Tuesday, 26 August 2025

நானொரு தேனீ - 6 . இராச. மணிமேகலை

 நானொரு  தேனீ - 6

     


"அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கல் ஆகா  அரண்" 

 "அறிவு நமக்கு துன்பம் வராமல் காக்கும் கருவி (tool) யாகப் பயன்படுகிறது. மேலும் எதிரியால் கூட நம்மை அழிக்கமுடியாத அரணாகவும் இருந்து பாதுகாக்கிறது" என்பது இக்குறளின் பொருள்.

         அறிவு என்பது யாது? கல்வியறிவா?  மொழியறிவா?பகுத்தறிவா?  பட்டறிவா? அல்லது இவையெல்லாம் சேர்ந்த அறிவா?அதை எப்படி வரையறை செய்வது? என்ற கேள்வி இருந்தாலும், அது 

துன்பத்திலிருந்து, அழிவிலிருந்து

நம்மைக் காக்கும் ஆயுதமாகப் பயன்படுகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 

           என் ஆசிரியப் பணியில் எனக்கு நேர்ந்த அனுபவம் இது.  என் மொழியறிவு எனக்கு எவ்வாறு அற்றம் காக்கும் கருவியாக, அரணாகப் பயன்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கிறேன். மேல்நிலை வகுப்புகளில் தமிழ், ஆங்கிலப் பாடங்களுக்கு  வாரத்துக்குத் தலா நான்கு பாடவேளைகள் மட்டுமே. மற்றப் பாடங்களுக்கு ஏழு பாடவேளைகள்.  PET,  VE பாடவேளைகளுக்கு ஒவ்வொரு ஆசிரியர்களும் போட்டி போடுவது வழக்கம். முக்கியப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தங்களின் சிலபஸ் முடிக்க வேண்டி இப்பாட வேளைகளை தனக்கானதாக தலைமையாசிரியரிடம் கேட்டுப் பெறுவர். ஆங்கில ஆசிரியர்களுக்குப் பிரச்சனை இல்லை. 35 மதிப்பெண்கள் தான் அவர்கள் இலக்கு. தமிழ்ப்பாடம் அப்படியல்ல. அது வாழ்க்கைப் பாடம். அதில் அறிவியல் வரும், சமூக அறிவியல் வரும்.கணிதம் வரும். எல்லாம் வரும். நான் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து இருந்ததால்  தலைமையாசிரியரிடம் VE பாடவேளையைக் கேட்டுப் பெற்றேன். இதே பாடவேளையை மறதியாக கணித ஆசிரியர்க்கும் கொடுத்து விட்டார் அவர். எங்கள் இருவருக்கும்  சிறு சச்சரவு. உடனே அவர் ' தமிழ் தானே? ரொம்ப முக்கியமோ? அவர்கள் படித்துக் கொள்ளமாட்டார்களா?  நீங்கள் விட்டுக் கொடுத்தால் என்ன அவர்களாகவே படித்துக் கொள்வார்கள்' என்றார். நான் 'சார், உங்க பாடம் உங்களுக்கு முக்கியம். என் பாடம் எனக்கு முக்கியம். உங்களுக்கு பேசவேண்டியிருந்தால் தலைமையாசிரியரிடம் பேசிக்கொள்ளுங்கள்' என்றேன்.  தமிழ்மொழிப் பாடத்திற்கும், தமிழசிரியர்களுக்கும்  அவ்வளவாக சிறப்பில்லாத நிலை தான் இன்றுவரையிலும் இருக்கிறது. ஆனால் 'தமிழ் தானே' என்ற சொல் என்னுள் சீற்றத்தை உண்டாக்கியது. வகுப்பு முடியும் தறுவாயில் போர்டில்  'தமிழ் தான், முடிந்தால் படித்துப் பொருள் புரிந்து கொள்'  என்று இப்பாடலை எழுதினேன்.


"காக்கைகா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்கு

காக்கைக்குக் கைக்கைக்கா கா"


        மதிய உணவு இடைவேளை முடித்து முதல் பாடவேளை கணிதம். அவர் வந்து இந்தப் பாடலை படித்து விட்டு 'என்னது இது? யார் எழுதினது?

என்றாராம். பிள்ளைகள் என்னைச் சொல்ல இப்போதான் க, கா,கி, கீ சொல்லித் தராங்களா?  என்று கிண்டலாக  கேட்டிருக்கிறார்.  

பிள்ளைகள் இதற்கான விளக்கத்தைக் கேட்க நான் பிறகு சொல்கிறேன் என்று விளக்கம் சொல்லாமல் மௌனம் காத்தேன். இதற்கிடையில் மாணவர்களிடமும், சக ஆசிரியர் ஒருவரிடமும் 'அது என்னவாயிருக்கும்'  என்று 

வடிவேலு பாணியில் கேட்டுக் கொண்டிருந்தாராம். ஒருவாரம் கழித்தே மாணவர்களுக்கு பாடலை விளக்கினேன்.


1) "காக்கைக்கு ஆகா கூகை-                      

காகம் கூகையை  (ஆந்தை)                   

இரவில்  வெல்லமுடியாது.

2) கூகைக்கு ஆகா காக்கை-   

     கூகை காக்கையை பகலில் 

     வெல்ல முடியாது.

3) கோக்குக்கூ  காக்கைக்கு-                       

அரசனுக்கு அவன் நாட்டை                    

பகைவரிடமிருந்து காப்பாற்ற

 4)  கொக்கு ஒக்க-                                            

கொக்கைப்  போலத் தக்க சமயம்           

வரும்வரை  காத்திருக்க                        

 வேண்டும்.  இல்லையெனில்

 5) கைக் கைக்கு - 

      பகையை எதிர்த்து

 6) காக் கைக்கு - 

      காப்பாற்றுவதற்கு

 7) கைக்கு ஐக்கு ஆகா -

      திறமையான அரசனுக்கும்

      இயலாததாகும்.  

     

 'தமிழ் தானே' என்ற இளக்காரமும், புறக்கணிப்பும் பரவலாக எல்லாரிடத்தும் இருக்கிறது. ஒரு தமிழாசிரியராக நான் மொழியறிவு எனும் ஆயுதத்தால்  தாக்குவேன் தான். இந்தப் பாடலுக்கே இப்படி என்றால் கீழ்க்கண்டப் பாடலை எழுதியிருந்தால்? இந்த மனிதர் 

'ததிங்கிணத்தோம்' ஆடியிருப்பாரோ?


"தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தாதூதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?"


நம் முன்னோடிகள் கொஞ்ச நஞ்ச அறிவையா நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்? அரணாகக் காத்த  கவி காளமேகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல !

(இப்பாடலின் தேனைத் தேடிச் சுவைப்பீராக!)


