த்தான் இருக்கவேண்டும்.

கொடிநிலை பெண்ணின் உறுப்பை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட சடங்கு
எனின்...கந்தழி ஆணின் உறுப்பை மையமாகவைத்து நடத்தப்பட்ட ஒருசடங்கு.

கந்தழி என்பது கந்து எனும்
சொல்லின் அடிப்படையில் அமைந்த கலைச்சொல்லாகவோ அல்லது தந்திரவழிபாட்டினரின் ஒரு குழூஉக் குறியாக இருக்கவேண்டும்.

கந்து என்ற தமிழ்ச் சொல்லிற்குக் கட்டுத்தறி ..தூண்...ஆண்குறி
முதலான பொருள்கள் உண்டு.

தொடக்கத்தில் பெண்ணின் பிறப்புஉறுப்பைப்போலவே ..ஆணின் பிறப்பு உறுப்பும் வழிபடப்பட்டு வந்துள்ளது.

சிந்துவெளி மக்கள் இத்தகைய
ஆண்குறி வழிபாட்டினர் என்பதை இருக்குவேதம்ஏழாம் மண்டலம் 21 வது சூக்தம்...5வது மந்திரம்தெளிவாக விளக்கியுள்ளது.

கொடிநிலை வழிபாடும்(பெண்ணுறுப்பு வழிபாடு)...கந்தழி வழிபாடும்(ஆணுறுப்பு வழிபாடு)இணைந்ததே சிவலிங்கவழிபாடுஇந்த மாற்றமடைய பலநூற்றாண்டுகள் ஆகியிருக்கலாம்.

இந்த ஆண்குறிவழிபாடு கந்தன் வழிபாடாக மாறியநிலையில் அது முருகவழிபாடென்று அழைக்கப்பட்டது.

முருகவழிபாடாகிய மாறிய"கந்து" ...பின்னர்தான்
சிவவழிபாடாக...சிவலிங்க வழிபாடாக மாறியது.

இச்சூழலில் பெண்ணின் பூப்புக்குருதி குங்குமமாகவும்...
ஆணின் விந்து திருநீறாகவும்
அடையாளப்படுத்தப்பட்டன.

(நன்றிபேராசிரியர் க.நெடுஞ்செழியன்...நூல்ஆசீவகமும் ஐயனார் வரலாறும்)

மனிதன் நாகரிகம் அடைந்தநிலையில்...இத்தகைய பிறப்புருப்பு வழிபாடுகள்
பக்தி என்ற மனநிலைக்கு உடன்பாடானவையாக இல்லை...
என்னதான் மனிதன் தொடக்கநிலையில் தத்துவவாதங்களுக்கு உட்படாமல் ..இயற்கையின் போக்கில் வழிபாட்டைக்கொண்டிருந்தாலும்...பின்னர் வந்த நாகரிக சமுகம் அதனை ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

எனவே உணர்வுகளை ஆட்கொள்ளக்கூடிய கதைகளை கற்பித்து கடவுளை
உயர்ந்தநிலைக்குத் தள்ளி....
அவரது பாதங்களை பணிந்து
கிடப்பதே பக்தி என்று கற்பிக்கப்பட்டது.
(தொடரும்)


்்்்தமிழ்க் கடவுள் யார் .. ?்்்
(உண்மையைத் தேடி)
(9) 

மாற்றம் ஒன்றே மாறாதது .
காலங்காலமாக நடைபெற்ற பண்பாட்டு மாறுதல்களில்...
கடவுள்களின் தோற்றங்களும்
வழிபாட்டு முறைகளும் மாறிப்போயின.

வேட்டைச்சமுதாயம்.. நிலவுடைச் சமுதாயமாய் மாறியபோது கடவுளும் கடவுளைப்பற்றிய பயங்களும்
நம்பிக்கைகளும் வழிபாட்டுமுறைகளும் நிலைமாறியது

நாட்டுவிடுதலைக்குப்பின் பிறந்து தற்போது வாழ்பவர்களுக்குத் தெரியும்
மாற்றங்களின் முகவரி.

பத்துவருடங்களுக்கு முன் இருந்தவைகூட இன்றில்லை.
காசுபோட்டுப் பேசும் பொதுத்தொலைபேசி....வானொலிப்பெட்டி...ஒலிநாடா...
ஒலிநாடாவில் பதிவுசெய்தரும்
கடைகள் இன்னும் எத்தனை எத்தனையோ...

