Tuesday 22 August 2017

புதுவை கூடுகை - 03

புதுவை கூடுகை - 03


வெண்முரசு புதுவைக் கூடுகை : 3நாள் :- 20-04-2017
தலைப்பு :- முதற்கனல் - எரியிதழ்
அன்புள்ள நண்பர்களே , வணக்கம் . இன்று நிகழ்காவியமான வெண்முரசின் விவாதக் கூடுகை திட்டமிட்டபடி மாலை 6:00 மணிக்கு தொடங்கி இரவு 8:30 மணிக்கு நிறைவுற்றது . புதிய உறுப்பினர்களாக நான்கு பேர் இணைந்து எண்ணிக்கை பதிமூன்றை தாண்டியது மிக மகிழ்வாக இருந்தது . அடுத்த மாதம் மேலும் சில நண்பர்கள் இணைவார்கள் என்கிற தகவல் உற்சாகமளிப்பதாக இருக்கிறது.
திரு.ஜெயமோகன் அவர்களின் தளத்தில் புதுவைக் கூடுகையைப் பற்றிய செய்தி வெளிவந்திருந்தது ஒரு திருப்புமுனையாக , ஓர் நல்ல தொடக்கமாக இருந்தது. இவ்வளவு விரைவில் இது நடக்குமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை . புதுவை கூடுகைக்கு பெரும் ஊக்கமளித்த திரு.காளிப்பிரசாத் மற்றும்  கடலூர் திரு.சீணு அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
இன்றைய தலைப்பான எரியிதழ் உரையை திரு.மணிமாறன் தொடங்கி வைத்துப் பேசினார் அடுத்து திரு. நாகராஜன் அவர்கள் கடந்த இரண்டு மாதத்தின் தலைப்புகளையும் தொகுத்து செறிவாக சுருக்கமாக உரையாற்றினார் .
திரு. துரைவேலு அவர்கள் அம்பையின் துர்பாக்கிய சூழ்நிலையையும் அவளது தந்தையின் கைவிடலும் தன்னை பாதித்ததை பற்றி கூறி அந்த வருத்தத்தை ஒரு பகடியாக எழுதியதை குறித்து கூறினார் . அது அனேகமாக சொல்புதிது குழுமத்தில் வந்துள்ளது என நினைக்கிறேன்.
திருமதி. சுதா சென்னையில் இருப்பதாகவும் வர இயலாமைக்கு வருந்தி இருந்தார் . திரு. திருமாவளவன் எரியிதழ் பற்றய அற்புதமான துணுக்குகளாக நிறைய செய்திகளை பதிவு செய்தார் .
இந்தக் கூடுகைக்கென்று நேற்றிரவு மார்த்தாண்டத்தலிருந்து கிளம்பி வந்த கலந்து சென்ற திரு.சிவாத்மாவிற்கு நன்றி.
புதிய நண்பர்களாக திரு.விசாகன் திரு.இளங்கவிஅருள் , திருமதி.கலைவாணி அழகானந்தம் கலந்து கொண்டு பேசினார்கள் .
திரு இளங்கவிஅருள் பேசிய போது அவரின் இலக்கிய கூட்ட பங்களிப்பைப் பற்றி கூறிவிட்டு திரு.ஜெயமோகனை தான் குற்றால கூடுகையில் சந்தித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இந்த மாதிரியான விவாதக் கூட்டங்களை கலந்து கொண்ட தனக்கு  வெண்முரசு விவாதம் முறை ஆச்சர்யமளிப்பதாக கூறினார் .அடுத்த விவாத கூட்டத்தில் தன்னுடைய பதிவை அவசியம் வைப்பதாக கூறினார் .
திரு.விசாகன் தான் வெண்முரசு வாசித்ததில்லை என்று கூறிவிட்டு திரு.ஜெயமோகனின் பிற ஆக்கங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் , அடுத்து முறை வெண்முரசு பற்றிய பதிவை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம் .
திருமதி. கலைவாணி பேசும்போது தந்தை மகள் உறவின் நெகிழ்ச்சி பற்றியும் அம்பை பற்றிய பதிவை முன்னிட்டு பேசினார் .
அடுத்த தலைப்பு " அணையாசிதை" என முடிவு செய்யப்பட்டது . கூடுகை தேதி பின்னர் முடிவுசெய்து அறிவிக்கப்படும்  (அனேகமாக மூன்றாவது வியாழக்கிழமை என நினைக்கிறேன் )
குறிப்பு:-
வெண்முரசு மூன்றாம் கூடுகையில் பங்குபெற்ற உறுப்பினர்கள் தங்கள் பதிவுகளை இந்தத் திரியில் ஏற்றவும் .





வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் – எரியிதழ் "
 விஷம்நாள் 20-04-2107.                                                
வெண்முரசு புதுவைக் கூடுகை - 3 :
“நான் விரும்புவதைச்செய்பவளாகவே இதுவரை வளர்ந்திருக்கிறேன். இனிமேலும் அவ்வாறுதான் வாழ்வேன்” என்றாள். “…என் வழி நெருப்பின் வழி என்று முதுநாகினி என்னிடம் சொன்னாள். குன்றாத விஷம் கொண்டவையாக என் சொற்கள் அமையவேண்டுமென என்னை வாழ்த்தினாள். இப்போதுதான் அவற்றின் பொருள் எனக்குப்புரிகிறது. என் பாதையை நானே அனைத்தையும் எரித்து அமைத்துக்கொள்வேன்" - அம்பை
 எரியிதழ் - விஷமே அனைத்துமாக  பரிணமித்துள்ளது மலரில் தேனென ,மலரின்  விஷமென, பிரபஞ்சத்தின் சொத்தென இயலாமையென இயலுவதென அடைவெதென விடுகையென வழியென பேச்சென வெஞ்சினமென .
கொல்லும் அடர் விஷம் நீர்மையில் கொள்ளுகையில் கொல்லாததாக சத்தாக உரமாகவும் பரிணமிக்கிறது . அம்பையன் இதழில் விஷம் சொல்லாகி நிற்கிறது.
நிகழ இருக்கும் அனர்த்தத்தை அறியாது அவள் சொல்வது அனைத்தும் , அவள் சொன்னபடியே நிகழ்ந்து அனைத்தும் அவள் தவறான விழைவின் பயன் என முடிகிறது .
அவள் கொண்ட காதல் தவறு அதன் பொருட்டு அவள் பீஷ்மரிடம் உரைத்த வெஞ்சினம் தவறு, தன் தவறை சால்வனிடம் அறிகிறாள் அவன் நிஜஸ்வரூபம் ஆறிந்து முனிகிறாள. உடன் பாதுகாப்பாக தாயின் கருவறை திரும்ப நினைத்து அது முடியாது , கைமாற்றி விடும் ஊழின் தேவதைகளின் விளையாட்டில் சிக்கி , நெருப்பை விழையும் விட்டிலென பீஷ்மரில் விழுந்து பொசுங்குகிறாள்
01.அம்பையின் விஷம் , விருஷ்டியில் தன்னை அறிந்தது,
02.சிவனின் விஷம் உலகை பிறிதொருவர் இயலாமையால் அழிவுறலாகாது என்பது ,
03.பீஷ்மரின் விஷம் தான் தோற்றேன் என எண்ணியது.
04.வசித்திரவீர்யனின் விஷம் இரண்டைத்தாண்டி மூன்றாவதில் நிலைத்தது ,
05.தேவர்களின் விஷம் தன்னெறி மறந்து சோம்பி இருந்தது ,
06.அவுனர்களின் விஷம் அகங்காரத்தினாலனது.
07.வாசுகியின் விஷம் அசைவையே நிறுத்தியது.
08.தாட்சாயணியின் விஷம் தன் இடமறியாதது. அக்னியில் உறைவது .
09.கத்ருவின் விஷம் வாசுகியானது
10.துர்வாசரின் விஷம் சிவனின் ஆக்ஞையானது
11.ஐராவரத்தின் விஷம் அஞ்சுவதில் நின்றது
12.தேவேந்திரனின் விஷம் , மரணமின்மையால் மரியாதை அறியாதது .
13.பாற்கடலின் விஷம் அமுதமென்றானது
14.பூமியின் விஷம் படைக்கப் பட்டத்தின் காலத்தால் மகிழ்வது
15.படைப்பினங்களின் விஷம் சந்ததியாக பெருகியது
16.நிருதனின் விஷம் அம்பை விழைந்ததை ஆற்றியது
17.விப்ரதனின் விஷம் அம்பையை ஏழ்முறை தீட்டிய வாள் என்று உரைத்தது .
18.சால்வனின் விஷம் வெட்கமற்ற விழைவு
19.குணநாதரின் விஷம் அரசு சூழ்தலை சாலவனறிய சொல்லியது .
20.பீமதேவனின் விஷம் அசர்பந்தத்தில் நெறியுறைத்தது .
21.ஃபால்குனரின் விஷம் கையறுநிலையில் அம்பையை கைவிட்டது
22.சுவர்ணையின் விஷம் அவளை குழந்தையிலிருந்து கைவிட்டது.
23.சோபையின் விஷம் அவளை அகங்காரத்தில் நிலைநிறுத்தியது.
24.விருஷடியின் விஷம் அவளின் ஆழ்மன விழைவை கூறியது.
இப்படி குறைந்தது 24 பேரின் கண்ணீர் , கசப்பு, வெறுப்பு,தவிப்பு கடமை நெறி விஷமென அம்பையின் மேல் உமிழ்ப்படுகிறது.