    மதுராந்தகம் மகளிர் மேனிலைப் பள்ளியில் பணியாற்றிய சமயம் அது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா அம்மையார் உடல் நிலை குன்றி மருத்துவமனையில் இருந்தார். அவரின் இந்த நிலைமைக்கான காரணங்கள் பற்றிய செய்திகள் யூகங்களாகவும், மர்மங்களாகவும் ஊடகங்களில் விரைவுச் செய்திகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வெளிவந்து கொண்டிருந்தன. மூன்று, நான்கு மாதங்கள் மருத்துவ மனையில் இருந்து உயிர் நீத்தார் அவர். அசம்பாவிதம் ஏதும் நிகழாமலிருக்க பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை  அறிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த அன்று மறைந்த முதல்வருக்கு எல்லாப் பள்ளிகளிலும் இரங்கல் கூட்டம் நடத்த ஆணையிடப்பட்டது. அந்நிகழ்வில் ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஊர்ப் பொதுமக்கள் மற்றும் கட்சி சார்பாக வந்தவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் தமிழாசிரியரான எனக்கு  அவரைப் பற்றி  இரங்கற்பா பாடவேண்டும் எனப் பணிக்கப்பட்டது. இதற்கு முன் மறைந்த  குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களுக்கு இப்பாடலைப் பாடியிருக்கிறேன். 


 "ஜென்மம் நிறைந்தது        

சென்றவர்  வாழ்க!

சிந்தை கலங்கிட 

சென்றவர் வாழ்க!

நீரில் மிதந்திடும்

கண்களும் வாழ்க!

நிம்மதி நிம்மதி 

இவ்விடம் சேர்க!


மரணமும் பூமியில் 

புதியது இல்லை!

ஜனனமும் பூமியில்

 பழையது இல்லை!

 இரண்டும் இல்லாவிடில்

 இயற்கையும் இல்லை!

 இயற்கையின் ஆணை தான்  ஞானத்தின் எல்லை!


பாசம் அளாவிய 

கண்களும் எங்கே!

பாய்ந்து துழாவிய 

கைகளும் எங்கே!

தேசம் அளாவிய 

கால்களும் எங்கே!

தீயுண்ட தென்றதுன்   

சாம்பலும்  எங்கே!

  

காற்றில் கலந்தது 

காற்றுடன் போக மண்ணில்பிறந்தது                                  

மண்ணுடன்  சேர்க!

எலும்புசதை கொண்ட 

உருவங்கள் போக!எச்சங்களால்உந்தன்                               

இன்னுயிர் வாழ்க!


பிறப்பு இல்லாமலே 

நாளொன்றும் இல்லை!

இறப்பு இல்லாமலே

பொழுதொன்றும் இல்லை!

நேசத்தினால் வரும்

 நினைவுகள்தொல்லை!

 மறதியைப்போல் ஒரு 

 மா மருந்தில்லை!


கடல்தொடும் ஆறுகள்

கலங்குவதில்லை!

நதிதொடும் தாரைகள்

அழுவது இல்லை!

நதிமழை போன்றது 

விதியென்று கண்டும் 

மதிகொண்ட மானுடர் 

மயங்குவ தென்ன!


மரணத்தினால் சில 

சாபங்கள் போகும்!

மரணத்தினால் சில   

காயங்கள் போகும்!

வேதம் சொல்லாததை

மரணங்கள் கூறும்!

விதையொன்று வீழ்ந்திடில்                    

செடி வந்து சேரும்!


பூமிக்கு நாமொரு 

யாத்திரை வந்தோம்!

யாத்திரை முடிந்ததும் 

நித்திரைகொண்டோம்!

நித்திரை போவது 

நியதி என்றாலும்

யாத்திரை என்பது 

தொடர்கதை ஆகும்!


தென்றலின் பூங்கரம் 

தீண்டிடும் போதும்!

சூரியக் கீற்றொளி 

தோன்றிடும் போதும்!

மழலையர் தேன்மொழி 

செவியுறும் போதும்!

மாண்டவர் நம்முடன் 

வாழ்ந்திடக் கூடும்!


மாண்டவர் சுவாசங்கள் 

காற்றுடன்போக!

தூயவர் கண்ணொளி 

சூரியன்  சேர்க!

பூதங்கள் ஐந்திலும் 

பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம் 

எம்முடன் சேர்க!"


  எங்கள் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள் மொத்தமாக 4000 பேர். வெளியில் இருந்து வந்தவர்கள், கட்சிக்காரர்கள், தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் என மதுராந்தகம் மகளிர் மேனிலைப் பள்ளியின் வளாகமே பரபரவென்று 

உணர்ச்சிக் கொந்தளிப்பாகக் காணப்பட்டது. எப்போதுமே, எல்லாப் பள்ளிகளிலுமே பள்ளியின் அனைத்து விழாச் செயல்பாடு களிலும் தமிழாசிரியர்கள் தலைதான் உருளும். ஒரு பேச்சோ, பாட்டோ எப்போதும் ஆயத்தமாக இருக்க கடமைப்பட்டவர்கள்  நாங்கள் தான். தமிழை இளங்கலையில், முதுகலையில், ஆய்வுநிலையில் இருபது வருடங்களாக படிப்பவர்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற மற்றவர்களின் எதிர்பார்ப்பு சரிதானே? 

        கவிஞர் வைரமுத்துவின் இப்பாடல் எந்த ஒரு மனிதருக்கும் பொருந்தக்கூடியது. இழப்பின் வலியில் இருப்பவரை ஆற்றுப்படுத்தக் கூடியது. ஜெயலலிதா அம்மையாரின் நெஞ்சுறுதி, 'எத்தனை முறை வீழ்ந்தேன் என்பதல்ல, எத்தனை முறை எழுந்தேன்' என்ற அவருடைய நிமிர்வு, 'ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகில் பெண்ணாதிக்கம் பாரீர்' என அறைகூவல் விட்ட கர்வம், பல பெண்களின் முன்மாதிரி.... கடைசியில் மர்மம் நிறைந்த அவரது இறப்பு  ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரையும்  அசைத்துப் பார்த்து விட்டது. 

    எப்போதோ, யாருடைய இறப்பிலோ கேசட்டில் ஒலித்த இப்பாடலை என் மனம் உள்வாங்கியிருந்தது. அப்பாடலை ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இப்படிப்பட்ட சூழலில் தான் நான் பாடினேன். ஊசி விழுந்தால் கேட்கும் நிசப்தம். 

ஒவ்வொருவரும் தத்தம்  கண்ணீரில், விசும்பல்களில்,கேவல்களில், தொலைந்து கரைந்து போனார்கள். இதனை ஊடகங்கள் பதிவு செய்தன. 


ஒரு கவிஞனின் மொழியறிவை என் மொழியறிவால் தக்க சமயத்தில் ஆயிரக்கணக்கானவர்க்கு கடத்திய  தருணம் மொழியின் உச்சம்!

