Saturday, 14 September 2024

புதுவை வெண்முரசு கூடுகை 75 சிறப்பமர்வில் நண்பர் இரா.விஜயன் அவர்கள் உரையின் எழுத்து வடிவம்

 


விஜயன் அவர்களின் உரை

ஆசிரியர் உள்ளிட்ட அவைக்கு வணக்கம்

பொதுவாகவே புதுவை வெண்முரசு கூடுகையின் இலக்கண வரம்புக்குள்  நின்று பேசுவது அதிக கவனம் கோருவதான ஒரு காரியம். அதிலும் ஆசிரியரையும் பார்வையாளர் மாடத்தில் அமர்த்தி வைத்துக்கொண்டு பேசுவதென்பது இன்னும் ஆகச் சிறந்த கவனம் தேவைப்படும் ஒன்றாக ஆகிப்போகிறது.

இந்த 75ஆவது கூடுகையின் பேசுபகுதியை எனக்கு முன்னாலும் பின்னாலும் பேசுபவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்  நான் சென்ற கூடுகையின் பேசுபகுதியில் நான் பெற்ற ஒரு திறப்பைப் பற்றி இங்கு கூற விழைகிறேன்.இது எங்கள் கூடுகையில் நாங்கள் எப்படி கருத்துக்களை கொண்டும் கொடுத்தும் ஒருவரை ஒருவர் நிரப்பிக் கொள்கிறோம் என்பதையும், கூட்டு வாசிப்பின் மூலம் வெண்முரசை நாங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதையும் விளக்குவதாக அமையும். வாசக இடைவெளிகளை நிரப்பிக் கொள்ளுதலில் வாசகர்களுக்குள்ளேயே இடைவெளிகள் இருக்கலாம்.ஆனால் இடைவெளிகள் நிரப்பப்படும்போதுதான் வாசிப்பு முழுமையடைகிறது.

சென்ற பகுதியில் நேமிநாதராகப் போகிற அரிஷ்டநேமி  சுப்ரதீபம் என்ற வெள்ளை யானை மீது அமர்ந்ததும் அது செல்லும் திசையை  தீர்மானித்தது போல் விரைவு நடை போடுகிறது. மக்கள் வெள்ளம் இன்னதென்று புரியாமல் அதைப் பின் தொடர்வதும் முன்னால் ஓடுவதுமாக இருக்கிறார்கள். சாலைமுனையை அடைந்ததும் சுப்ரதீபம் அதற்குமேல் முன்னகராமல்  நின்றுவிட்டது. முன்னும் பின்னும் என உடலை அசைத்தபடி வலது காலை துக்கி மண்ணில் வைப்பதும் எடுப்பதுமாக ஆடியது. அர்ச்சுனனும் அதன் அணுக்கனும் எவ்வளவோ முயன்றும் அதன் தயக்கத்துக்கான காரணத்தை அறிய முடியவில்லை. யானையின் அணுக்கன் அதன் விலாவை பலமுறை தட்டி முன்னால் செல்லும்படி கோரினான். யானை துதிக்கையை வீசியபடி ஊசலாடி நின்றது. எங்கிருந்தோ வரும் ஓசையை செவி கூர்வதென அதன் செவிகள் முன்னால் மடிந்து அசைவிழந்தன. பின்பு உயிர் கொண்டு பின்னால் வந்து விசிறிக்கொண்டன.அதற்குள் அர்ச்சுனனின் புரவி ஒருமுறை தும்மி தலைகுனிந்து பிடரி உலைத்தது. அது ஏன் அவ்வாறு செய்கிறது என்று  அவன் எண்ணுவதற்குள் மேலைவானில் இடியோசை எழுந்தது. சுப்ரதீபத்தின் உடல் சிலிர்த்தது. செவிகள் அசைவிழக்க அது மத்தகத்தை மேலே தூக்கியது. மின்னல் அதிர்ந்து சூழ்ந்திருந்த சுவர்களனைத்தும் ஒளிப்பரப்பாக மாறி அணைந்ததுமே வானம் பிளப்பதுபோல பேரிடி ஒன்று எழுந்து பல   நூறாக உடைந்து சரிவுகளில் உருண்டு சென்றது.அதைக் கேட்டதும் சுப்ரதீபம் வலதுகாலை தூக்கி வைத்து நடக்கத்தொடங்கியது. இந்த அளவோடு இப்பகுதியை நிறுத்திக்கொண்டு அடுத்த அத்தியாயத்திற்கு சென்று விடுகிறார் ஆசிரியர். அதன் பிறகுதான் சுப்ரதீபம் அவரை ஆடுகளின் கொலைக் களத்திற்கு இட்டுச் செல்கிறது. அங்கு அந்த காட்சிகளைக் கண்டு அவர் விதிர்ப்பதுவும், சன்னதம் கொண்டவராக ஆபரணங்களையும், உடைகளையும், முடிக்கற்றைகளையும் கலைந்து நிர்வாணக் கோலமாய் யானை மீதே பயணத்தைத் தொடர்வதாக அந்தப் பகுதி முடிவடைகிறது.