பூமியின் ஆடல்

வாசுகி மீண்டுவந்ததும் பாதாள நாகங்கள் பிணைந்து நெளிந்தாடி நடனமிட அந்த அசைவில் பாதாளமே குலுங்கியது. பாதாளம் மீது அமர்ந்த பூமி அசைந்தது. நாகங்களின் மதநீரின் மணம் எழுந்தபோது மண்ணின் மீது நூறாயிரம் காடுகளின் அத்தனை மரங்களும் செடிகளும் பூத்துக்குலுங்கின. அவற்றில் காய்களும் கனிகளும் பொலிந்தன. வயல்வெளிகள் விளைந்தன. மரங்களுக்குள் அரக்காகவும், மலர்களுக்குள் தேனாகவும், கனிகளுக்குள் சாறாகவும் நாகங்களின் மதநீரே ஆனது.
நாகமதத்தின் வாசனையை உணர்ந்து மண்மீதிருந்த அத்தனை ஆண்களும் காமம் கொண்டனர். அத்தனை பெண்களும் நாணம் கொண்டனர். யானைகள் துதிக்கை பிணைத்தன. மான்கள் கொம்புகள் பூட்டின. நாரைகள் கழுத்துக்கள் பின்னின. தேனீக்கள் சிறகுகளால் இணைந்தன. புழுக்கள் ஒன்றை ஒன்று உண்டன.
ஆடலின் பயன்கள்
"பிங்கலநிறம் கொண்ட கூந்தலும் கரிய உடலும் கொண்ட  மிருத்யு தேவி தன் புதல்விகளான வியாதி, சோகம், ஜரா, திருஷ்ணை ,குரோதம் ஆகியவர்களை அழைத்துக்கொண்டு விலகி ஓடி ஏழுகடல்களுக்குள் புகுந்துகொண்டாள். "
"பூமிதேவி தன்னை புதுப்பித்துக்கொண்டு புன்னகைபுரிந்தாள்."

வெண்முரசின் புனைவின் நிதர்சனம்

"இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி தன்னைத்தானே எழுதிக்கொள்ள யாரவது ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும். அவர் மூலமாக அது தன்னை எழுதிக்கொள்ளும்.இது இலக்கியத்திற்கு மாத்திரமல்ல ,அறிவியல் ,தொழில், விளையாட்டு ,கலைகள்……என சகல துறைகளுக்கும் பொருந்தும். ஒரு எழுத்தாளனுக்குப் பேனா எப்படியோ அப்படித்தான் பிரபஞ்ச சக்திக்கு மனிதன். கம்பன் – பாரதி- கண்ணதாசன் –புதுமைப்பித்தன் –ஜெயமோகன் வரை இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” எனபர்
வெண்முரசில் திரு.ஜெயமோகன் ஈராயிரமுறை எழுதியது ஒன்றுண்டென்றால் ,அது இந்த புடவியின் மாய நெசவு பற்றி மட்டுமே .அவை தற்செயல்பெருக்கென வெளிப்பட்டுபவை .
இப்பெருவிசும்பு புடவியின் மாய நெசவின் மையத்தில் , சிருஷ்டி,ஸதிதி,சம்ஹாரத்தை நிர்வகிக்கிறது. அவற்றிலிருந்து  பலகோடி அலகுகள் ஊடுபாவாக குறுக்கும் நெடுக்குமாக ஊடுருவி அது சிருஷ்டித்த அனைத்தையும் பிணைக்கிறது. அவற்றின் துயரும் அல்லலும் சற்றும் தனக்கு பொருட்டல்ல என அது காட்டிக்கொண்டே இருப்பதில் உள்ள இரக்கமின்மையை , நாம் முனிவதால் யாதொரு பயணுமில்லை.
ஒருபோதும் எளிய மானுடஉணர்வுகளை அவர்கள்  கடந்துசென்றதில்லை .இவையனைத்துமே அவர்கள் கொண்ட மிகச் சிறிய விழைவு மற்றும் காழ்ப்பின் விதைகளால் விளைந்தவை .
வாழ்வின் நிகர்நிலை பேனும் துலாவின் இருதட்டிலும் நியாயங்கள் எனப் பேசப்படுபவை நிரம்பி வழிகின்றன .ஒரு துரும்பின் எடைபோதும் அதன் தட்டு எப்பக்கம் சாயவதென முடிப்பதற்கு . இந்த விதைகளே அத்துரும்மென ஆகிறது . அந்த விதையை பெருக்கியவர் அந்த தட்டின் முழு எடையையும் வாழ்நாளில் சுமக்கிறார்கள்.
வெண்முரசு ஆக்கங்களில் மூன்று விஷயங்கள் கூர் கொண்டவையாக இருகிறது .
ஒன்று; பாரதம் நிகழ்ந்த காலத்தில் நம்மையும் ஒரு மௌன பாத்திரமாக்கியுள்ளது  . இலக்கிய புனைவின் வழியே புராணபாத்திரங்களின் உணர்வுக்கொந்தளிப்புகளை நம்புரிதலுக்கு விடுவது. அதன் வழியாக கிடைக்கும் திறப்புகள் அளப்பரியவை .
இரண்டு ; பாரதத்தில் நிகழ்வுகள் அனைத்தும் ஊழின் ஆடல்களாகவும் அவற்றில் மானுடர்கள் எளிய கருவிகளாக சொல்லிச்செல்கிறது . ஆனால் நிகழ்காவியமான வெண்முரசு,
ஒவ்வொரு பாத்திரமும் உளவியல் நுனுக்கங்களுடன் கூர்கொண்டு விழைவு மற்றும் வெறுப்பின் வழியில் நின்று செயாலற்றுவதால் ஏற்படுவது  ஊழின் ஆடல் என பிழையில்லாதது நெய்யப்படுகிறது.
மூன்று ;நவீன காலசிந்தனைகள்,விழுமியங்கள், கண்டறிதல்கள் போன்றவைகளை மிக இயல்பாக பொருத்தி அவை அக்காலத்திற்கு மட்டுமல்லாமல் எக்காலத்திற்குமானவை என முப்பரிமாணமாக காட்டுவதில் பெரும் வெற்றியடைந்தது . செவ்விலக்கியம் காலாதீனமல்ல அவை பிராகிருத லோகத்தில் அப்பிராகிருதம் என  ஆச்சர்யமாக நிறுவுகிறது. வெற்றியும் கொள்கிறது.
பௌரானிக மரபோடு இணைத்து பார்த்த ஒவ்வொரு முறையும் வெண்முரசு  என்னை வெளியே உமிழ்ந்த படி இருந்தது . புணைவிற்கான சுதந்திரம் பற்றிய என்வரையிலான பெறுபுத்தியை அடைந்த பிறகே என்னால் அதனுடன் ஒழுகி பயணிக்க முடிந்தது .