இது என் பெருமை அன்று. மொழியின் பெருமை.  புலவனின், கவிஞனின் பெருமை. வகுப்பில் விரல் வழியே, மேடையில் குரல் வழியே  அவ்வளவே! நாட்படு தேறலைச் சுவைத்துச் சுவைத்து என் மொழியறிவு சமயம் பார்த்து காத்திருக்கிறது.  சுவாதீனமாக அற்றம் காக்கும் கருவியாக,  மற்வர்களிடம் இருந்து காக்கும் அரணாக வெளிப்படுத்துகிறது!

Sunday, 24 August 2025

நானொரு தேனீ - 5. இராச.மணிமேகலை

 நானொரு தேனீ - 5



     இலக்கணம் இனிமையுடைத்து! 'இலக்கியம் கண்டதற்கோர் இலக்கணம் ' என்பதே வழக்கு.  பள்ளியில் தமிழாசிரியர்கள் இலக்கணப் பாடங்களை இலக்கியச் சான்றுகளுடன் கற்பித்தால், மாணவர்களுக்கு இலக்கணம் இனிமையாகும். இளங்கலை, முதுகலை வகுப்புகளில் நன்னூல், தொல்காப்பியம் போன்ற  இலக்கண நூல்களைப் பயிலும் ஆசிரியர்கள் இலக்கண விதிகளை இலக்கியத்தோடு பொருத்தி, உள்வாங்கிக் கற்றிருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு எளிமையாகவும், இனிமையாகவும் கற்றுத் தர முடியும்.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! சாதாரண சொற்கள் என நாம் நினைப்பவை எவ்வளவு நுண்மையுடைன எனக் காண்போமே!


சொற்களின் நுட்பமான வேறுபாடுகள்:


'ஈ', 'தா', 'கொடு'  போன்ற சொற்கள் ஒரே பொருள் தருவன போல் தோன்றினாலும், நுட்பமான பொருள் வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியம் இதனை,


' ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே

தாவென் கிளவி ஒப்போன் கூற்றே 

கொடு வென்  கிளவி 

உயர்ந்தோன் கூற்றே ' என்று கூறுகிறது.


' ஈ, தா, கொடு எனும் மூன்றும் முறையே இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை'  என்கிறது நன்னூல்.


       ஈ  - தாழ்ந்தநிலையில் உள்ளவன் 

உயர்ந்த நிலையில் உள்ளவரிடம்    ஒரு  பொருளை வேண்டிப்  பெறுதல்.


      தா - சரி சமமானவர்களிடம், ஒத்த நிலையில் இருப்பவர்களிடம் ஒன்றைக்   கேட்டுப் பெறுதல்.


      கொடு - உயர்ந்த நிலையில் உள்ள   ஒருவர் தன்னிலும்  தாழ்ந்த  நிலையில் உள்ளவரிடம்  

உரிமையுடன் கேட்டுப் பெறுதல். 


1)  ஈ யென் கிளவி இழிந்தோன்     கூற்றே 


      சோழ அரசன் செங்கணானுக்கும் சேர அரசன் கணைக்கால் இரும்பொறைக்கும் கழுமலம் அடுத்துள்ள திருப்போர்ப்புறத்தில் போர் நடந்தது.  இரும்பொறை போரில் தோற்க செங்கணான் குடவாயிற் கோட்டத்தில் சேரனைச் சிறை வைத்தான்.  தாகத்தால் நா வறண்டு,  சேரன் தண்ணீர்க் கேட்க, சிறைக்காவலன் அரசனைச் சிறுமை செய்தான். காலந்தாழ்த்தி, பணிவின்றி  காவலன் நடந்து கொண்டதை எண்ணி செய்யுளைப் பாடிவிட்டு உளங்கலங்கி வீழ்ந்தான். அவன் எழுதிய புறநானூற்றுப் பாடல்.


"குழவி இறப்பினும் ஊன்தடி இறப்பினும்

'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்

......................................................... 

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ இவ் வுலகத்தானே?" 


'      "போர்க்களம் புகுந்து போரிட்டு வாள் வடுப் பெற்றவரே வானுலகம் சென்று சுவர்க்கம் புகுவர். இறந்து பிறந்த குழந்தையும், சதைப்பிண்டமாக (ஊன்தடி) பிறந்ததும் அவ்வாறு வாள் வடுப்பெறுதலும்,  வானுலகம் பெறுதலும் இல்லை. அதனால் அதனை தருப்பைப்புல் மீது கிடத்தி 'வெற்றி பெற்ற வீரர் சென்ற வழி வானுலகம் செல்கவென' வாளால் வெட்டிப் புதைப்பர். அத்தகைய அரசகுடியில் பிறந்த நான் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்படும் நாய்களைப் போல் சிறையகத்தே வாழ்கிறேன். அவர் அளிக்கும் உணவை 'உண்ணேன்' என மறுத்து உயிர் விடுவதற்கு மாறாக ஈயென இரந்து அவர் இகழ்ந்தளித்த நீரை உண்ணும் இழிவுடையேன் ஆனேனே!"  என்பது அப்பாடலின் பொருள். இப்பாடலுக்கு,

 

"ஈ' யென இரத்தல் இழிந்தன்று - அதனெதிர் 'ஈ' யேனென்றல் அதனினும் இழிந்ததன்று" (புறம்-204)


 (இழிந்தது=இழிந்தது+அன்று. அன்று  என்பது அசைச்சொல்.)

            என்ற பாடல் இன்னும் அரண் சேர்க்கிறது அல்லவா? 'ஈ' என்று இரந்த அரசன் நிலையும், அதனெதிர் 'ஈ' யேன் என்ற காவலன் இழிநிலையும் சங்கச் சித்திரம் அன்றோ?

                 ' ஈ'  என்ற சொல்லுக்கு கம்பராமாயணத்தில் இருந்து ஒரு பாடல். கோசலைக்கு மகன் பிறந்திருக்கிறான். பெயர் சூட்ட வசிஷ்டர் வருகிறார். 