உப்பு ஒரு காலத்தில் ஊதியமாய்க் கொடுக்கப்பட்டது...அதற்குப் பின்னர் உப்பிற்கு வரியை ஆங்கிலேயர்கள் விதித்தபோது அதனை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் பெரும் போராட்டம் "உப்புச் சத்தியாக்கிரகம்என்ற பெயரில் நடந்தது.
அதுஒரு காலம்பின்னர் சிறுஉப்புவியாபாரிகள் சைக்கிளில் உப்பை மூட்டையில் கட்டிவந்து விற்பார்கள்.இன்று அவையொல்லாம் வழக்கொழிந்து பெரியபன்னாட்டு நிறுவனங்கள்....உப்பை விற்கும் காலம் வந்துவிட்டது.

இவையெல்லாம் வெகுஅண்மையில் காணும் காலமாறுபாடுகள்....இதன்படி
பார்த்தால் வழிபாட்டு மாறுதலை நாம் எளிதாய்ப் புரிந்து கொள்ளமுடியும்.

கலவியை மையமாய் வைத்தே
தொடங்கிய வழிபாட்டு முறைகள் காலம்
செல்லசெல்ல புதுப்புது வடிவம் பெறத்தொடங்கின.

மாதவிடாய்க் குருதி குங்குமத்தின் அடையாளமாகவும்...ஆணின்
விந்து திருநீறாகவும் இருந்தவை பின்னர் வேறு விளக்கத்தில் புனிதமெனக்
கொள்ளப்பட்டன.

வேட்டைசமூகத்தில் பூச்சிகடிகளுக்கு பாதுகாப்பாய்
உடலெங்கும் பூசப்பட்ட சாம்பல்
பின்னர் பக்தியின் அடையாளமாய்க்கொள்ளப்பட்டது.

அழிக்கும் கடவுளாய் மாற்றப்பட்டசிவன்...எரிந்த பிணங்களின் சாம்பலை பூசிக்கொள்வது இந்த உடலின்
நிலையாமையை உணர்த்தவே
எனப்போதிக்கப்பட்டது.

நெற்றியின் நடுவில்திருநீறு இடுவது
பில்லி...சூன்யத்தை(அதுவும் ஒருநம்பிக்கையேவிரட்டித் தன்னைக்காத்துகொள்ளவும்...
இரு புருவங்களுக்கு இடையே
உள்ள ஒரு சக்தியை மேம்படுத்தவும்சிவனின் மூன்றாம் கண்ணை நினைவூட்டும் விதமாயும் அமைந்தது.

குங்குமம் திருமணமான பெண் என்று அடையாளமிட நெற்றி வகுட்டிலும்... நெற்றியில் பில்லி...சூன்யத்திற்கு தப்பவும்...மங்களஅடையாளமாகவும்...அழகுணர்சியை வெளிப்படுத்தவும் பக்தியின்
வெளிப்பாடாகவும் பெண்களுக்கு அமைந்தது.

வைணவத்திற்கு திருமண் இந்த உடல் மண்ணுக்கானது...
நிலையில்லாதது....திருமாலே
என்றும் நிரந்தரமானவன் அவன் அடியைப்போற்றவேண்டும் எனநினைவூட்ட இடப்பட்டது.
இதில் வடகலை தென்கலை என்ற பிரிவுகள் உண்டு.
இவை இரண்டுமே திருமாலை
எதிர் எதிர் அணியில் இருந்து
கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
திருமாலைப் பற்றி எழுதும் போது இன்னும் விரிவாய்ப் பார்க்கலாம்.

தொடக்ககாலத்தில் வேட்டைசமூகத்திற்கு தலைவனாய் இருந்தசிவன்...
நிலவுடமைச் சமுதாயத்தில்
பெரியாண்டவர்...பெரியசாமி...
பெரியய்யா எனக்கொண்டாடப்பட்டார்.

பாண்டியநாட்டிலேயே சிவனுக்கான வழிபாடுகள் பெருகியிருந்தனபெரும் மீசைஉள்ள சிவன் போர்த்துக்கீசியர் வெளியிட்ட நூலில்(1940) காணப்படுகிறது.

தென்னாடுடைய சிவனை பின்னர் தென்திசைக் கடவுளாக்கி...(தட்சிணாமூர்த்தி)பழையலிங்க வழிபாட்டை பலவிதக்கதைகளோடு மேம்படுத்தி கருவறைக்குள் அமரச்செய்து மன்னர்களின்
மேற்பார்வையில் பெருங்கோவில்கள் எழுப்பப்பட்டன.
(தொடரும்)


்்்தமிழ்க்கடவுள் யார்..?்்்
(உண்மையைத்தேடி)
(10) 
கடவுள் என்பது ஒரு நம்பிக்கைஅதனைக் கேள்வி
எழுப்பிப்பார்க்கவேண்டுமென்று யாரும் விரும்புவதில்லை.
அந்த நம்பிக்கையை ஒட்டியெழுந்த மூடநம்பிக்கைகள்தான் பெரும்
கேடாய் இருக்கிறது.