வெண்முரசின் ஆடல்
வெண்முரசின் தருணங்கள், புடவி நெசவின் ஊடுபாவாக இயைந்து கண்ணிகாளாக திரண்டுள்ளன அவை தன்னை சுற்றிப் பினைத்துள்ள இணைக் கண்ணிகளின் சாயல்களால் திரிபடைந்து கதாபாத்திரங்களில் மீது ஆரோபித்து நிகழ்வுகளின் தொகையை நோக்கி நகருகின்றன .
வெண்முரசு புணைகள் அற்புத தருணங்களாக பரிணமிப்பவை ,என நான் நினைக்கும் சில திருப்புமுனை நிகழ்வுகள் மிக நுட்பமாக சித்துளி வேலைப்பாடுகள் .
எளிமையாக சரி செய்து விடக்கூடியவையாக தோன்றும் அவை ,அனுகும்தோரும் பேருருக்கொள்பவையாக , சிக்கல் மிகுந்ததாக மாறிக்கொண்டே இருப்பவை.
வியாச பாரதத்திற்கும் அதை அடியொட்டிய வெண்முரசு உள்ள முக்கிய  வித்தியாசத்தில் என்னை கவர்ந்தது , இரண்டும் நீதியை நேரடி சம்பாஷனையாக மற்றும் நிகழ்வாக சொல்லிச் செல்பவைகள் . ஆனால் வியாசபாரதத்தில் சொல்லாதவைகளை வெண்முரசில் புணைவாக பேசப்படுகிறது . அவை இரண்டு பிரிவுகளைக் கொண்டவை .ஒன்று மூலத்தில் இரண்டு வரியாக சொல்லப்பட்டவைகளை பக்கம் பக்கங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டதவை , இரண்டாவது அதில் ஒரு சமகால பார்வை உறுத்தலில்லாமல் இழையோடிய படி இருப்பது .
எரியிதழாய்  அம்பை
சரித்திரம் சிறு தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிப்படுபவை , ஆனால் அவை எளிய அச்சம் குழப்பம் தடுமாற்றங்களினால் கடத்தப்படுபவை . எந்த கணத்திலும் அவை பேசி சரிசெய்து விட முடியும் என்கிற மாயத் தோற்றத்தை கொண்டவை ஆனால் அனுகும் தோரும் வலகி விலகிச் மையம் நோக்கி இழுத்துச் சென்று ஒரு பெரு நிகழ்வாக விளைந்து அதன் அறுவடையை வாழ்நாள் முழுவதும் சுமக்கச் செய்கிறது. அத்தகைய மனிதர்களின் சரித்திரங்களை இதிகாசமாக்கிறது. அத்தைகைய சிறு ஆலகுகளை தனித்தனியே நுட்பமாக விளக்கவந்ததே வெண்முரசு .
சால்வராஜனிடம் உள்ள பறக்கும் விமானத்திற்கு ஆசைபட்டவள் என்கிறது வியாச பாரதம். அமைதியாக மனவாழ்வாழ்வு காணவிரும்பிய பெண்களை கொற்றவையாக மாற்றும் தருணங்களாக இந்தப் பகுதி விரிகிறது. முக்குண மயமானவர்களாக காட்டும் வெண்முரசு அவர்களின் வாழ்விலும்  அவை பிரதிபலிக்கின்றது .
செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. ரஜோ குணம் நிரம்பியவளாக - கொற்றவையாக உருவெடுக்கிறள்
நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. தமோ குணம் நிரம்பியவளாக திருதராஷ்டிரனை பெற்றெடுக்கிறாள்
வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை சத்வ குணம் நிரம்பியவளாக  பாண்டுவை பெற்றெடுக்கிறாள்.
ஊழின் முதல் வாசலை திறக்கிறாள் அம்பை "நான் விரும்புவது உங்களுடனான உரையாடலை மட்டுமே” என்றாள் அம்பை.
"எதுவானாலும் நாம் நம் நகரை அடைந்தபின் பேசலாம் இளவரசி. என்னை மன்னியுங்கள்…நான் உங்களைத் தீண்டவில்லை. இப்படி இது நிகழ்ந்தாக வேண்டுமென்றிருக்கிறது…இதன் காரணங்கள் நாமறியாத இறந்தகாலத்திலும் காரியங்கள் நாம் அறியமுடியாத எதிர்காலத்திலும் உள்ளன….என்னை மன்னியுங்கள். என்று நிகழவிருப்பதை தள்ளி வைக்க முயல்கிறார்
"என் வாழ்க்கையின் காரண காரியங்கள் என்னைச் சார்ந்தவை மட்டுமே” என திடமான குரலில் அம்பை சொன்னாள்.
ஒரு பெண் அப்படிப்பேசி அப்போதுதான் பீஷ்மர் கேட்டார் என்பதனால் அவரது உடல் மெல்லநடுங்கிக் கொண்டே இருந்தது.
அம்பை “நான் விரும்புவதைச்செய்பவளாகவே இதுவரை வளர்ந்திருக்கிறேன். இனிமேலும் அவ்வாறுதான் வாழ்வேன்” என்றாள். “…என் வழி நெருப்பின் வழி என்று முதுநாகினி என்னிடம் சொன்னாள். குன்றாத விஷம் கொண்டவையாக என் சொற்கள் அமையவேண்டுமென என்னை வாழ்த்தினாள். இப்போதுதான் அவற்றின் பொருள் எனக்குப்புரிகிறது. என் பாதையை நானே அனைத்தையும் எரித்து அமைத்துக்கொள்வேன்.” பாதைக்கு படரும் எரி சமயத்தில் அதில் பயணிப்பவரையும் எரிக்கும் என்பது போல நாக்கின் சொல்வலெனும் எரி நாகினியால் தொடப்பட்டது. கொல்லவும் , எரிக்கவும் ஆன அந்த வாழ்த்து , அவளைக் கொன்று , அவள் வாழ்கையை எரிக்கிறது .