"கரா மலைய தளிர் கைக்கரி எய்த்தே

'அரா அணையில் துயில்வோய்' என அந்நாள்

விராவி அளித்தரும்  மெய்ப் பொருளுக்கே

'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே "

             இராமன் திருமால் அவதாரம். இல்லாதவனுக்கு கொடுப்பது ஈதல். 'பெயர் ஈந்தனன்'  என்ற சொல்லை கம்பன் ஏன் வைத்தான்? பரம்பொருளுக்கு என்ன இல்லை? பெயரிட்டான், பெயர் வைத்தான் என்று சொல்லியிருக்கலாமே! ஏன் 'ஈந்தான்' என்றான் கம்பன்?என்பதற்கு உரைகாரர்கள் அருமையான ஒரு விளக்கம் தருகிறார்கள். " ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டேமோ" என்ற மாணிக்கவாசகரின் பாடலை சான்று காட்டுகிறார்கள். வசிஷ்டர் பெயர் பெற்ற மகாமுனி. கடவுளுக்குப் பெயர் இல்லை. அடையாளப்படுத்த ஒரு நாமம் வேண்டும். அப்படி பெயர் இல்லாதவனுக்கு ஒரு பெயரை வசிஷ்டன் போன்ற மாமுனி 'ஈந்தான்' என்பது தானே சரியாக இருக்கும்?அதனாலே தான் கம்பன் அச்சொல்லை அங்கே வைத்தான். பெயர் பெற்றவன், பெயர் இல்லாதவனுக்கு கொடுத்ததால் 'ஈந்தான்'  என்றான் கம்பன். கவிச்சக்ரவர்த்தி அல்லவா?


2) தா வென் கிளவி ஒப்போன் கூற்றே


        ஒருவர்க்கொருவர் ஒத்த அன்புடையராதல், சரிநிகர் சமானமாய் உள்ளோர் கொள்வதும், கொடுப்பதுமான நிலையில் கூறப்படுவது. எனக்கு இந்தப் புத்தகம் தா என்பதும்,  உன்னிடத்தில் என்னைத் தந்துவிட்டேன்  என்பதும் 'தா'  எனும் சொல். 


3)  கொடு வென் கிளவி உயர்ந்தோன் கூற்று


         கொடு என்ற சொல் அடியாகப் பிறந்ததே 'கொடை'  என்ற சொல். தனக்கென ஒன்றுமிலாது உடல், உயிர் அனைத்தையும் கொடுப்பது. அதனாலேயே உயர்ந்தோன் ஆகிறான் போலும். புறநானுற்றுப் பாடலொன்று. புலவர் பெருந்தலைச்சாத்தனார் தன் வறுமை நிலை நீங்க முதிரமலை நாட்டின் அரசன் குமண வள்ளலைக் கண்டு பாடிப் பரிசில் பெறச் செல்கிறார். அரண்மனையில் குமணன் இல்லை. இளங்குமணன் அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறான். என்ன நடந்திருக்கும் என ஊகித்துவிட்டார் . பங்காளிச் சண்டை. குமணன் நாடு விட்டு காடேகியதும், இளங்குமணன் தன் அண்ணன் தலையைக் கொண்டுவந்து தருவார்க்கு கோடிப்பொன் பரிசு என்று முரசறைந்ததும் புலவர் அறியவில்லை. அங்கே இங்கே என அலைந்து காட்டில் குமணனைக் கண்டார் புலவர். பாடிப் பரிசில் பெறவே வந்திருக்கிறார் என்றுணர்ந்து " புலவரே! இந்தாரும் என் வாள். என் தலையைக் கொய்து என் தம்பியிடம் கொடுத்தால் பரிசு தருவான். உன் வறுமை நீக்குக" என்றானாம் அக்கொடை வள்ளல்!


"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் 

தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே

..............................................................

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என

நாடு இழந்த தெனினும் நனி இன்னாதென

வாள் தந்தனனே, தலை எனக்கு ஈயத் தன்னின் சிறந்தது பிறிதொன்று இன்மையின்"              ( புறம்-165)


         ' இதைப் பெற்றுக்கொள்' என்று ஒருவனுக்கு கொடுப்பது உயர்ந்த செயல். அவ்வாறு கொடுப்பதை 'எனக்கு வேண்டாம்' என்று ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பது கொடுப்பதைக் காட்டிலும் மேலான செயல். அந்தச் செயலைத்தான் செய்தார் புலவர். அரசன் கொடுத்த வாளை வாங்கிக் கொண்டு இளங்குமணனிடம் சென்று அவனுக்கு அறிவுரை கூறி உடன்பிறந்தாரைச் சேர்த்து  வைத்தார் புலவர்.


"கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று- அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று"       

                                    ( புறம் - 204) 

        கொடை என்ற சொல்லின் பொருள் கர்ணன். " தர்மாத்மா என்று தர்மரைப் புகழ்கிறார்கள். யார் எதைக் கேட்டாலும் கொடுக்கிறார். நாங்களும் கொடுக்கிறோம்.  ஆனால் உலகத்தோர் கர்ணனை கொடைவள்ளல் என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி?" என்று கிருஷ்ணனிடம் பாண்டவர்கள் கேட்டார்கள். அதற்கு அவன் எல்லாரும் தான் தருகிறார்கள். வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக கர்ணன் எவ்வாறு இருக்கிறான் என்று காட்டுகிறேன் பாருங்கள்" என்றார் கிருஷ்ணர். இமயமலையைவிட உயரமான பொன்மலையை பாண்டவர்களுக்கும், கர்ணனுக்கும் கொடுத்தார். சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனத்திற்குள்ளாக இம்மலையை  தானம் கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை. 

          மாலை நெருங்கியது. முதலில் பாண்டவர்களிடம் சென்றான் கிருஷ்ணன். நிறையபேர் மலையை வெட்டிக் கொண்டிருந்தார்கள். ஏழை எளியோர்க்கு பாண்டவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கால்வாசிதான் அவர்களால் முடிந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு கர்ணனிடம் வந்தார் கிருஷ்ணன். 'என்ன கர்ணா? கெடு முடிந்து விட்டது. மலை அப்படியே இருக்கிறதே!' எனக் கேட்க அதற்கு கர்ணன்' நீங்கள் மலையைக் கொடுத்துச் சென்ற உடனே ஏழை ஒருவன் வந்தான். உடனே கொடுத்து விட்டேன்" என்றான். கிருஷ்ணன் 'இதுவல்லவோ கொடை!'  என்று கூற பாண்டவர்கள்' நாங்கள் எவ்வளவு பேருக்கு கொடுத்தோம்? இவன் ஒருவனுக்கே கொடுத்து விட்டு கொடை என்றால் எப்படி ஏற்பது?' என்று கேட்டனர். அதற்கு கர்ணன், 'வந்தவன் என் தேசம் முழுக்க வறுமை தாண்டவமாடுகிறது என்றான். அதனால் இதை வைத்து உன் தேசத்தின் வறுமையைப் போக்கு' என்று கொடுத்து விட்டேன் எனக் கூறினான். இதுவே வள்ளண்மை' என்றான் கிருஷ்ணன். 

          தர்மம் என்பது அறம். வாழ்க்கை நெறி. அதனாலே  தான் தர்மசீலன் என்ற சொல் வந்தது போலும். கொடை என்பது செயல். இன்னார், இனியார், உயர்திணை, அஃறிணை என்றெல்லாம் பார்க்காது. கொடுப்பது என வந்து விட்டால் உயிர், உடல், உடைமை எதுவாக இருந்தாலும் அப்படியே தருவதே கொடை. அப்படிக் கொடுப்பவனே வள்ளல். மற்றவர்கள் செய்வதெல்லாம் உதவி தான். 