இந்த இடத்தில் ஓர் இடைவெளியை ஆசிரியர் விட்டுவைக்கிறார். சுப்ரதீபம் ஏன் தயங்கியது? அது எந்த ஒலியை செவிகூர்ந்தது? பின்னர் அது எதைக் கேட்டபின்னர் தன் தயக்கத்தை உடைத்து முன் நகர்ந்தது? போன்ற வினாக்களை எழுப்பாமல் கடந்து போய்விட முடியாது. ஆனால் நாங்கள் கடந்துதான் போய்விட்டோம். ஆனால் தாமரைக்கண்ணன் பேசும்போது இந்த இடைவெளியை நிரப்பிக்கொள்ளும் ஒரு தகவலைக் கூறினார். அதாவது இப்படி ஒரு தீர்த்தங்கரரின் விண்ணேற்பு தருணத்தில் வானுலகத்திலிருந்து  மணியோசை போன்ற ஒரு சமிக்ஞை எழும் என்ற தகவலை கோடிட்டுக் காட்டினார். அந்தத் தகவல் ஒரு திறப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் அத்தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள சமவசரணம் குறித்த சில இணைப்புகளை எனக்கு அனுப்பிவைத்தார். அதில் ஒரு ஓவியத்தில் விண்ணேற்பு சமயத்தில் தீர்த்தங்கரர் மேல் வானுலகத்திலிருந்து வானுறை தெய்வங்கள் மலர்க் கணை தொடுப்பதும், துந்துபி இசைப்பதும், முரசொலி எழுப்புவதுமான சித்திரங்கள் உள்ளன. அதுமட்டுமல்ல அவருக்கு அங்கே ஒர் அரியணை ஒருக்கப்படுகிறது, அவர் விண்ணேறி வர பொற்படிகள் அமைக்கப்பட்டு அவரை அழைத்துவர தேவதூதர்களையும் பூவுலகிற்கு அனுப்பிவைக்கிறார்கள். தேவர்கள் அனைவரும் கை கூப்பி அவரை எதிர்கொண்டு அழைக்கிறார்கள். இப்படி ஒரு சித்தரிப்பை அந்த ஒவியத்தில் காணமுடிகிறது.

சுப்ரதீபம் ஏன் தயங்கியது, எதைச் செவி கூர்ந்தது, அர்ச்சுனன் குதிரை ஏன் தும்மியது என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது. அங்கு கூடியிருக்கும் மானுடருக்குக் கேட்காத அந்த ஒலிகளை சுப்ரதீபமும் அர்ச்சுனனின் குதிரையும் மட்டுமே கேட்டன. விலங்குகளுக்கு அந்தத் திறன் இயற்கயாகவே உண்டு என்பதாக நாம் புரிந்துகொள்ளலாம். தரையில் விரவிக் கிடந்த பூக்கள்கூட விண்ணிலிருந்து விழுந்தவைதானோ என்ற எண்ணம் கூட எனக்கு  எழுந்தது. இப்படியாக ஆசிரியர் விட்ட இடைவெளியை என் வாசிப்பில் நான் புரிந்துகொண்டேன்.

இதுதான் எங்கள் கூடுகையின் பலம். இப்படி ஒருவருக்கொருவர் நிரப்பிக் கொள்வதால் வெண்முரசு வாசிப்பு மேலும் மேலுமென எங்கள் உயிரையும் உள்ளத்தையும் நிரப்புகிறது.


No comments:

Post a Comment

நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...