“தேவி, நான் முடிவெடுத்தவற்றை அவ்வாறே செய்யக்கூடியவன். இந்த முடிவை எடுத்துவிட்டேன். நீங்கள் என்னுடன் அஸ்தினபுரிக்கு வந்து அரசியாவதை எவராலும் தடுக்கமுடியாது….நீங்களோ உங்களைச் சேர்ந்தவர்களோ என்னைக் கொன்றபின்னர் வேண்டுமென்றால் உங்கள் வழியில் செல்லமுடியும்….என்னை மன்னியுங்கள். நான் பெண்களுடன் அதிகம் பேசுபவனல்ல” என்று சொல்லி பீஷ்மர் எழுந்தார்.
“நான் சால்வமன்னரை விரும்புகிறேன்” என்று உரக்கக் கூவினாள் அம்பை.
 “என் உயிர் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அவர் மூச்சு பட்ட தாழைமலர் என் படுக்கையில் எத்தனையோமுறை இருந்திருக்கிறது. மானசவிவாகப்படி நான் இன்று அவர் மனைவி….இன்னொருவன் மனைவியை நீங்கள் கவர்ந்துசெல்ல நெறிநூல்கள் அனுமதியளிக்கின்றனவா?”
பீஷ்மர் “இளவயதில் காதல்வயப்படாத கன்னியர் எவர்? இளவரசியே, இளங்கன்னி வயதில் ஆண்களைப் பார்க்கும் கண்களே பெண்களுக்கில்லை என்று காவியங்கள் சொல்கின்றன. ஆண்கள் அப்போது அவர்களுக்கு உயிருள்ள ஆடிகள் மட்டுமே. அதில் தங்களைத் தாங்களே நோக்கி சலிப்பில்லாமல் அலங்கரித்துக்கொள்வதையே அவர்கள் காதலென்று சொல்கிறார்கள்….”
பீஷ்மர் குனிந்து அம்பையின் கண்களைப்பார்த்தார். அவரது திகைப்பூட்டும் உயரம் காரணமாக வானில் இருந்து ஓர் இயக்கன் பார்ப்பதுபோல அவள் உணர்ந்தாள். “பெண்கள் கண்வழியாக ஆண்களை அறியமுடியாது. கருப்பை வழியாக மட்டுமே அறியமுடியும். அதுவே இயற்கையின் நெறி…அவனை மறந்துவிடுங்கள்.”
“நான் உங்களிடம் கெஞ்ச வரவில்லை…” என்றாள் அம்பை. “உங்கள் கருணையை நான் கோரவில்லை. நான் என் உரிமையைச் சொல்கிறேன். நான் பெண்ணென்பதனாலேயே அழியாத நாகினிகள் எனக்கு அளித்துள்ள உரிமை அது….” அம்பை குனிந்து சுழித்து மேலெழும் கங்கையின் நீரைக் கையில் அள்ளிக்கொண்டு உரக்கச் சொன்னாள். “கங்கை மீது ஆணையாகச் சொல்கிறேன்….நான் சால்வனின் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பேன். வேறு எக்குழந்தை என் வயிற்றில் பிறந்தாலும் இந்த கங்கை நீரில் அவற்றை மூழ்கடிப்பேன்.” ஒருகாலமும் சரிசெய்ய முடியாத பிழையாக வெளியாகிறது இச்சொல்.
பீஷ்மர் மின்னல்தாக்கிய மரம்போல அதிர்ந்துகொண்டு அப்படியே சுருண்டு அமர்வதை திகைப்புடன் அம்பை பார்த்தாள். நடுங்கும் இரு கைகளாலும் தலையைத் தாங்கிக்கொண்டு “போ…போய்விடு…இனி என் முன் நிற்காதே…” என பீஷ்மர் கூவினார். “யாரங்கே…இந்தப்பெண்ணை இவள் விரும்பியபடி உடனே அனுப்பிவையுங்கள்…இவள் கேட்பதையெல்லாம் கொடுங்கள். உடனே…இப்போதே..” என்று கூச்சலிட்டார்.
அம்பை பீஷ்மரின் முதன்மைச்சீடனிடம் தாழ்ந்த குரலில் “அவருக்கும் கங்கைக்கும் என்ன உறவு?” என்று கேட்டாள். “அவர் கங்கையின் மைந்தர். கங்கை உண்ட ஏழு குழந்தைகளுக்குப்பின் பிறந்த எட்டாமவர்” என்றான் சீடன். அப்பால் கங்கைநீரை நோக்கி நின்றிருந்த பீஷ்மரின் முதுகைத்தான் அவள் பார்த்தாள்.
அவளின் இப்பிழையின் பொருட்டு அவளின் உலகு முகம்காட்டாது , கருணைகாட்டாது விமுகம் கொண்டு முதுகைகாட்டி விலகல் கொள்கின்றன .
அம்பை தன் கையறுநிலை அறிதல்
தலைக்குமேல் நூறு சாளரவிழிகள் திறந்து தன்னை அர்த்தமின்றி வெறித்துநோக்கிய அரண்மனையை நோக்கி அம்பை சிலகணங்கள் அந்தப்படிக்கட்டில் நின்றிருந்தாள். அவளைப் பாதாளத்துக்கு உதிர்த்துவிட்ட விண்ணுலகமாக அது அங்கே நின்றது. தன் உடல் துவண்டு அப்படிகளிலேயே விழுந்துவிடுவோம் என நினைத்தாள். விழுந்துவிடக்கூடாது என்று உறுதியாக எஞ்சிய அவள் இறுதிப் பிரக்ஞை அவளை தூக்கிச் சென்றது.
அம்பை அந்த அரண்மனையை ஏறிட்டுப்பார்த்தாள். அவள் ஓடிவிளையாடிய இடைநாழிகளும் சபைகளும் அரங்குகளும் லதாமண்டபங்களும் அவள் ஒளித்துவைத்த விளையாட்டுப் பொருட்களுடன், அவள் விட்டுச்சென்ற உடைமைகளுடன் இருபது படிகளுக்கு அப்பால், நீண்ட காலத்துக்கு அப்பால், ஏழுபிறப்புகளுக்கு அப்பால் என அன்னியமாக நின்றுகொண்டிருந்தன. திரும்பிச்செல்வது அவ்வளவு அரியதா என்ன? இழந்தவை அவ்வளவு தொலைவா என்ன?