        மயிலுக்கு போர்வை தந்தவனும், முல்லைக்குத் தேர் தந்தவனும் அஃறிணை என்றா பார்த்தார்கள்? 'அறிமடமும் சான்றோர்க்கணி' தானே!

            உலக வழக்கில் பயன்படும் எளிய சொற்கள் தானே என்று நாம் நினைப்பன எவ்வளவு நுட்பமுடையனவாய் உள்ளன! தமிழர் தம் வாழ்வின் இரு கண்களாக விளங்கும்  இலக்கியமும் இலக்கணமும் நினைந்து நினைந்து இன்புறத்தக்கன!

Monday, 11 August 2025

நானொரு தேனீ - 4 - இராச.மணிமேகலை

 நானொரு தேனீ - 4



    ' கூடுவிட்டு கூடு பாய்தல்' என்பதை விக்ரமாதித்தன் கதைகளில் படித்திருக்கிறோம். அது ஓர் அரிய வித்தை. அவ்வித்தையை கைவரப் பெற்றவர்கள் புலவர்கள், கவிஞர்கள். புலவர் ஆணாய் இருக்கலாம். அவர் பெண்ணொருத்தியின் உள்ளத்தை காலத்தால் அழியாத பாடலாக வடித்துத் தருகிறார் ; புலவர் பெண்ணாய் இருக்கலாம். வீரன் ஒருவனின் உள்ள எழுச்சியை உள்ளவாறு உணர்ந்து காட்ட வல்லராய் இருக்கிறார். சங்க இலக்கியங்களில்  புலவன் தன் பாடல்களைத் தலைவன் கூற்றாக, தலைவி கூற்றாக, பாங்கன் கூற்றாக, பாங்கி கூற்றாக  இதயம் மாறிப்புக்கு  அவர்தம் உணர்வுநிலைகளை நமக்கு கடத்துகிறானல்லவா?  அங்கு தான் கவிதை சாகாவரம் பெறுகிறது

    குடும்ப வாழ்க்கைக்கு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணம் வகுத்தவர்கள் நாம். அகத்தலைமை பெண்ணிற்கே உரியது. புறத்தலைமை ஆணுக்குரியது. அகத்துறை துணை மாந்தர்களான அன்னை, செவிலி, தோழி, தோழன் எல்லோரும் தலைமை நோக்கியே இயங்குவதை சங்கப் பாடல்களில் காண்கிறோம். 


        இங்கே தலைவன் கூற்றாக குறுந்தொகையில் ஒரு பாடல். தலைவன் தலைவியை அடைய நண்பனின் உதவியை நாடுகிறான். நண்பர்களில் இருவகை உண்டு. நகுதல் நண்பன் (ஓகே டா மாப்ள). இடித்தல் நண்பன்( வேண்டாம் டா மாப்ள)  . இவன் இடித்துரைக்கும் நண்பன். அவனுக்கு பதில் சொல்லும் விதமாக தலைவன் கூற்றாக அமைந்த பாடல். பாடியவர் வெள்ளிவீதியார் என்ற பெண்பாற் புலவர். 


"இடிக்கும் கேளிர் நுங்குறை ஆக

நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்

கையிலூ மையன் கண்ணில் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போல

பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே"


        என்ற பாடலின் தலைவன் தலைவியின்பால் ஆராக் காதலுடன் இருக்கிறான். செய்யவேண்டிய செயல்களை, கடமைகளை மறந்து அவள் நினைவாகவே இருக்கிறான். "இந்த காதல்நோய் உணர்ந்தார், உணராதார் என்றெல்லாம் பாராது எல்லாரையும் பற்றும் தன்மையுடைத்து. இந்நோயைப் பொறுத்துக் கொண்டு கடமையைச் செய்வாயாக" என்று இடித்து உரைக்கிறான் நண்பன். அதற்கு அவன் "நண்பா, என் காதல் நோயை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தால் மிகவும் நன்றுதான். சூரியனின் வெப்பத்தால் தகிக்கும் கற்பாறையின் மேல் வைக்கப்பட்ட வெண்ணெயை கையில்லாத, ஊமையன் ஒருவன் எவ்வாறு பாதுகாக்க இயலாதோ அப்படி இருக்கிறது என் நிலைமை! பொறுக்க முடியவில்லையே! நான் என்ன செய்வேன்?

   இதுதான் புலவனின் மொழிப் 

புலமை.'  காதற் போயின் சாதல்' என்று பிதற்றுகின்ற நிலையில் நண்பன் ஒரு பற்றுக்கோடு!  'பகிர்ந்த துன்பம் பாதியாகிறது, பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது' என்கிற நிலையில் உசாத்துணைவனாக அமைபவன் நண்பனே.  மேலும் அவன்,  " சின்னஞ்சிறு பாம்புக்குட்டி காட்டு யானையை வருத்தியது போலும் அவள் மெல்லுறுப்புகள் என்னைத் தாக்கின."

(குறுந்-119)  என்று நண்பனிடம் கூறுகிறான். இந்த உள்ளஎழுச்சியே 'வெண்ணெய் உணங்கல் போல' என்ற உவமையால் சுட்டப்பெறுகிறது. கற்பாறை மேல் பரவிய வெண்ணெய் போல அவனுள் காதல் நோய் பரந்தது என்ற உவமையை கற்பனை செய்து பாருங்கள்! பெண்பாற் புலவர் ஒருவர் ஆணின் உணர்வை நமக்குக் கடத்திய பாடல்.


       மற்றொன்று  தோழி கூற்றுப் பாடல். காதல் வெள்ளத்தில் மூழ்கிய தலைவன் இரவில் தனிமையில் தலைவியை சந்திக்க விழைகிறான். இதற்கு நண்பன் துணையை நாட முடியாது. தலைவியின் தோழியைப் பிடித்தால் தவிர அவளை நெருங்க முடியாது. தோழியும் இவளும் ஈருடல் ஓருயிராய், ஆடிப்பாவையைப் போன்றிருக்கின்றனர். 