இறந்தவர்களின் சமாதியின் மேல் இலிங்கம் வைத்துப்புதைப்பது ஒருகாலத்தில் வழக்கமாயிருந்ததுஇறந்தவர்கள் நல்லவிதமாய்
இறைவனடி சேர்வார்கள் என்ற
நம்பிக்கையில் எழுந்தபழக்கமாய் இருக்கலாம்.

அதனால் உலகம் முழுதும் பரவியதமிழன் இந்தப் பழக்கத்தை பின்பற்றியதால்
தோண்டும் இடமெல்லாம் இலிங்கச் சிலைகள் கிடைக்கின்றன.

வேட்டுவத்தலைவன் சிவன்
வடிவச் சித்திரிப்பை எடுத்துக்கொண்டால்....
புலித்தோல் அணிந்தவெற்றுடம்பு ...சாம்பல்பூசியமேனி...பரந்து விரிந்த தலைமுடி...காலில் தண்டை...
உடன் வேட்டைநாய்...பின்னர்
நிலவுடமைச்சமுதாய் மாறியபிறகு காளை மாடு...
பின்னணியில் கல்லால மரம்.
இது தொடக்ககால தமிழ்ப்பின்னணி.

பின்னர் சித்தரிக்கப்பட்டது கயிலாயம்...பனிபடர்ந்த மலைச்சிகரம்....தலையில் கங்கை அதற்கான ஒருகதை...
சந்திரன் அதற்கான ஒரு கதை...பாம்பு அதற்கான விளக்கம்.

இவை இரண்டுக்குமான வேறுபாட்டை இப்போது பார்க்கலாம்.

சிவன் வெற்றுஉடம்போடு இருக்கிறார் பனியில் அது சாத்தியமில்லை...தோல் உதடெல்லாம் வெடிக்கஆரம்பித்துவிடும்.
கடவுள் என்ற நிலையில் சாத்தியமன்றால்...அவ்வளவுமெனக்கெடல் அங்கு அவசியமில்லை.

பனிப்பிரதேசத்தில் புலி கிடையாது...எனவே புலித்தோல் சாத்தியமில்லை.

காளைமாடும் அங்கு வாழும் மாடுஇல்லைஅவை முடிஅடர்ந்து கவரிமான் போலிருக்கும்.

அவர்பின் இருக்கும் கல்லாலமரம்(விழுது இல்லாத
சிறிய ஆலமரம் இது உலகில்
எங்குமே மலைப்பகுதியில் வளராது...சிறப்புத்தகுதியாக
தமிழகத்தின் மலைப்பகுதிகளிலும்...இலங்கை திரிகோணமலையிலும் காணப்படும்.)

கைலாயம் கெலாசா என்ற சமஸ்கிருதச்சொல்லில் இருந்து வந்தது ...இதற்கு விலைமதிப்பற்ற பொக்கிசம்
என்றுபொருள்...படிகக்கற்கள்
என்ற பொருளும் உண்டு....
ஒப்பற்ற வானம் என்ற பொருளிலும் விளக்கப்படுவது
உண்டு.

தமிழிலில் கயிலாயம்(கயல்+அயம்)
கயல்=மீன்...அயம்=நீர் நிலை
மீன்கள் சூழ்ந்த நீர்நிலை.
பனிப்பிரதேசத்தில் நீர்நிலைகள் கிடையாது.

அப்படியானால் சிவனின் சித்தரிப்புக்கு எந்த இடம் பொருத்தமாய் இருக்கும்...
இலங்கையில் உள்ள திரிகோணமலை .

சுற்றிலும் மீன் நிரம்பிய நீர்நிலைமலையில் கல்லால
மரம் உள்ளதுபுலிதென் இந்தியாவில் வாழ்வது.உரோமம் இல்லாத காளைமாடு மலைப்பிரேசத்தில் இல்லாதது...தென்இந்தியாவில் வாழ்வது...இவை அனைத்தும் சிவனின் தோற்றத்திற்கு ஒத்துப்போகிறது.வேதமும்
சிவனை தென்திசையாளன்
என்றே கூறுகிறது.இன்றும் திரிகோணமலையில் மிகப்பழையசிவன்கோவிலும்..கல்லால மரமும் உள்ளது.

எனவே சிவன் இமயமலையாளன் அல்ல.
அவை பின்னர் திரிக்கப்பட்டகதை .

தென்னாடுடைய சிவனே போற்றி....எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.
(தொடரும்)

 

நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...