நான் எவருக்கும் உடைமை அல்ல” என்று மூண்டு எழுந்த சினத்துடன் கூவினாள் அம்பை. மிடுக்குடன் எழுந்து “நான் தொண்டுமகள் அல்ல.. இளவரசி” என்றாள்.
“அத்தனைபெண்களும் தொண்டுமகளிர்தான். அதுவே ஷத்ரிய குலநெறியாகும்….எங்கே எவரிடமென்பதை முடிவுசெய்பவை தருணங்கள்” என்றார் குணநாதர். “
“நீ விரும்பினால் என் அந்தப்புரத்தில் வாழமுடியும்…உனக்கு மணிமுடியும் செங்கோலும் மட்டும்தான் இருக்காது” என்றான் சால்வன்.
மிதிபட்ட ராஜநாகம்போல திரும்பி “சீ! கீழ்மகனே, விலகிச்செல். இல்லாவிட்டால் என் கை நகங்களால் உன் குரல்வளையை கிழித்துவிடுவேன்” என்று அம்பை சீறினாள்.
நாகம்போல சீறும் மூச்சுடன் “நான் உன்னையா இத்தனைநாள் விரும்பியிருந்தேன்? பல்லக்கில் பிணம் இருப்பது போல என் நெஞ்சில் நீயா இருந்தாய்?” என்றாள்
“நான் உன்னையா இத்தனைநாள் விரும்பியிருந்தேன்? பல்லக்கில் பிணம் இருப்பது போல என் நெஞ்சில் நீயா இருந்தாய்?” என்றாள்
இளவரசி, ஒருவேளை இது பீஷ்மரின் சோதனையாகக் கூட இருக்கலாம். சால்வர் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர் கடும்சினம்கொண்டு அஸ்தினபுரியின் படைகளுடன் சௌபநாட்டின்மேல் பாயலாம்…அரசவிளையாட்டுகளின் அர்த்தங்கள் சிக்கலானவை இளவரசி. அனைத்தையும் சிந்திக்காமல் அரசன் முடிவெடுக்கமுடியாது” என்றார்.
ஃபால்குனர். “எந்தக்காரணத்தால் உங்களை சால்வர் ஏற்கவில்லையோ அதே காரணம்தான் எங்களுக்கும் உள்ளது…அஸ்தினபுரியின் சினத்தைத் தாங்கும் வல்லமைகொண்ட ஒரு நாடும் இன்றில்லை. பீஷ்மர் அதையறிந்தே உங்களை அனுப்பி வைத்திருக்கிறார். நீங்கள் திரும்பி அவர் காலடியில் சென்று விழுந்தாகவேண்டும் என்பதே அவரது விருப்பம்
ஆடல் நிகழா நிமிடங்களில்
அம்பை தலைகுனிந்தாள். “அனைத்தையும் முளைக்கவைப்பவள் நான்.சேற்று வயலிலும், கருவுற்ற மிருகங்களிலும், தலைவணங்கும் கதிரிலும் உள்ளது என் வாசனை. அதை நீ அறிந்த கணம் நான் உன்னை என் கைகளில் எடுத்துக்கொண்டேன். நீ பீஷ்மன் மேல் காதல் கொண்ட அந்த கணத்தில்.”
அவள் முடிப்பதற்குள்ளேயே தீச்சூடு பட்டவள் போல அம்பை துடித்து விலகி “சீ…” என்றாள். “என்னை சிறுமைப்படுத்துவதற்காகவே சொல்கிறாய்… என்னை என்ன நினைத்தாய்? பரத்தை என்றா?” என்றாள்.
அம்பை உதடுகளை மடித்தபடி பேசாமலிருந்தாள். “பெண்ணின் அகங்காரம் என்பது சரியான ஆணை கண்டடைவதற்காக அவளுடைய தேவதைகள் அளித்த கருவி. அவனையன்றி வேறெவரையும் உன் அகங்காரமெனும் புரவி அமரச்செய்யாது” என்றாள் விருஷ்டி. பெருமூச்சுடன் “ஆம்” என்றாள் அம்பை. “அவன் ஆணுருவம் கொண்ட நீ. நீ பெண் வடிவம் கொண்ட அவன். நெருப்பு நெருப்புடன் இணைவதுபோல நீங்கள் இணையமுடியும்.”
“உண்மை” என்றபின் அம்பை ஒரு கணத்தில் முகம் மலர்ந்து தாவி எழுந்தாள். “உனக்கு நன்றியுடையவளாக இருப்பேன் தேவி…நீ என்னை எனக்குக் காட்டினாய்…” என்றாள். “அது என் படைப்புமுதல்வன் எனக்களித்த விதி” என்றாள் விருஷ்டி. “சென்றுவா மகளே. உன் விதைகளெல்லாம் முளைக்கட்டும்” என்று அவள் நெற்றியில் கைவைத்து ஆசியளித்தாள். வெட்கிச்சிவந்த அம்பை வாழ்க்கையில் முதன்முறையாக தலைகுனிந்தாள் .