 "தலைப்புணை கொளினே தலைப்புணை கொள்ளும்

கடைப்புணை கொளினே கடைப்புணை கொள்ளும்

புணை கைவிட்டு புணையோடு ஒழுகின்

ஆண்டும் வருகுவள் போலும்"

      இது கபிலர் காட்டும் தோழியின் ஓவியம். ' தலைவி தெப்பத்தின் தலைப்பாகத்தைப் பிடித்தால் இவளும் பிடிக்கிறாள். அவள் கடைப்பகுதியைப் பிடித்தால் இவளும் பிடிக்கிறாள். பிடித்திருக்கும்

பிடி நழுவி நீருள் மூழ்கினால் இவளும் மூழ்குவாள் போலும்". இவள்தான் தலைவியை நெருங்கத் தோதானவள் என நினைக்கிறான்

தலைவன். அவள் உதவியைப் பெற்று தலைவியைச் சந்திக்க இரவுக்குறியிடம் வருகிறான்.வரும் வழி யானையும், பாம்பும், புலியும் நடமாடுவது. வழித்தடம் வழுக்கலும், குறுக்கலும் உடையது.நேரமோ நள்ளிரவு!  இதனை எண்ணிக் கலங்குகிறாள் தலைவி.  இவளின் நிலைமையோ இன்னும் மோசம்! தந்தை வீட்டில் இருக்கவும் காற்சிலம்பை ஓசையிடாதபடிக் கட்டிக் கொண்டு ஏணிமேல் ஏறி தோட்டத்தில் இறங்கி மழை பெய்யும் நள்ளிரவில் இரவுக்குறியிடம் வருகிறாள். இச்சூழலை கவிஞன் பாடுகிற விதம் சினிமாக் காட்சியை விஞ்சும் தன்மையது!  ஊர் துஞ்சாமை,  ஊர் துஞ்சினாலும் தாய் துஞ்சாமை, தாய் துஞ்சினாலும் காவலர் துஞ்சாமை, காவலர் துஞ்சினும் நாய் துஞ்சாமை, நாய் துஞ்சினும் நிலவு மேகத்துகில் நீக்கி பால் போல் நின்றொளிர்தல், நிலவு  மறைந்தாலும் கூகை குழறுதல், கூகை குழறா தொழியினும் பொந்தில் வாழும் சேவல் குரலெழுப்பிக் கூவுதல், இவ்வளவு வருந்தொழிற்கு அரிதான முட்டுப்பாடுகளக்" (அகம்- 122) கடந்தே இவர்களின் காதல் வளர்கிறது. இப்படியே போனால் சரிவராது என்று உணர்கிறாள் தோழி. இக் களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கையாக மாற அறத்தொடு நிற்கிறாள்.


"கருங்கட் தாக்கலை பெரும்பிறி

துற்றெனக்

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி

ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் 

சாரல்நாட! நடுநாள் வாரல் வருந்துதும் நாமே!

               -  கடுந்தோட் கரவீரனார்

என்ற ஆண்பாற் புலவர் பாடிய இப்பாடல் பெண்ணின் இதயம் புக்கு மலர்ந்த பாடலன்றோ? "கரிய கண்களை உடைய ஆண்குரங்கு இறந்ததால் கைம்மைத் துயரைத் தாங்க வியலா பெண்குரங்கு, தன்னுடைய தொழிலில் பயிற்சியடையாத இளம்குட்டியைத் தன் சுற்றத்திடம் சேர்த்து விட்டு உயர்ந்த மலையில் ஏறி உயிரை மாய்த்துக்கொள்ளும் மலைச்சாரலை உடைய நாட்டின் தலைவனே! வருந்தொழிற் கரிதானவற்றைக் கடந்து நள்ளிரவில் வராதே! அதனால் தீங்கு நேரும் என்றெண்ணி நாங்கள் கலங்குகிறோம்". என்பது இப்பாடலின் பொருள். "உனக்கு தீங்கு நேர்ந்தால் இவள் உயிர் வாழ மாட்டாள் அஃறிணை உயிராகிய குரங்கினமே இப் பிரிவாற்றாமைக்கு உயிர் விடத் துணியும் போது இவள் மட்டும் எப்படி உன்னைப் பிரிந்து உயிர் வாழ்வாள்? அதனால் இவளை விரைந்து மணம் செய்துகொள்வாயாக" என்ற குறிப்புப் பொருள் இதில் உள்ளுறை உவமமாக, இறைச்சிப் பொருளாக அமைந்துள்ளது.   இறுதியாக,


"பாமர ஜாதியில் நான் தனி மனிதன்

 படைப்பதனால் என் பேர் இறைவன்

       .............................

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த

நிலையிலும் எனக்கு மரணமில்லை"


 என்ற கவியரசரின் பாடல் வரிகள் உலகில் உள்ள அனைத்து 

புலவர்களின், கவிஞர்களின் குரலாக ஒலிக்கிறதல்லவா!

Tuesday, 5 August 2025

நானொரு தேனீ. 3. - இராச.மணிமேகலை

 




நானொரு தேனீ - 3


 கவிதை என்பது யாது? இதற்கான கேள்விகளும் வரையறைகளும் காலங்காலமாக தோன்றியபடியே உள்ளன. "கவிதை இது அல்ல, இது அல்ல என்பதை மிக எளிதாக கூறிவிடலாம். ஆனால் இதுதான் கவிதை என்று வரையறுத்தல் எளிதல்ல" என்கிறார் ஜான்சன் என்ற அறிஞர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, சிந்து.... ஆகிய பா வகைகளால் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்களில் இருந்து வசனகவிதை, புதுக்கவிதை என்றும், இதன் உடன்பிறப்புகளான ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்யு, ஹைபுன் என்றும் கவிதை தன் வடிவத்தை காலந்தோறும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. குறுந்தொகை, ஐங்குறுநூறு, திருக்குறள் இவற்றின் சிறப்பே  அதன் சொற்கட்டும், வடிவமும் தான். 

        இன்று புதுக்கவிதையின் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞன் மகாகவி பாரதி தான் நமக்கு புதுக்கவிதையின் முன்னோடி. வால்ட் விட்மனின் (Leaves of grass) 'புல்லின் இதழ்கள் 'என்ற கவிதைத் தொகுப்பு தன்னை வசனகவிதை எழுதத் தூண்டியதாகக் கூறுகிறார் பாரதி.

 " சுவை புதிது, சொல் புதிது வளம் புதிது, சோதிமிக்க நவகவிதை" என்று புதுக்கவிதையை ஆராதிக்கிறார்.

         கவிஞன், வாசகனின் அறிவுடன் பேசினால் வசனம். உணர்வுடன் பேசினால் கவிதை. தீ சுடும் என்பது அறிவுநிலை. "தீ இனிது" என்பது உணர்வுநிலை. ஒரு புலனால் அறிந்ததை மற்றொரு புலனால் உணர்வதே  இங்கு கவிதையாகிறது. யாப்பிலக்கண விதியிலிருந்து விலகி நடக்கும் குழந்தையே புதுக்கவிதை. வல்லிக்கண்ணன் எழுதிய "புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற நூல் புதுக்கவிதையைப் பற்றி அறிய வேண்டிய மிகச்சிறந்த பொக்கிஷம்.

       கவிதை அன்றிலிருந்து இன்றுவரையிலும் இயற்கை அழகு, அன்றாட வாழ்வு, சமூகச் சீர்கேடு ஆகியவற்றையே பாடுபொருளாகக் கொண்டுள்ளது. வடிவம்தான் மாறியுள்ளது. இந்த வடிவ அமைப்பிலான கவிதைகள் வாசகனுக்கு அவனுள் புத்துணர்வை, அழகுணர்ச்சியைக் கிளர்த்துகின்றன.சான்றாக, திருக்குறளில் அடக்கமுடைமையில் சொல்லப்படுகின்ற "நிலையின் திரியாது அடங்குதலும், ஒருமையுள் ஆமை போலிருத்தலும், எல்லார்க்கும் நன்றாம் பணிதலும்".... இன்னும் சொல்லப்படுகின்ற அறநெறிகளை 


            "அடக்க மாகும் வரை

             அடக்கமாக இரு"

                                               வாலி

 என்று  ஒரு கவிஞன் நம்முன் வைக்கும்போது மனதுக்குள் மத்தாப்புச் சிதறல் ஒன்று நிகழ்கிறதல்லவா? அதுதான் இன்றைய கவிதைகள் நமக்களிக்கும் கொடை.

      "இலக்கணச் செங்கோல்

      யாப்புச் சிம்மாசனம்

      எதுகைப் பல்லக்கு

      மோனைத் தேர்கள்

      தனிமொழிச் சேனை

      பண்டித பவனி"

இவை எதுவுமில்லாத கருத்துகள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக் கொண்ட மக்களாட்சி முறையே புதுக்கவிதை என்று கூறும் மு.மேத்தாவின் கருத்துக்கள் இங்கு நினைவுகூரத் தக்கன. 


இக்கால நவயுகக் காதலை,


  "  உனக்கும் எனக்கும்

    ஒரே ஊர்

    வாசுதேவநல்லூர்

    நீயும் நானும்

    ஒரே மதம்

    திருநெல்வேலி சைவப்

    பிள்ளைமார் வகுப்பும் கூட

    உன்றன் தந்தையும்

    என்றன் தந்தையும்

    சொந்தக்காரர்கள்

     எனவே 

   செம்புலப் பெயல்நீர் போல

  அன்புடைநெஞ்சந்தாங்கலந்தனவே"


என்று குத்தலாகச் சமூகத்தைச் சாடும் கவிஞர் மீராவின் கவிதையும்,

   

      " ஒருத்தி 

       சிரிக்கக் கூடாத இடத்தில்

       சிரித்துத் தொலைத்தாள்

       அதுதான் பாரதம்.


       ஒருத்தி

        சிரிக்க வேண்டிய இடத்தில்

       சிரிப்பைத் தொலைத்தாள்

       அதுதான் இராமாயணம்"


என்று தொன்மத்தை விளக்கும் கவிஞர் வைரமுத்துவின் கவிதையும்,


           "  எரியவில்லை

              அடுப்பு சேரியில்

              போராடினோம்

               எரிந்தது அடுப்பல்ல

               சேரி"

          ----------=--------------

            "மாடியில் இருந்து

            துப்பினால்

            குடிசையில் விழும்

            குடிசையில் இருந்து

             துப்பினால்

             மாடியே விழும்."


என்று பாடும் காசி ஆனந்தனின் வெடிகுண்டு ரக புதுக்கவிதையும் நான் சுவைத்த தேன்துளிகளில் சில.

                                            

ஹைக்கூ (துளிப்பா)


      ஜென் தத்துவ ஜப்பானிய இலக்கிய கவிதை வடிவமே ஹைக்கூ கவிதைகள். செறிவான இக்கவிதையில் பெரிதும் கையாளப்படுவது படிம உத்திகளும், குறியீடுகளுமே.  வாசகனின் சிந்தனையைத் தூண்டுவதும், சிரிக்க வைப்பதும், சுவைத்திறனை வளர்ப்பதும் ஹைக்கூ( துளிப்பா) வின் சிறப்பு.

     

      "அன்புடைமை அதிகாரத்தை

      ஆசிரியர் கற்பிக்கிறார்

      கையில் பிரம்புடன்"

                                -  கழனியூரன்


     "  இதென்ன 

       இந்த விழிக்குளம்

       மீனையும் காட்டுகிறது

       தூண்டிலையும் நீட்டுகிறது"

                                        -  மு. மேத்தா


       "உரை(றை) ஊற்றி ஊற்றிப்

       பார்த்தாலும் புளிக்காத பால்

       தந்தை தந்த தாய்ப்பால்

       முப்பால்"                       

                                         -அறிவுமதி

  

      


சென்ரியு (நகைத் துளிப்பா)


         அங்கதம், வேடிக்கை, விடுகதை கலந்து எழுதப்படுவது சென்ரியு கவிதைகள். ஈரோடு தமிழன்பனின் "ஒரு வண்டி சென்ரியு" சுவைக்கத்தக்க ஒரு கவிதைத் தொகுப்பு.


              " கணக்குக் கேட்கத்

              தொடங்கினார் கடவுள்

              காலியாகக் கிடந்தது 

               உண்டியல்"


            "சாகும்வரை உண்ணாவிரதம்

            என்றார் தலைவர்.

            யார் சாகும்வரை"


            " பாலாபிஷேகம்

             வருந்தினார் கடவுள்

             அதிகமாய் தண்ணீர்"

          

           "நதியின் பாடல்

           கேட்டபடி வளரும்

            நாணற் புதர்கள்"


லிமரைக்யு ( இயைபுத் துளிப்பா)


     'லிமரிக்' என்பது ஆங்கிலக் கவிதை வடிவம். லிமரிக்கும் ஹைக்கூவும்  இணைந்து, அங்கதச் சுவையோடு, மூன்று அடிகளில் முதலடியின் ஈற்றுச் சீரும் இறுதி அடியின் ஈற்றுச் சீரும் இயைபுத் தொடையாக அமைவது லிமரைக்யு


     "பாடுவது அருட்பா பதிகம்

     அன்றாடம் உணவில் ஆடுகோழி

     மீன்நண்டு வகைகளே அதிகம்"


      " எதற்கப்பா எதுகைமோனை

       மின்னலைப் பிடித்து

       வைக்கவா சட்டி பானை? "


       "மணக்கும் மதுரைமல்லி

       வாங்கிப் போனான் காதலிக்கு

       மனைவி பேரைச் சொல்லி"


இப்படியாகச் சில தேன் துளிகள் சுவைத்தற்குரியன.


'ஹைபுன்'  என்பது சிலப்பதிகாரத்தின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் போன்றது. அவ்வளவாக இன்னும் கவிதைகள் வெளிவரவில்லை


            நான் சுவைத்தவற்றில் சில துளிகளை மட்டுமே உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.

Saturday, 2 August 2025

நானொரு தேனீ. 2. - இராச. மணிமேகலை






 நானொரு தேனீ- 2


கையறு நிலை. கை அற்ற, செயலற்ற சூழ்நிலையில் நெருங்கிய ஒருவரின் பிரிவிலோ, பிறப்பிலோ, இறப்பிலோ பாடப்படும் பாடல். இறப்பில் பாடப்படும் ஒப்பாரியும் கையறுநிலையே. 'உன்னுடன் ஒப்பு நோக்கத்தக்கவர் யார்? ' என்பதே ஒப்பாரி. படைப்பாளியின் மொழித்திறன் வாசிப்பவனின் உணர்வுநிலையாக மாற்றம் பெறுவதே கவிதையின் அழகியல். 

இங்கே ஒரு புறநானூற்றுப் பாடல். குறுநில மன்னன் நம்பி நெடுஞ்செழியனுடைய உயிர் நண்பர் பேரெயின் முறுவலார். அரசனின் சாவுச் சடங்கு. அவனைப் புதைப்பதா, எரிப்பதா என்ற குழப்பம். "தொடியுடை தோள் மணந்தனன் "(புறம். 239) என்று தொடங்கி அவனுடைய 18 பண்புநலன்களையும் கூறியபின் இப்படி முடிகிறது அப்பாடல்.

    " இடுக வொன்றோ சுடுக வொன்றோ;

படுவழிப் படுக, இப்புகழ்  வெய்யோன் தலையே."

 செய்யவேண்டிய அனைத்து அறன்களையும் செய்து 

முடித்து விட்டான். போடா போ இனி சுட்டால் சுடு, புதைத்தால் புதை என்று ஆற்றாமையோடும் கழிவிரக்கத்தோடும் முடிகிறது இப்பாடல். இப்பாடல் தோன்றிய காலத்தில்  அரசனோ, வீரர்களோ விழுப்புண் பெற்று வீரமரணம் அடைந்தால் துறக்கம் புகுவர் என்றும், அல்லாமல் நோயினாலோ, மூப்பினாலோ இறப்பின் தலையை வாளால் போழ்ந்து 'வீரமறவர் சென்றவழி செல்க 'எனப் புதைத்தால் மட்டுமே அவ்வுயிர் துறக்கமடையும் என்றும் நம்பிக்கை. இவன் இயற்கை மரணம் அடைந்தவன். தன் நிலையழிந்து புலவர் இருந்த நிலையில் எழுந்தது இப்பாடல்.

      காலம் வேறு. உணர்வுத் தருணம் ஒன்றே! முத்தமிழறிஞர் கலைஞர் இறந்தார். சட்டப்  போராட்டம்,  நடந்தது மெரினாவில் புதைக்க. இந்தியாவின்,தமிழகத்தின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர். அன்று அண்ணாவின் அருகில் துயில 'ஆறடி மண்' ணுக்காக தீர்ப்பு அறிவிக்கப்பட்ட தருணம். உடைந்து அழுத உறவுகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும், கண்கலங்கிய தமிழக மக்களுக்கும் "ஆங்குச் செய்பனவெல்லாம் செய்தனன் ஆதலின் ", சுட்டால் சுடு, புதைத்தால் புதை ; போடா போ என்ற மனநிலைதானே இருந்திருக்கும்?


      சீவகசிந்தாமணியில் இருந்து  ஒரு

பாடல். சீவகன் அரசகுமாரன். அரண்மனையில் பிறக்க வேண்டியவன். நிறைமாத கர்ப்பிணியான விசையை அமைச்சனின் சதியால் நாட்டை விட்டு ஓடுகிறாள். சுடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுக்கிறாள்.


"வெவ்வாய் ஓரி முழவாக

      விளிந்தார் ஈமம் விளக்காக

ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின்

       நிழல் போல் நுடங்கிப் பேயாட

எவ்வாய் மருங்கும் இருந்திரங்கி

      கூகைக் குழறிப் பாராட்ட

இவ்வாறாகிப் பிறப்பதுவோ

      இதுவோ மன்னர்க்கியல் வேந்தே


நரியின் குரல் முழவு; ஈமத்தீ விளக்கு; சுடுகாடு அரங்கு; மரங்களின் நிழலாட்டம் நடனம்; ஆந்தைகளின் அலறல் பாராட்டு; இப்படியாக பிறப்பதுவா மன்னனின் பிறப்பு? வாழ்ந்து கெட்டவர்களின் சரிவு வார்த்தைகளால் சொல்லுந் தரமன்று!இதுவும் கையறுநிலையே!


    கம்பராமாயணத்தின் பாடல் ஒன்று. இராமன் காட்டுக்கு செல்வதைப்பற்றிக் கேட்டவர்களின் துன்பநிலை. எங்கும் அழுகையொலி. அதைக் கம்பன் வர்ணிக்கும் விதத்தில் நமக்கும் கண்ணில் நீர் நிறையும்.


    "கிள்ளை யொடு  பூ வை 

         அழுத;கிளர்மாடத்து

   உள்ளு றையும்   பூ சை 

         அழுத;  உருவு  அறியாப்

   .......,.................................

    ' வள்ளல் வனம்புகுவான் 

         என்றுரைத்த மாற்றத்தால்'.


     ஆவும்அழுத; அதன்கன்று

           அழுத; அன்றலர்ந்த 

      பூவம் அழுத;  புனல்புள்

          அழுத;கள்ளொழுகும்

     காவும் அழுத;  களிறு

         அழுத;கால் வயப்போர்

    மாவும் அழுத; அம்

        மன்னவனை மானவே"


என்ற பாடலில் பெரியோர்களும், கருவில் இருக்கும் வடிவு காணாத குழந்தைகளும்,அஃறிணைப்பொருள்களும் அழுதனவாம். அதாவது ஓரறிவுயர் முதல் ஆறறிவுயிர் வரை.


         மறைந்த பிரதமர் நேருவுக்கு கவிஞர் கண்ணதாசன் பாடிய பாடல்

     "சாவே உனக்கொரு நாள் 

            சாவு வந்து சேராதோ

      சஞ்சலமே நீயும் ஒரு

            சஞ்சலத்தைக் காணாயோ

      தீயே உனக்கொரு நாள்

            தீ மூட்டிப் பாராமோ

யாரிடத்துப் போயுரைப்போம்

யார்மொழியில் அமைதி கொள்வோம்

யார் துணையில் வாழ்ந்திருப்போம்

யார் நிழலில் குடியிருப்போம்"

        படைப்பாளன் தன் மொழித்திறனால் மனிதர்களின் உணர்வுநிலைகளைக் கிளர்த்தும், இப்பாடல்கள் காலத்தால் சாகாவரம் பெற்றவை.


நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...