இரந்து பெற்ற நரகம்
அவன் அஞ்சியிருப்பான்….அவனிடம் நான் பேசுகிறேன்…” என்றார் பீஷ்மர்.
முற்றிலும் திறந்தவராக அவள் முன் நின்ற பீஷ்மரின் பழகிய அகந்தை சுண்டப்பட்டு கீழே விழும் நாணயம் இறுதிக்கணத்தில் திரும்புவதுபோல நிலைமாறியது. அதை தன் தோல்வி என்றே எடுத்துக்கொண்டார்.
அந்நிலையை எதிர்கொள்ள அவர் தன்னை ராஜதந்திரியாக ஆக்கிக்கொண்டார். “இளவரசி, இப்போது நீங்கள் செய்வதென்ன தெரியுமா? அன்புக்காக வாதிடுகிறீர்கள். அபத்தத்தின் உச்சமென்றால் இதுதான்” என்றார்.
ஒரு கணம் தோற்றுவிட்டதாக நினைத்து தளர்ந்த பீஷ்மர் உடனே அதற்கு எதிரான ஆயுதத்தை கண்டுகொண்டார்
பீஷ்மரின் அகத்துள் மெல்லிய ரகசிய ஊற்றாக உவகை எழுந்தது. என் வாழ்நாளில் நான் சந்திக்கக் கூடுவதிலேயே பெரிய எதிரி இதோ என் முன் தோற்று நிற்கிறாள்
அவர் நினைத்த இடத்தில் அம்பு சென்று தைத்தபோதிலும் அம்பை “நீங்கள் இச்சொற்களை உங்கள் வன்மத்திலிருந்து உருவாக்கிக் கொண்டீர்கள் என எனக்குத்தெரியும்….உலகம் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்” என்றாள்.
தன் கடைசி ஆயுதத்தையும் அவள் விலக்கி விட்டதை உணர்ந்தவர் போல பீஷ்மர் சினம் கொண்டார். நீர் விழுந்த கொதிநெய் என அவரது அகம் பொங்கியபோது அவர் சொல்லவேண்டிய கடைசி வாக்கியம் நாக்கில் வந்து நின்றது. அழுக்கு மீது குடியேறும் மூதேவி என.
“…ஆம், நான் உங்களுக்கான அன்பை உள்ளுக்குள் வைத்திருந்தேன். இப்போது அதை வீசிவிட்டேன். என்னை கிழித்துப்பார்க்கும் ஒரு பெண்ணருகே என்னால் வாழமுடியாது. எனக்குத் தேவையானவள் ஒரு பேதை. நான் கண்ணயர விழைவது ஒரு பஞ்சுமெத்தையில், கூரிய அம்புகளின் நுனியில் அல்ல” சொல்லிமுடித்ததும் அவரது உடல் நடுங்கத் தொடங்கியது. எய்யப்பட்ட அம்புக்குப்பின் அதிரும் நாண் போல.

“சீ, நீயும் ஒரு மனிதனா?” என்று தழலெரியும் தாழ்ந்த ஒலியில் அம்பை சொன்னாள். “இம்மண்ணிலுள்ள மானிடர்களிலேயே கீழ்மையானவன் நீ. உன் முன் இரந்து நின்றதனால் இதுவரை பிறந்தவர்களிலேயே கீழ்மகள் நான். ஆயிரம் கோடி முறை ஊழித்தீ எரிந்தாலும் இக்கணம் இனி மறையாது.”

மாமலரில் இதற்கு விடைபோல ஒன்று
"ஒவ்வாதனவற்றை நம் புழக்கத்திலிருந்து அகற்றிவிடவேண்டும், மேலே தூக்கியோ கீழே அழுத்தியோ. என்றும்  இதுவே நிகழ்கிறது” என்றான். முண்டன் உரக்க நகைத்து “அவ்வாறு அகற்றப்பட்டவற்றால் ஆனது புராணம். அன்றாடப் புழக்கத்திலிருந்து எஞ்சுவது வரலாறு. அவை ஒன்றை ஒன்று நிரப்புபவை, ஒன்றை ஒன்று தழுவிச் சுழல்பவை” என்றான். “தேவயானி வரலாற்றுக்குள்ளும் சர்மிஷ்டை புராணங்களுக்குள்ளும் சென்ற முறை இது.”
இது இந்த இடத்திற்கு மட்டுமல்ல விளங்கிக் கொள்ள முடியாத அனைத்து வித புரிதலின்னைக்கும் , முரணுக்கும் பதில் இங்கிருந்தே எழுகின்றது .


கிருபாநிதி அரிகிருஷ்ணன்




















































































No comments:

Post a Comment

புதுவை இளம் எழுத்தாளர் அரிசங்கர் கௌரவிக்கப்பட்டார்.

 தேதி 27.04.2024 எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான வெண்முரசு நாவல்  மீதான கலந்துரையாடல் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியி...